Sunday, June 21, 2009

சேலத்து சித்தர்கள் -- GCE days part 4

GCE Salem Siddhar

GCE Salem Hostel Days .. cont



ஒரு வாரமாக சித்தர்கள் தொடர்பான சில மின்னஞ்சல்களும் குறுஞ்செய்திகளும் எனக்கு வந்து கொண்டிருந்தன. படிக்கிற காலத்தில் கடுமையான வறுமையின் காரணமாக விரக்தி மேலிட்டு சித்தர் பாடல்கள் படித்திருக்கிறேன். மத்திய வயதைக் கடந்த பின்னர் மறுபடியும் படித்துப் பார்த்தால் அவற்றின் perspective வேறு மாதிரி இருக்கிறது. நான் வளர்ந்து திரிந்த பாண்டிச்சேரியும் சித்தர்கள் உலவிய மண்தான். ஜிப்மரிலிருந்து மூன்று கி.மீ. தூரத்தில் இரும்பை என்னும் கிராமத்தில் மகா காளீஸ்வரர் கோயில் உள்ளது. இங்குதான் கடுவெளி சித்தர் இருந்தார். அவருடைய கீழ்கண்ட பாடலை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
நந்தவனத்தில் ஓர் ஆண்டி. அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டு வந்தான் ஒரு தோண்டி. அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி.

பாமரர்களோடு நெருங்கிப் பழகிக் கொண்டு, கட்டமைப்புக்கு அடங்காத, எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத social scientist -களை சித்தர் என்று சொல்வார்கள். புதுச்சேரியில் வாழ்ந்தபோது, மகாகவி பாரதியும் ஒரு சித்தர் என்றே அறியப்பட்டார். என்னைப்போன்ற பகுத்தறிவுக் குஞ்சுகளுக்கு ( பறவைக் குஞ்சு என்பது போலப் பொருள் கொள்க ) முன்னோடி சிவவாக்கியர். இவர் பாடல்கள் இன்றைய தேதிக்கும் புரட்சிதான்.

இப்போது தலைப்புக்குள்...

சேலம் அ.பொ.கல்லூரியில் காமெடி சித்தர்களுக்கும் கலக்கல் சித்தர்களுக்கும் பஞ்சமே இருந்ததில்லை. இதில் பெயர்களை மட்டும் விடுகதை போல் உங்கள் யூகத்துக்கு விட்டு விடுகிறேன்.

ஒரிஜினல் குகை சித்தர் : சேலம் நாகா-மினி வழியாகப் போகும்போதெல்லாம் ( படம் பார்க்க அல்ல ) இந்த சித்தரைப் பார்த்து, ' என் இந்த ஆள் இங்கேயே இருக்கான்' என்று யோசிப்பேன். அவரது வாசமே அங்கே அருகில் தான் என்பது பிறகுதான் தெரிந்தது. பெரும்பாலும் இங்கிலீஷ் பேசும் கோடீஸ்வர சாமியார்களின் புத்தகங்கள் வாசிப்பார். கலா ரசிகர்.

குடும்ப சித்தர் - (குதம்பை சித்தரின் மரூவு ) 'கருமமே' கண்ணாயினார். மற்ற எவர் அருமையும் பாரார். இவர் திருப்பாதங்கள் படாத சேலம் முட்டுச் சந்துகளும் மூவன்னா சந்துகளும் மிகக் குறைவு. தற்சமயம் சாமி ஒடுங்கி, பெரிய பொறுப்பான பதவியில் இருப்பதாகக் கேள்வி.

அழுக்கணி சித்தர் - பிறரின் phermone ஹார்மோன்களுக்கு அதிகம் வேலை வைத்தவர். எந்த மொழியிலும் இவருக்குப் பிடிக்காத வார்த்தை 'சோப்பு'. மற்றவருக்காக இரங்கும் தயாள குணம் மிக்கவர். எலக்ட்ரான் அலைகள் போல் அங்கிங்கெனாதபடி எங்கும் எப்போதும் இன்று வரை அமைதியற்று அலைந்து கொண்டிருப்பவர்.

