Saturday, May 16, 2009

புத்தகம் பையிலே.... புத்தியோ பாட்டிலே - GCE days - part 2

GCE Salem Admin Block

GCE Salem Hostel Days


நான் சுற்றிய நண்பர்கள் மற்றும் என்னுடைய ரூம் மேட்ஸ் பற்றி கொஞ்சம். ஒரு சின்ன பெட்டி, தலையணை மற்றும் போர்வையுடன், எனக்குத் தந்த ரூமுக்குள் நுழைந்த போது ஏற்கனவே வந்து சேர்ந்த நான்கு பேர் திருவென்று விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். பாண்டிசேரிக்காரர்கள் புவனேஸ்வரன், முனாவர், இமாச்சல் தேவிராம், மணிப்பூர் சரத் சந்த். இதில் நான்தான் பூச்சி மாதிரி ரொம்ப சின்னதாக இருந்தேன்.
புவனேஸ்வரன் ஏற்கனவே என்னுடைய ஸ்கூலில் கிளாஸ்மேட். நல்ல படிப்பாளி, அறிவாளி. அதைவிட நல்ல முன்கோபி. இப்போது புதுவை ப்ளானிங் துறையில் வேலை. முன்பே சொன்னது போல, 'சகல' கலைகளையும் சேலம் கற்றுத் தந்தது.
முனாவர், எங்களோட போட்டி ஸ்கூல். ரொம்ப ப்ரில்லியன்ட். எஞ்சினியரிங் மேத்ஸ் எல்லாம், சும்மா ஒரு லுக் விட்டுட்டு பிரமாதமா போடுவான். நல்ல செஸ் பிளேயர். ரஷ்யப் பத்திரிகையில் வரும் செஸ் புதிர்களை சால்வ் செய்வது இவன் பொழுது போக்கு. கோபமே வராத ஜென்டில்மேன். இப்போது சுவிஸ் நாட்டுல ஆல்ப்ஸ் மலை அடிவாரத்துல குடும்பம். அடிக்கடி ஈமெயில் போக்குவரத்து உண்டு.
தேவிராம் இமாச்சல் பிரதேசத்தில் மண்டி என்ற ஊரிலிருந்து வந்தவன். மிக மிக மிக டைட் ஆக ட்ரஸ் போடும் ஆள். எங்கே இவன் பேன்ட் கிழிந்து விடுமோ என்று நாங்கள் பயப்படாத நாளே இல்லை. இவனது ஒரே ஆசை, எப்படியாவது நடிகை ஸ்ரீதேவிக்கு ஒரு முத்தம் கொடுப்பது, முடிந்தால் கல்யாணம் செய்து கொள்வது என்பதுதான். அதற்காகவே படிப்பதற்காக வந்தானாம். வாரம் ஒருமுறை இண்லேண்டு லெட்டரில் ஸ்ரீதேவிக்கு லவ் லெட்டர் எழுதி, அதை எனக்குப் படித்து, பொருள் சொல்லி பாடாய் படுத்துவான். அதன் பிறகு ஸ்ரீதேவியைச் சந்தித்தானா என்று தெரியவில்லை. இப்போது வேண்டுமானால் மறுபடியும் முயற்சி செய்து பாக்கலாம்.
சரத் சந்த் எங்களுக்கு பாடி கார்ட் மாதிரி. அவன் கூட சென்றால் சீனியர்கள் எங்களைக் கண்டுகொள்ள மாட்டார்கள். தன்னுடைய தம்பியை எம். எல்.ஏ. ஆக்கப் போவதாகச் சொல்லிக்கொண்டிருப்பான்.

எங்கள் பக்கத்து ரூமில், சுஜித், குமரன், மதியழகன், அண்ணாமலை ஆகியோர் இருந்தனர். அப்போது கல்லூரியிலேயே நன்றாக இங்கிலீஷ் பேசத் தெரிந்தவர்களில் சுஜித் முக்கியமான் ஆள். சுஜித்தைப் பார்த்து, 'ஒன்றானவன்.... உருவில் இரண்டானவன்' என்று பாட்டுப் பாடி, குமரனிடம் அடி வாங்கியது இன்னும் நினைவில் இருக்கிறது. சுஜித் இப்போ ஒரு பிசினஸ்மேன். கொடிகாத்த குமரன் திருப்பூருக்கு பெருமை சேர்த்தவர் என்றால், குடியாத்தம் குமரன் கருப்பூருக்கு பெருமை சேர்த்தவர். 'எங்கெல்லாம் தேடுவதோ.. எழில் மேவும் குமரா நின் அருள் வேண்டி தினமும் நான்...... ' என்று பாடினால், புளங்காகிதம் அடைந்து சென்ட்ரல் கேட் கடையில் டீ வாங்கித் தருவான். ஆனால் இந்த ட்ரிக் நிரம்ப நாள் ஓடவில்லை. அதே ரூமில் இருந்த மதியழகனை, 'சரோஜா தேவி ' என்ற அடைமொழியாலே ரொம்ப நாள் அழைத்தார்கள்.

