Tuesday, July 7, 2009

பாடல் பெற்ற ஸ்தலங்கள் - GCE Days - 5

GCE மக்களைப் பற்றிப் பினாத்துவதை சிறிது இடைவெளி விட்டுப் பின்னர் தொடருவேன். அதற்கிடையில் நாம் உலாவிய அந்த மண்ணைக் கொஞ்சம் பார்த்து வருவோமா? இதோ, வந்துட்டோம்ல...

அட்மின் பிளாக்
அடையாளம் - ஒரு புராதன கார் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். அது கல்லூரி முதல்வரின் கார். இன்னும் இருக்கிறதா என்று தெரியவில்லை. அரசாங்க அலுவலகத்தின் அத்தனை விசேஷங்களையும் கொண்டு, உள்ளே நுழைந்ததும் கொட்டாவி வரவழைக்கும், வெகுவாக போர் அடிக்கும் இடம். வருடத்தில் இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே அக்கவுண்ட்ஸ் பார்க்க செல்ல வேண்டியிருக்கும். ஸ்ட்ரைக் மற்றும் இதர கலக நாட்களில் மட்டும் ஜேஜே என்று இருக்கும்.

கோளரங்கம் ( planetarium )
எந்தக் கல்லூரியிலும் இல்லாத அற்புதமாக எங்களிடம் மட்டும் இருந்தது இந்த planetarium. ஆனால், உள்ளே யார் போய் பார்த்தார்கள்! அதைவிட சுவாரஸ்யமான விஷயங்கள் கட்டிடத்துக்கு வெளியே நடந்து கொண்டிருக்கும்.
'பனி விழும் மலர்வனம் .. உன் பார்வை ஒரு வரம்.. ' என்று எதோ ஜோடி கால்களைப் பார்த்து மெதுவாகப் பாடிக் கொண்டிருப்பார்கள். உதடுகள் அசையும், ஓர் வார்த்தையும் வெளி வராது. சிலர் தனியே யாரையோ ஆவலாக எதிர்பார்த்தபடி
' காற்று வாங்கப் போனேன்.. ஒரு கவிதை வாங்கி வந்தேன்.. அதைக் கேட்டு வாங்கிப் போனாள்.. அந்தக் கன்னி என்னவானாள்.. ' என்று பாடிக் கொண்டிருப்பார்கள். அந்த சமயம் வேறு யாருமே அவர்கள் கண்ணில் படமாட்டார்கள். கிட்டே போய்,
'என்னடா மச்சி, என்ன சேதி ?'
'ஹம்.. ஒண்ணுமில்ல. அதுசரி, உன்ன அங்க யாரோ கூப்புடறாங்க, போய்ப் பாரு '

இதற்கு மேல் அங்கே நின்றால் நமக்கு உதைதான் விழும். அந்தக் கட்டிடம் நிறைய மரம்-செதுக்கும் கலைஞர்களையும் உருவாக்கியிருந்த்தது. அங்கிருக்கும் மரங்களின் மேல் பட்டையைப் பார்த்தால் என்ன மரம் என்றே சொல்ல முடியாத அளவுக்கு அத்தனை உளியின் வேலைகள். கோயில் மரத்தில் தொங்கும் பிரார்த்தனை முடிச்சுகள் போல எத்தனையோ பெயர்கள். கல்லூரியின் சமூக கலாச்சாரமே அதிலிருக்கும்.
முதலாம் ஆண்டு எங்களை ஒரு டெமோ காட்ட அங்கு அழைத்துச் சென்ற போது, அங்கே மரத்தடியில், வின்னர் கைப்புள்ள போல் ஒரு சீனியர். 'எதிர்பார்த்த ஆள் ' வராத கடுப்பில் இருந்த அவன், இருந்ததிலேயே நோஞ்சானாக இருந்த என்னைக் கூப்பிட்ட்டான். "ஏண்டா, லெக்சரர் கூப்பிட்டா இங்க வந்துடறதா ? இன்னைக்குத்தான் கடைசி, இனிமேல் 'பிள்ளைங்க' தவிர யாராவது இங்க வந்தீங்க, மவனே தொலைஞ்சீங்க" என்று சொல்லித் தலையில் தட்டி அனுப்பினான். எனக்குத் தெரிந்து, பாவம், அவன் கடைசி வருடம் வரை, அப்படித் தனியாகத்தான் இருந்தான்.
ஒரு தடவை பார்த்த அணி, அடுத்த இரண்டு மாதத்துக்கும் அப்படியே இருந்தது என்று சொல்ல முடியாது. ஆறு மணி மெகா சீரியலில் அண்ணன்- தங்கையாக வருபவர்கள், எட்டு மணி மெகா சீரியலில் பிசினஸ் எதிரிகள் ஆவது போல்தான் இங்கும் மாதா மாதம் அணி மாற்றம் நடைபெற்றபடி இருக்கும். என்ன கொடும சார் இது? ( நம்ம G.K. சொல்றார்.. " பல்லிருக்கிறவன் பட்டாணி தின்றான். நமக்கென்ன வந்தது? சும்மா பாத்து என்ஜாய் பண்ணிட்டுப் போடா " ).