கைலாசநாதர் : பெரும்பாலும் கால்கள் தரையில் பாவாது ஒரு அடி மேலேயே நடப்பவர். மற்றபடி யாருக்கும் தீங்கிழைக்காதவர். என்னிடம் மட்டும் இவருக்கு ஏதோ வாஞ்சை. தற்சமயம் கீழிறங்கி பூமியில் கால் பதித்து நடப்பதாகக் கேள்வி.

புலிப்பாண்டி சித்தர் : சதா அங்குமிங்கும் அலைந்து கொண்டு, எதிர்பட்டவர்களிடம் பந்தா செய்வதா, அல்லது பயப்படுவதா என்று குழம்பி, எக்ஸ்பிரஸ் வேகத்தில் பேசுவார். செல்வச் செழிப்பான வீட்டில் இருந்து வந்தாலும், இந்தப் புண்ணியவான் தயவால் சென்ட்ரல் கேட்டில் கணேஷ் பீடி விலை ஏறியது. பில்டர் சிகரெட்டின் இறுதி வரை இழுத்து இன்பம் கண்டவர்.

பாம்பாட்டிச் சித்தர்: இவர் திறந்த சோடா பாட்டில்களுக்குக் ( குடிப்பதற்கு அல்ல) கணக்கே இல்லை. கழகக் கட்சித் தலைவர் ஆவதற்குரிய எல்லா சிறப்புத் தகுதிகளும் நிரம்பியவர். அரசியலுக்குச் சென்று கும்மி அடிப்பார் என்று நான் நம்பிய சிலரில் இவரும் ஒருவர்.

அககறைசித்தர் : ஹாஸ்டலில் எல்லோரும் நலமாக இருக்கிறார்களா என்று தினமும் இரண்டு வேலை ரவுண்ட்ஸ் வருவார். காசு வாங்காமல் 'வார்டன்' வேலை பார்த்தவர், நான்கு வருடங்களும்! .

புத்தக சித்தர்கள் : ஒருவர் குணத்தில் ரத்தினம், கணக்கில் புலி. மற்றவர், பேசினால் வசந்தம் வீசும். இருவர் கையிலும் எப்போதும் புத்தகம் இருக்கும். புத்தகம் இல்லாத போது, குளியலறை டவல் இருக்கும் ( அனேகமாக, குளிப்பதற்கு என்று நினைக்கிறேன் ) .


கீழே உள்ள வரிகள் யாரைக் குறிப்பிடுகின்றன என்று தெரிகிறதா? தெரிந்தால் எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

ஒரிஜினல் சித்தர் பாடல்கள் :

1. தாவாரம் இல்லை, தனக்கொரு வீடில்லை
தேவாரம் ஏதுக்கடி குதம்பாய் தேவாரம் ஏதுக்கடி

2. மாங்காய்ப் பால் உண்டு மலை மேல் இருப்பார்க்கு
தேங்காய்ப் பால் ஏதுக்கடி குதம்பாய் தேங்காய்ப் பால் ஏதுக்கடி

3. செத்தாரைப் போலத் திரியும் மெய்ஞானிக்கு
கைத்தாளம் எதுக்கடி - குதம்பாய் கைத்தாளம் எதுக்கடி

4. பட்டணம் சுற்றிப் பகலே திரிவோர்க்கு
முட்டாக்கு எதுக்கடி - குதம்பாய் முட்டாக்கு எதுக்கடி.

உல்டா வரிகள்:
5. 'பாட்டில்' கலந்திடவே அங்கே ஒரு
பத்தினிப் பெண் வேணும் - எங்கள்
'கூட்டுக் களி'யினிலே - கவிதைகள்
கொண்டு தரவேணும்.

6. எங்கிருந்தோ வந்தான் 'இடைப்பாடி' நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்.



=========
முன்பதிவு : நித்தமும் நாடகம் .. நினைவெல்லாம் காவியம் - GCE days part 3..