எங்கள் ரூமுக்கு frequent visitor வெங்கி ( விருத்தாசலம் வெங்கடேசன் ). நல்ல புட்பால் பிளேயர், பாடகன், ரசிகன், நல்ல நண்பன். என்னுடைய ரூமில் அடிக்கடி பாட்டுக் கச்சேரி நடக்கும். இவன் பந்தாட்டத்துக்கு நிறைய ரசிகர்கள் என்றால், பாட்டுக்கு நிறைய ரசிகைகள். 'பாவை என் பதம் காண நாணமா... உந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா...... ' எனக் காத்துக்கிடந்தவர்களை நான் அறிவேன். விடுமுறையில் ஊருக்குப் போகும்போது சக பயணி. டவுனுக்குப் போய் நிறைய எம் .ஜி.ஆர் படங்களாகப் பார்த்திருக்கிறோம். 'ஆயிரத்தில் ஒருவன்' பார்த்து விட்டு, நல்ல மழையில் குதிரை வண்டியில் நாலு-ரோடு வந்தது நினைவு இருக்கிறதா?
கடைசியாக என்னுடைய ஸ்கூல் கிளாஸ்மேட் கல்யாணத்தில் பார்த்தது ( வெங்கியின் முறைப் பெண், இப்போது என் கிளாஸ்மேட்டின் மனைவி ) .

இன்னும் வருவார்கள்......
முன் பதிவு: Baski's lounge: எண்ணமே சுமைகளாய்.. இதயமே பாரமாய் - GCE நாட்கள்

Thursday, May 14, 2009

இவ்வருடப் பயணப் பதிவுகள் - 2009

இந்த வருடம் எந்க கம்பெனியில் எல்லாரையும் கட்டாய விடுப்பு எடுக்கச் சொன்னதால் சீசன் கெட்ட சீசன்ல ஊருக்குப் போக வேண்டியதாச்சு. கிளம்பி துபாய் வழியா போனோம்.
முதல் ஸ்டாப் துபாய்:
துபாய்ல மூணு நாள் வசந்த பவன் ஹோடெல்ல ஸ்டே. அப்படியே இந்தியாவுல இருக்க பீலிங்! தக்காளி... அங்கங்க எச்சி துப்பி வச்சிருக்கானுக! நடக்கறப்ப பாத்து நடக்காட்டி கால் வழியே கிருமி வந்துரும். இந்தியனுங்கள விட அங்க பாகிஸ்தான் காரனுங்க ரொம்ப துப்பரானுங்க. கிட்டப் போன அப்படி ஒரு கப்பு. சிங்கப்பூர்'லயும் இதே மாதிரி நம்ம ஜனங்க இருக்க எடம் எல்லாம் கவர்மென்ட் கண்டுக்காம இருக்குது. எனக்குத் தெரிஞ்சி இங்க நியூ ஜெர்சில குஜராத்திங்க கடைக்கு முன்னாடி சாக்கட ஓடுது!.நீங்கள்ளாம் திருந்தவேமாட்டீங்களாடா?
எங்க சொந்தக்காரத தம்பி ஒன்னு துபாய சுத்திக் காட்டுச்சு. பத்தடிக்கு பத்தடி ரூம்ல எட்டுப் பேரு. அங்கேயே சமையல். காலைல இருந்து நைட் வரைக்கும் வேலை. அங்கிருந்து ரொம்ப தூரத்துல வேல பாக்கிறவங்க வாரத்துக்கு ஒரு தடவ துபாய் சிட்டி வந்து வேண்டிய பொருள வாங்கிட்டு பஸ் ஏற (வடிவேலு அண்ணே, துபாய்ல நெசமாலுமே பஸ் ஸ்டாண்டு இருக்கு, துபாய் போற பஸ் அங்க நிக்குது!) நீண்ட லைன்ல நிக்கறாங்க. கண்ணெல்லாம் பஞ்சடஞ்சு பாக்கவே பாவமா இருக்கு. எப்படியும் வட்டிக்கு வாங்கி, காட்ட, வீட்ட வித்து புரோக்கர் மூலமா வந்திருப்பாங்க. சம்பளமும் அவ்வளவு சொல்லிக்கிற மாதிரி இல்ல. இப்படி கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறத ஊர்ல இருக்கறவங்க சென்ட் அடிச்சி செலவழிக்கறாங்க. என்னத்தச் சொல்றது? இன்னொரு பக்கம் பளபளன்னு வெள்ளக்காரங்க துபாய். அது நமக்கு வாணாம்.