சென்ட்ரல் கேட்
பெயர்க்கு ஏற்ற மாதிரி 'central' கேட். நாங்கள் படித்த காலத்தில் கூரை வேய்ந்த இரண்டு (நாயர்தான்!) டீக்கடைகள். வருத்தப்பட்டு பாடம் படிப்பவர்களுக்கு இளைப்பாறுதல் தரும் இடம். அந்த மாஸ்டர் போடும் அற்புதமான டீ போல வெகு சில இடங்களில்தான் சாப்பிட்டிருக்கிறேன். ஆனால் அவர் கையை மட்டும் பார்க்கக்கூடாது. அப்போதெல்லாம் லேடீஸ் அங்கு வரமாட்டார்கள் என்பதால் பல ஊர் வட்டார வசைகள் பிரவாகமாக ஓடும். அந்த டீக்கடை நாயர், காலேஜைச் சுற்றி நிறைய இடம் வாங்கிப் போட்டதாகக் கேள்விப்பட்டேன். விட்டால் காலேஜையே வாங்கியிருப்பான்.

ஆடிட்டோரியம்
'நானும் ரௌடிதான், ஆனா ஒரு பயலும் மதிக்க மாட்ரானுங்களே' என்றபடி டவுசர் கிழிந்த டார்ச்சர் வகையறாக்கள் பகலில் சுற்றும் இடம் இது. இதில் சில பேருக்கு ஜீப்பில் முண்டியடித்து ஏறி விடும் வாய்ப்பு கிடைத்து planetarium போய்ச்சேர்ந்து விடுவதும் உண்டு. நிறைய புதுக் கவிஞர்களை உருவாக்கும் ' ஸ்பெஷல் சிகரெட்' சுருட்டப் படுவதும் ஆடிட்டோரியம் பின்பகுதியில்தான். வருடத்துக்கு மூன்று கலை நிகழ்ச்சிகள் நடந்தால் பெரிய விஷயம். வெளியே 'கோயிந்து' போலிருக்கும் என்னைப் போன்றவர்கள் எல்லாம் உள்ளே போனால் ரகளைதான். பாட்டுக் கச்சேரி மேடையில் நடக்கும்போது, கீழே எங்களுடைய டேன்ஸ் கச்சேரி பட்டையைக் கிளப்பும். மேடையிலேயே இங்கிலிஷ் நடனம் ஆடக்கூடிய 'திறமை' வாய்ந்தவன் P.சுரேஷ். அதென்னவோ எப்பொழுதும் இளமாறன் சைசில் உள்ளவர்களிடம் இரவல் வாங்கிய பேண்டில்தான் சுழன்று சுழன்று டான்ஸ் ஆடுவான். பிறகுதான் தெரிந்தது, டான்ஸ் முடிந்ததும், பேன்ட் பெரும்பாலும் கிழிந்து விடும் என்ற ரகசியம். ஒரு முறை அஷோக் தனி ஆளாக பெரிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்து அசத்தி இருந்தான். என்னவோ அதற்கப்புறம் மவுன சாமியாராகிவிட்டான். அந்த மவுன சாமி இங்கு Portland பக்கத்தில் ஆசிரமம் அமைத்திருப்பதாகக் கேள்வி.