Wednesday, June 17, 2009

போன மாசம் பார்த்த மொக்கைகள்



என்னுடைய சகதர்மிணி தமிழ் திரையில் வரும் படங்கள் எல்லாவற்றையும் பார்த்து விடுவார்கள். சுட்டது, சுடாதது, தேய்ந்தது, காய்ந்தது எதவும் விதி விலக்கு இல்லை. அத்தோடு நில்லாமல் என்னையும் அவ்வப்போது சில படங்களைப் பார்க்க வைத்து விடுவார்கள். இப்படித்தான் போன மாதம் பார்த்த படங்களில் இரண்டைப் பற்றிப் பதிய வேண்டியுள்ளது.
முதலில் பார்த்தது கமலின் தசாவதாரம். ( பேரக் கேட்டா சும்மா அதிருதில்ல ?) . பத்து வேஷத்தில் கமல் தானும் கஷ்டப் பட்டு, பார்ப்பவர்களையும் 'என்ன கொடும சார் இது ' என்று கேட்க வைத்துள்ளார். ஆமாம், உணமைலேயே என்ன ஆயிற்று கமலுக்கு? வழக்கமாக இங்கிலிஷ் படங்களை உல்டா பண்ணிக் கொண்டு, இது வரைக்கும் நல்லாதான போயிக்கிட்டு இருந்தாரு... இப்ப ஏன் இப்படி இந்த கொல வெறி? சிவாஜி நவராத்திரியில ஒன்பது வேஷம் போட்டா, நாங்களும் பத்து வேஷம் போடுவோம்ல ? உலக நாயகன் , ஆஸ்கார் நாயகன், அப்படீன்னு சொல்லி சொல்லி உசுப்பேத்தியே இவரை இப்படி பஞ்சர் ஆக்கியிருக்கிறார்கள். இனிமேல் உலக்கை நாயகன், சாரி, உலக நாயகன், கே.எஸ். ரவிக்குமார் போன்றவர்களிடம் இருந்து ஒரு ஐம்பது மைல் தள்ளி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் டைரக்டர் பேரரசு போன்றவர்களிடம் சான்ஸ் கேட்க வேண்டிய நிலை வரும்.

தசாவதாரம் பார்த்ததில் வந்த காய்ச்சல் சரியானவுடன் நான் சற்று ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டும். ஆனால் கெட்ட நேரம் என்று இருக்கிறது பாருங்கள், அது தன் பவரைக் காட்டி விட்டது. ஒரு நாள், விஜயகாந்த் நடித்த 'மரியாதை' படத்தைப் பார்க்கும் நிலைமை வந்து விட்டது. சில வருடங்களாகவே 'கேப்டன்' தமிழக மக்களை உண்டு இல்லை என்று பண்ணிக் கொண்டு வருகிறார். ' கஜேந்திரா , வல்லரசு, தருமபுரி ' என்று, ' எவ்ளோ அடிச்சாலும் தாங்கறாங்க, இவங்க ரொம்ப நல்லவங்க ' அப்படி என்று பிய்த்து உதறுகிறார். எல்லாவற்றுக்கும் உச்சக் கட்டமாக ' மரியாதை '. ஒரே சிட்டிங்கில் பத்து மணி நேரம் மெகா சீரியல் பார்க்க முடியுமா? அதை விட அதிகம் தம் கட்டினால்தான் இந்தப் படத்தைப் பார்க்க முடியும். கேப்டன் சாப்பாட்டுக்குத் தொட்டுக் கொள்ள சாப்பாட்டைத்தான் பயன்படுத்துவார் போலிருக்கிறது. தாடைக்குக் கீழே மினி சைஸ் தொப்பை. வயிற்றுக்கு மேலேயும் கீழேயும் தலா ஒரு தொப்பை. நல்ல வேளை இதில் அவர் பட்டதாரி! காலேஜ் ஸ்டூடண்டா வந்தாலும் தமிழர் இதயம் இதையும் தாங்கும். இவர் சைசுக்குப் பொருத்தமா மீரா ஜாஸ்மின். இவர்கள் இருவரும் பொன்னிறக் கூந்தல் அழகிகள் பின்னணியில் ஆஸ்திரேலியாவில் அதிர்ந்து ஆடுகிறார்கள். பார்ப்பவர்களும் அதிர்கிறார்கள். இதற்கான பாடல் ' இன்பமே.. உந்தன் பேர் பெண்மையோ ' என்ற பாடலின் ரீ-மிக்ஸ். அந்தக் காலத்தில் தார் பூசி இந்தியை அழித்தப் பாவம், உதித் நாராயணனை வடக்கிலிருந்து இங்கு அனுப்பி, தமிழைக் கொல்லுகிறார்கள்.
மொத்தத்தில் எல்லோரும் சேர்ந்து, நல்லா.. பேதியை, ஐ மீன், பீதியைக் கிளப்புகிறார்கள். என்ன கொடும சார் இது! மறுபடியும் உடம்பு சரியில்லாமல் போய் என் குலசாமி டீ. ஆருக்கு. முடி கொடுக்கிறதாக வேண்டிக் கொண்டிருக்கிறேன்.
இந்திய ராணுவத்திற்கு ஒரு நல்ல யோசனை. டைரக்டர் பேரரசு படங்கள், தனுஷ், சிம்பு, விஜயகாந்த் படங்கள், தசாவதாரம், குசேலன், போன்ற படங்களின் டீவீடீ க்களை ஆயிரக்கணக்கில் பாகிஸ்தான் எல்லை, காஸ்மீர் எல்லை, பங்களாதேஷ் எல்லை, இங்க்கெல்லாம் கார்பெட் பாம் மாதிரி போட்டு விட வேண்டும். இதை எடுத்துப் பார்ப்பவர்கள் சும்மா கைப்புள்ள கணக்காக இந்தப் பக்கமே தலை வைத்துப் படுக்க மாட்டார்கள்.