இவ்வருடப் பயணப் பதிவுகள் - பாண்டிச்சேரி

pondicherry GCE Salem
பாண்டிச்சேரி பதிவுகள்: வேலை விஷயமா வெளி நாடு போறவங்களுக்கு அவங்க ஊரப்பத்தியும் ஜனங்களப் பத்தியும் ஒரு frozen image இருக்கும். கொஞ்சம் வருஷம் கழிச்சுத் திரும்பி வந்து பாக்குறப்ப, அங்க ஏற்பட்ட தவிர்க்க முடியாத மாற்றமெல்லாம் மனசுக்குக் கொஞ்சம் கஷ்டத்தையோ ஏமாற்றத்தையோ தர்றது சகஜமாக இருக்குது. எனக்கும் ஒவ்வொரு தடவை பாண்டிச்சேரி வர்றப்பல்லாம் அதே பீலிங்க்ஸ் தான். என்னவோ எங்க ஊர் தன்னோட பழைய வசீகரத்தை ரொம்பவே இழந்து விட்டதாகவே தோணுது.

ஊரெங்கும் தொடர்ச்சியா இருந்த கலர் கலரான கொன்றை மரங்கள், ரோட்டோரம் அடர்ந்து கிடந்த தென்னை மரமெல்லாம் எங்க போச்சி? எல்லாம் கண்ணாடி வெச்ச ஷோரூமா மாறிடுத்து. கசகசன்னு ஒரே ஜன நெரிசல்.
இதாவது பரவால்ல. நான் படிச்ச ஸ்கூல் எதிர்ல மகாகவி பாரதியார் குயில் பாட்டு, கண்ணன் பாட்டெல்லாம் பாடிய அற்புதமான, ரம்யமான ஒரு தோப்பு, கருவடிக்குப்பம் சித்தானந்த சுவாமி கோயில ஒட்டி இருந்தது. உள்ள போனா, நேரம் போறதே தெரியாது. எப்பவும் வத்தாத நீரோடை, நிறைய மாமரம், கொய்யா மரம். இப்படி. மகா கவிக்கும், பாரதிதாசனும் லாகிரி வஸ்துக்கள் சாப்பிட்டு அதி அற்புதமான காவியங்கள் பாடியிருக்காங்க. அந்த இடத்தைப் பாத்தா எனக்கே பாட்டு வரும். அந்த இடத்த பாதுகாக்காம பிளாட் போட்டு வித்துட்டானுங்க. இதவிட மோசம் பாருங்க. அங்க அரவிந்தர் வீதில இருந்த பெரிய புக் ஸ்டால மூடிட்டு ஒயின் ஷாப் தொறந்துட்டானுங்க.
முன்னாடி தமிழ்நாடும் பாண்டிச்சேரியும் எல்லாத்துலயும் ஏட்டிக்குப் போட்டியா இருக்கும். அதனால் ஊர் நல்லா இருந்துச்சி. இப்பல்லாம் தமிழ்நாட்ல ஜனங்களுக்கு கவர்மென்ட் எட்டு அடி குழி வெட்டினா, பாண்டிச்சேரி கவர்மென்ட் எங்க ஜனங்களுக்குப் பதினாறு அடி குழி வெட்டுது. அங்க ஒரு ரூபாய்க்கு அரிசி தந்தா இங்க இலவசமாத் தரானுங்கோ. வர வர எல்லாருக்கும் வேல செய்யறதே மறந்து போயிடிச்சி. அது சரி.... எம்.ஆர். ராதா சொன்னாப்ல, நாமளே பங்களாக்குள்ள உக்காந்துக்கிட்டு பாலிடிக்ஸ் பேசக்கூடாது.