டாக்டர் மஞ்சமுத்து கிளினிக்
ஹாஸ்டலுக்கு உள்ளேயே இப்படி ஒரு இடம் இருந்ததே ரொம்பப் பேருக்குத் தெரியாது. இந்த இலவச க்ளினிக்குக்கு மாதத்திற்கு மூன்று பேஷன்ட் வந்தாலே அபூர்வம். ஒருமுறை வயிற்று வலிக்கும், அடுத்த முறை ஜூரத்துக்கும் போனேன். இரண்டு தடவையும் அதே மாத்திரையையே கொடுத்தார். இருந்தாலும் கைராசிக்காரர் என்பதால் உடம்பு சரியாகிவிட்டது. இங்கு அமெரிக்காவில் மட்டும் என்ன வாழ்கிறதாம்?

தாபா
மெஸ்ஸில் சாப்பிட்டு நாக்கு செத்தவர்களுக்கும், பணம் கட்டாததால் மெஸ்ஸிலிருந்து விரட்டப் பட்டவர்களுக்கும் தாபாதான் புகலிடம். இங்கே ஐந்து ரூபாயில் சாப்பிட்ட முட்டைப் பொரியலும், மீல் மேக்கரும், கொடுத்த சுவையும் திருப்தியும் வேறு எங்கும் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால், அடிக்கடி சாப்பிட்டால் மேலே குறிப்பிட்ட கிளினிக் தான் செல்ல வேண்டும்.

லைப்ரரி
பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்து விட்டுப் போனபோது அவர்கள் கொண்டு வந்த புத்தகங்களையும் இந்த லைப்ரரியில்தான் விட்டு விட்டுப் போனார்கள் போலிருக்கிறது. சோவியத் யூனியன் மிர் பப்ளிஷர்ஸ் புத்தகங்கள் கொஞ்சம் கிடைக்கும். அது தவிர, உள்ளே நல்ல காற்று வரும். லைப்ரரியன்தான் முதன் முதல் குருவிக்கூடு ஹேர் பாஷன் அறிமுகம் செய்தவர். அவர், அசிஸ்டன்ட், படிக்க வந்தவர்கள், எல்லோரும் பாரபட்சமின்றி தூங்குவார்கள். இப்போது ஏ.சி. வசதி செய்துவிட்டார்களாம். சுகம். அப்படியே கொஞ்சம் புத்தகங்களையும் வாங்கிப் போட்டா, பசங்க படிப்பாங்கல்ல ?

கருப்பூர் கேட்
மாலை வெயில் மங்கியதும், சில ஆட்கள் வருவதும் போவதுமாக இருப்பார்கள். சிலசமயம், பஞ்சரான உடம்பும், ஆஸ்பத்திரி கட்டுமாக ஓரிருவர் கருப்பூரிலிருந்து திரும்பி வருவர் ( சண்டையின்னு வந்தா சட்ட கிழியறது சகஜந்தானே ) . மேலும் விபரமாக எழுதினால் ஆட்டோ வரும் என்ற பயத்தில், இதை இப்படியே விட்டு விடுகிறேன். இப்பொழுதெல்லாம் ஆட்டோவில் உருட்டுக் கட்டைக்கு பதிலாக தமிழ் பட டிவீடீக்களைக் கொண்டு வருகிறார்களாமே ( லூசுப் பையன் சொல்றான் ). நானெல்லாம் வார இறுதி மதியங்களில் மோர் சாப்பிட்ட மயக்கத்தில், வழி தவறி இந்தப் பக்கம் வருவதோடு சரி.

பிள்ளையார் கோயில்
இந்த மிகச் சிறிய கோயில் மிகவும் ரம்மியமான ஒரு லொக்கேஷனில் அமைக்கப்பட்டிருக்கிறது. வெட்டவெளியில் வீசும் காற்றில் கோயில் மணி தானாக லேசாக ஆடி, அடித்துக்கொள்ளும். வழக்கம்போல பரீட்சை சமயங்களில்தான் எல்லோருக்கும் நினைவு வரும். எனக்குத் தெரிந்து, செந்தில் நாயகம்தான் ரெகுலர் விசிட்டர். நானும் அவ்வப்போது உடன் சென்று மணியடித்து விட்டு வருவேன்.

லேடீஸ் ஹாஸ்டல்
இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நாங்கள் வெளியே போனதும் அடுத்த ஆண்டே வந்து விட்டது. ( நல்லா இருப்பிங்களா ? உக்காந்து யோசிச்சான்களோ ... )

முன் பதிவு: சேலத்து சித்தர்கள் - GCE days part 4.

No comments:

Post a Comment