Wednesday, June 3, 2009

நித்தமும் நாடகம் .. நினைவெல்லாம் காவியம் - GCE days part 3

GCE Salem Hostel BBB

GCE Salem Hostel Days 2


ஹாஸ்டல் தினங்கள் தொடர்கிறது...
என்னுடைய க்ளாஸ்மேட் பத்ரி ஹாஸ்டல் எதிரிலிருந்த பனைமரத்தடிக்கு அழைத்துச் சென்ற புண்ணியவான். பெரும்பாலான மெக்கானிகல் மக்களுக்கு அது ஒரு தீர்த்த யாத்திரை ஸ்தலம். நயம் சரக்கு. அந்த சுர் என்று ஏறும் அனுபவம் வேறு எதிலும் வரவில்லை. அந்தப் பரமானந்தத்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்த மகான் பத்ரி வாழ்க! ஒவ்வொரு வெள்ளிக்கிழைமையும் மாலை குரூப் குரூப்-ஆக பாட்டும் சிரிப்புமாக மக்கள் மெஸ் பக்கம் வந்தால், பனைமரத்தடியான் நல்ல கல்லா கட்டியிருக்கிறார் என்று அர்த்தம். இன்னும் சில கோஷ்டி (BJM, DS ), காலையில் உற்சாகப் பானம்
சாப்பிட்டு விட்டு வகுப்பறை போன கதைஎல்லாம் உண்டு.

நிலையில்லாமல் ஓடுவதும்
நினைவில்லாமல் பாடுவதும்
பகைவர் போலே பேசுவதும்
பருவம் செய்யும் கதையல்லவா

இப்போது பலர் திருமணம், குழந்தைகள் என்று ஆன பின் எல்லாவற்றையும் விட்டு விட்டதாகக் கேள்வி. திருந்துங்க, ஆனா ரொம்ப திருந்தாதீங்க.