எங்க வீட்டு மரத்தில் இருந்து இளநீர், நல்ல வாசனைய்டன் வகை வகையா பலா, வாழைப்பழங்கள், நல்ல சாப்பாடு. இன்னும் கொஞ்சம் வெயிட் போட்டாச்சு. போன முறை சன் டீ.வீ. பாத்தா சீரியல் எல்லாம் இன்னும் ஓடிக்கிட்டு இருக்கு. ஜனங்களும் ஆர்வம் குறையாம, உக்காந்து பாத்துக்கிட்டு இருக்காங்க. யாரோ சாபம் விட்டாப் போல இருக்குது. :(

ஊர்ல யாரப் பாத்தாலும்,
'என்னங்க அமெரிக்காவுல இருந்து இந்தியருங்களத் தொரத்தராங்கலாமே ' அப்படின்னு, சந்தோஷத்த கஷ்டப்பட்டு மறைச்சிக்கிட்டு கேள்வி.
'அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லீங்களே' அப்படீன்னு சொன்னதும், உடனே கேட்டவங்க முகம் ஏமாத்தத்துல வாடிப்போகுது.
அப்படியும் விடாம, 'இல்லிங்களே தினத் தந்தியில விலாவாரியாப் போட்டிருக்காங்களே. நீங்க பாக்கலியா? உங்க ஏரியாவுல இல்ல போலிருக்கு.'
அதற்கு நான், 'தினத் தந்தி எல்லாம் படிக்கிறதா விட்டு அறுவது வருஷம் ஆகுதுங்க. அது சரி, உங்க பெரிய புள்ள இப்ப என்ன செய்றாரு ? '
' இங்க கவர்மென்ட் போஸ்டிங்குக்கு எட்டு வருஷமா வெய்ட் பண்றான். நீங்களே சொல்லுங்க... கஷ்டப்பட்டு அஞ்சி வருஷம் பீ.காம் படிச்சிட்டு ப்ரைவேட் வேலைக்கா போறது? விவசாயத்தைப் பாக்கலாம்னா, ஒரு பயலும் லேபர் வேலைக்கு வர மாட்றானுங்க. சரீ, நீங்க இருக்கறது ப்ரைவேட்டா, கவர்மேன்ட்டா? '
நான், 'அமெரிக்காவுல போலீஸ், மிலிடரி, போஸ்ட் ஆபீஸ் மாதிரி வேலையத் தவிர்த்து எல்லாம் ப்ரைவேட் தான். '
இதக் கேட்டதும் அவருக்கு ரொம்ப சந்தோசம். 'அதானப் பாத்தேன். யாருக்கு என்ன வேல தர்றதுன்னு வெள்ளக்காரனுக்குத் தெரியாதா? நாமப் போயி அவங்கள நிர்வாகம் பண்ண முடியுமா சொல்லுங்க? '
அடேங்கப்பா! அதுல உட்ட சந்தோஷத்த இதுல புடிச்சிட்டாரு!! ஆமா, நாங்கல்லாம் உங்கள என்ன பண்ணோம்? இங்க எல்லாம் நித்திய கண்டம்தான். வேல போனா, கவர்மென்ட் நிவாரண உதவி, ஒரு ரூவா அரிசி, இதெல்லாம் குடுக்காது.

மத்தபடி ஊர்ல கொஞ்சம் பழைய விஷயம் அப்படியே இருக்குது. துடிப்பான மரியாதையான, சின்னப் பசங்க, கள் மணக்கும் கிராமம், கோயில்லையும் ஒயின் ஷாப்லயும் இருக்கும் நெரிசல், குடிச்சிட்டு ரோட்ல விழுந்து கிடக்கற வெளியூர் ஜனங்க. பொதுவா பாண்டிச்சேரி, ரோட்ல போதையில விழுந்து கிடக்கிறதெல்லாம் வெளியூர் ஆளுங்கன்னு சொன்னா நம்புங்க.
அரசு சுற்றுலாத்துறை இப்போ டெய்லி பஸ் டூர் ஏற்பாடு செஞ்சிருக்கு. சீந்துவார் இல்லாம இருந்த ஊஸுடு ஏரி, இப்போ பிரபலமான டூர் ஸ்தலம். பிரபஞ்சன் தன்னோட மானுடம் வெல்லும், வானம் வசப்படும் நாவலுங்கள்ள இந்த ஏரியப் பத்தி எழுதி இருக்கார். அப்புறம் இந்த சுண்ணாம்பாறு இப்படி டூரிஸ்ட் ஸ்பாட் ஆகா மாறி இருக்கும்னு எதிர் பாக்கவே இல்ல. வில்லியனுர்ல ( என்னோட ஊர் !) பெரிய கோயிலும் இப்போ நிறைய ஜனம். இருக்கிற பிரச்னைல ஜனங்கள்ளாம், முதல்ல சிவன் கோயிலுக்குப் போயிட்டு, அப்புறம் மாதா கோயில்ல ஒரு மெழுகு வத்தி ஏத்திட்டு, அப்படியே போய் மசூதியில ஒரு தடவ ஒதிட்டுப் போறாங்க. ஒரு தடவப் போய்ப் பாருங்க.

இவ்வருடப் பயணப் பதிவுகள் - திருநெல்வேலி







அடுத்த
ஸ்டாப் : திருநெல்வேலி - இது என் மனைவியின் ஊர். .. இருந்தாலும் எனக்கு ரொம்பப் பிடிச்ச ஊர். கேரளத்துக்குப் பக்கத்துல இருப்பதாலோ என்னவோ ஊர் படு சுத்தம். ஜனங்களும் ரொம்ப மரியாதைப் பட்டவங்களா இருக்காங்க. வெட்டுக் குத்துன்னு பேப்பர்ல பாக்கறதெல்லாம் தனிப்பட்டவங்களுக்கு இடையிலதான். மத்த ஊர் போக்கிரிங்க மாதிரி பொது மக்களுக்கு இடைஞ்சல் தர்றது இல்ல.
இந்த ஜில்லாவுலதான் தமிழ்க் கவிதையப் புரட்டிப் போட்ட பாரதியார், உரைநடை பிதாமகர்கள் புதுமைப்பித்தன், .ரா., நவீன சிந்தனையாளர் சுந்தர ராமசாமி, கரிசல் மண்ணின் தவப்புதல்வர் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் உள்ளிட்டவர்கள் பிறந்து வளர்ந்தார்கள்.
நெல்லையச்சுத்தி நிறைய பாக்க வேண்டிய இடங்கள். திருச்செந்தூர், அப்புறம் போற வழியில நவ திருப்பதின்னு ஆழ்வார்கள் அவதரிச்சு வாழ்ந்த ஊர்கள். அந்த ஒண்ணரை மணி நேரப் பயணம் ரொம்ப அற்புதமா இருக்கும். நெல்லை டவுனில் இருக்கும் நெல்லையப்பர் கோயில் ஒரு சிற்றூர் அளவுக்கு இருக்குது. அனால் உள்ளே அவ்வளவா மக்கள் இல்லை. கோயிலின் ஒரு வாசலுக்கு வெளியே திருநெல்வேலியின் பிரசித்திப் பெற்ற இருட்டுக்கடை அல்வா கிடைக்கும். மாலை எட்டு மணிக்குள் போனால் கிடைக்கும்.

இந்த முறை பாணதீர்த்தம் போனோம். அம்பாசமுத்திரம் போய்ட்டு அங்கிருந்து பாபநாசம் போகணும். பாபநாசம் முண்டந்துறைக்காட்டு உள்ளே போய் மலை ஏறனும். பிளாட் போடாத காடு. ரசீது கொடுக்காம டிக்கெட் பணம் வாங்கிக்கறாங்க. அத மறந்துட்டு மேல போனா, அற்புதமான இடம். ரெண்டு பெரிய அருவி. படகுல ஏறி இருவது நிமிஷத்துல அருவிக்குப் போகலாம். அங்க ஒரு நாடு வயதினர், 'இங்க குளிச்சா எந்த வியாதியும் அண்டாது' ன்னு இருமிக்கிட்டே சொன்னார். பாணதீர்த்ததுலதான் .வே.சு. அய்யர் தன் மகளைக்காப்பாத்த குதிச்சி, ரெண்டு பெரும் இறந்து போனதா படிச்சிருகேன். அந்த அருவிய ஒட்டி பிரமாதமான காரையார் அணை. யாராவது E.B. யில ஆளு தெரிஞ்சா, இன்னும் நல்லா சுத்திப் பாக்கலாம். எனக்கு யாரையும் தெரியாததால்
அவ்வளவா போட்டோ எடுக்கக் கூட விடல.
இன்னொரு முக்கியமான விஷயம்.. சாப்பாடு எதுவும் மலை மேல கிடைக்காது.
கீழ பாபனாசத்துலையே வாங்கிட்டுப் போயிடனும். இது தெரியாம நாங்க மேல போய், இருந்த நொறுக்குத்தீனிய வச்சி அட்ஜஸ்ட் பண்ணிட்டு, கீழ வந்ததும், கண்ணுல பட்ட முதல் ஓட்டல்ல நுழைஞ்சிட்டோம்.
'அடகென்று சொல்லி அமுதத்தை இட்டாள்
கடகம் அணிந்த கையாள்'
அப்படின்னு அவ்வையார் பாடிய மாதிரி அப்படி ஒரு பசி. தனக்கு சாப்பாடு போட்டவளின் முகத்தைக் கூட பாக்க நேரமில்லாம, அந்தக் கையைப் பார்த்ததும் உடனே சாப்பிடத் தொடங்கி விட்டாளாம். பாவம் அவங்களுக்கு அப்படி ஒரு பசி.

Monday, May 4, 2009

எண்ணமே சுமைகளாய்.. இதயமே பாரமாய் - GCE நாட்கள்

Salem GCE days - Part 1


ரெண்டு நாளுக்கு முன்னால மதியம் ரொம்ப போரடிச்சிப் போய் நாமளும் ப்லாக பண்ணலாம்னு ஆரம்பிச்சேன். என்ன எழுதறதுன்னு யோசிச்சப்ப திடீர்னு பழைய claasmate சுந்தர் கிட்டருந்து ஒரு ஈமெயில். என்னடான்னு பாத்தா எங்க சேலம் காலேஜ் மக்கள் லிஸ்ட் சேக்க ஆரம்பிச்சிருக்கார். ஒவ்வொருத்தர் முகமா கண்ணு முன்னால வந்து போகுது. சுந்தர், ரொம்ப நன்றிப்பா . அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பர்களே.. பொக்கிஷமாக நெஞ்சில் சுமந்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே.
ஷன்முகேச்வரன் : - திட்டினாலும் சிரித்துக்கொண்டே திட்டியவன். நம்பவே முடியவில்லை இவனது மறைவுச் செய்தி. Prof.கங்காதரின் ஆதர்ச மாணவன். KRP க்கே பிடித்த அதிசயப் பிறவி.
ஹாஸ்டலில் எங்கள் பலருக்கு ஆசிரியராக இருந்தவன். என்னைப்போல மர மண்டைகளுக்கும் பொறுமையாய் சொல்லித் தந்த ஆசான். எங்கள் தகுதி பாராமல் பாசமாய் பழகினாய்.
நேரங்காலம் பார்க்காமல் யார் அழைத்தாலும் சென்று விடுவாயே ஷன்முகேசா, அழைத்தது காலன் என்று தெரிந்துமா சென்றாய் ?

லெஸ்லி, வசந்தன் & co : தமிழ்வாணன் , சாண்டில்யன் படித்துக்கொண்டிருந்த எங்களை நல்ல எழுத்தாளர்களையும் நல்ல தமிழை சுவாசிக்கக் கற்றுத்தந்தவர்கள். . கொஞ்சம் பொறுமை (நமக்கு!) இருந்தால் பழக மிகவும் இனிமையானவர்கள். நீங்கள் எங்கிருந்தாலும் சகலசவுபாக்கியங்களையும் பெற்று வாழுங்கள்.

ஜாலி கோஷ்டி: பாட்டு (?) பாடிக்கொண்டே சமையல் (?) செய்யும் நிமலேந்திரன், வகை வகையாக விசில் அடிக்கும், சரளமாக ஜோக் அடிக்கும் ரவிராஜ், கொசுவையே திருப்பிக் கடிக்கும் விஜயராமச்சந்திரன், என்று நினைவில் இருந்து நீங்காத எத்தனைப்பேர். ஞாயிறு காலை தூர்தர்ஷன் ஹிந்தி ராமாயணத்தை on-the-fly மொழி பெயர்க்கும் இளமாறனுக்கு எத்தனை ரசிகர்கள். அனுமனும் ராவணனும் பேசும் டயலாக் சென்சார் இல்லாமல் இங்கு போட முடியாது.
சுந்தர், சீ.ஜே, அஷோக், கண்ணன், B.J முரளி கிருஷ்ணன் என்று இன்னொரு கோஷ்டி என்று நினைக்கிறேன். ஆடிட்டோரியத்தில் செய்த கலாட்டாக்கள் நினைவில் உள்ளதா BJ? அசராமல் பீலா விடும் ரவிகாந்த் இப்போது என்ன செய்கிறாய்? சிரிக்காமல் ஜோக் அடிக்கும் மனோகர், உனது டெக்ஸ் டைல்ஸ் பிசினெஸ் நலமா?

படிப்பு கோஷ்டி: லோகநாதன், முநாவர், கண்ணன் என்று படித்து முன்னே போனவர்கள் இப்போது எப்படி இருக்கிறீர்கள்?

எப்போதும் ஆல்-பாஸ் செய்யும் மகளிர் அணி நலமாகத்தானே இருக்கறீங்க ? மாலதிக்குக் காலேஜ் போகும் மகள் (அதுவும் tachometer பறக்க விடுதா?) இருப்பது ஆச்சர்யமா இருக்குது. நமக்கெல்லாம் அவ்வளவா வயசு ஆயிடுச்சி? என்னோட பொண்ணு இப்போதான் கிண்டர் கார்டன் போகப்போவுது. காலேஜ் வரை யோசிச்சா இப்பவே கண்ணைக் கட்டுதே !

என்னை இப்போ பாத்தாக்க யாரும் கண்டு பிடிக்க முடியாது. நிறைய வெயிட் போட்டுட்டேன், தலை வெளியேயும் காலி ஆயிடுச்சி. பக்கத்து தெருக்காரன் இளங்கோ இப்போதும் தினமும் டென்னிஸ் தவறுவதே இல்லை. அப்பப்போ அவங்கூட தாக சாந்தி செய்யறபோது எல்லார் பத்தியும் பேச்சு வரும். அடுத்த முறை ஊருக்கு வரும்போது முடிஞ்சவரை ஒரு சந்திப்பு வெச்சுக்கணும்.
அப்புறம் மறுபடியும் பாக்கலாம்.
.......................
மக்கள் லிஸ்ட் வளருது. ஒவ்வொருத்தரும் இத்தன பேருங்கள ஞாபகம் வச்சிக்கிறது ஆச்சர்யமாவே இல்ல. எல்லாரும் அப்படி பழகி இருக்காங்க.
..............
ஆதி இளங்கோ : காலேஜில எனக்கு ரொம்ப தோஸ்த். வன்முறைக் கவிஞன். அதாவது, எதிர்ல ஆளு வந்தா, பிடிச்சி மடக்கி, மிரட்டி ஒரு கவிதையும் தத்துவமும் சொல்லாமல் விடாத தத்துவக் கவி. ( திண்டுக்கல் சாரதி படத்தில் வரும் காக்கை கவிராயர் போல ).
கப்பல்ல உலகம் பூரா சுத்துனதா செவி வழி செய்தி. இப்ப எங்கப்பா இருக்கே?

ஞானசேகரன்: சாந்த சொரூபி. தானே பாடலை இயற்றி, இசை அமைத்து, அதைத் தானே கேட்கும் கலைஞன். வேலை தேடி அலையும்போது ஒருமுறை கடலூரில் பார்த்தேன். நல்ல வாசனையான மீன் குழம்பு சாப்பாடு கிடைத்தது. அதற்காகவாவது மறுபடியும் சந்திக்க வேண்டும்.

சுஜாதா: ஒருமுறை டீ.சி. மோட்டார் பற்றி கட்டுரை எழுதி, அதை பேரா. தனகோடி வகுப்பறையில் படித்துக்காட்டியது நினைவு இருக்கிறதா? அந்தக் காப்பி கோடி பெரும்.

சத்தியமூர்த்தி : மறக்கக் கூடிய முகமா? நமக்குள்ள ஒரு சின்ன கணக்கு இருக்குது. அப்புறம் தனியா பேசுவோம்.

புவனேஸ்வரன்: விவேகானந்தர் நம்ம காலேஜ்ல சேந்து, வெளிய போனப்ப ப்ரேமானந்தாவா போனதப் பாத்துருக்கீங்களா ? புவனேஸ்வரன் எங்க ஊரு விவேகானந்தர். பள்ளியிலும் என்னோட கிளாஸ் மேட். அவரைத் திருத்துன பெரும சேலத்தையே சேரும்.

... இன்னும் வருவார்கள். ..