என்னுடைய மூன்றாம் ஆண்டு ரூம் மேட் சேகர் அந்தக் காலத்தில் ஒரு அப்பாவி. அநியாயத்துக்கு சாந்த சொரூபி, பயந்த சுபாவம். உருவத்துக்கும் உள்ளத்துக்கும் சம்பந்தமே இல்லாத வேலூர் வள்ளலார். அவனை மிரட்டும் ஒல்லியான நபர்கள் ரவிசங்கர் , நமச்சிவாயம் ஆகியோரைப் பார்த்தால் நமக்கே பாவமாக இருக்கும். ரெண்டு பேருக்கும் மம்முட்டியின் கணேஷ் பிராண்ட் தான் பிரியம். இதில் நமச்சிவாயம் இலந்தைப் பழம் பாடலையே மேலும் பக்திப் பரவசமாக மாற்றிப் பாடியவர். நமசிவாயம் எங்கள் ரூமுக்குள் வரும்போதெல்லாம், ஏதோ தசாவதாரம் படம் பார்க்கக் கூப்பிட்டது போல சேகரின் முகம் வெளிறிப் போகும். ரவிசங்கர் அப்போதே படிப்பாளி.
ஒரு முறை வேலை நிமித்தம் வேலூர் சென்றபோது சேகர் என்னை வந்துப் பார்த்தான். உடனே எனக்கு அந்த ஹோட்டலில் பயங்கர மரியாதை. சேகர், வேலூரில் மிகப் பெரிய கோடிச்வரர் பெண்ணைக் கல்யாணம் செய்திருந்த விஷயம் அப்போதான் தெரிந்தது. அவர்கள் தொழுவத்தில் இருபதுக்கும் மேற்பட்ட கார்கள். பிறகு நான் பெரியார் பஸ்ல ஊருக்கு வந்து சேர்ந்தேன்.

விடுதி கேம்பஸில் பலர் பல விதங்களில் வசீகரமானவர்களாக இருந்தனர். யாரையும் காயப்படுத்தாத ஜி.கே. கண்ணன், முக்கியமான கிரிக்கெட் பிளேயர். நாடகங்களில் சிவன் வேஷம், வினு சக்கரவர்த்திக்கு டூப் போட ஏற்ற ஆகிருதி. ஹாஸ்டல் வாழ்க்கையை நன்றாக அனுபவித்து வாழ்ந்தவன். சினிமாவில் சேருவான் என்று நினைத்தேன், இப்போது சென்னையில் பிசினஸ் செய்வதாகக் கேள்வி. பலாப்பழத்து மேல் ஈக்கள் போல் ரவிராஜைச் சுற்றி எப்போதும் நண்பர்கள். சரமாரியான டைமிங் ஜோக்குகள். நெற்றியில் ஜோக் எழுதி ஓட்டியதைப் போல பார்த்ததுமே சிரிப்பு வரும். மிகவும் சுவாரஸ்யமான ஆள். இவனும் சினிமா துறைக்கு செல்வான் என்று நினைத்திருந்தேன். இப்போது ஓஹையோவில் வாசம். ரவிராஜ் குரூப்-ல இருந்த இன்னொரு ஆள் : " இந்த இது இதுன்றதுக்கு அந்த இது சரி வராது. வேற இத வெச்சி இதுன்னம். போன தடவ இது பண்ணாத லைட்டா இதுன்னா கூட போறும்".. இத இதுன்றது யார் தெரிகிறதா? என்னோட neighbor all-round sportsman நம்ம இளங்கோ தான். ennudaiya க்ளாசில் என்னுடைய பெஞ்ச்-மேட். என்னைப் பலமுறை மேடத்திடம் மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்க வைத்ததற்கு நன்றி உடையவன் ஆவேன்.

மேற்கண்ட அலப்பறைக் கூட்டத்தில் வேறு முக்கியமான ஆள் நம்முடைய இம்சை அரசன், 'வைத்தி' விஜயராமச் சந்திரன். இந்த வைத்தியின் க்ளோன் பற்றி ஒரு பெரிய புத்தகமே போடலாம். எந்தக் கூட்டத்திலும் புகுந்து சேதாரம் இல்லாமல் வெளியே வரக்கூடிய ஆள். நாரதர் வேஷமா? உடனே புக பண்ணலாம். பேசி ஜெயிக்க முடியாது. எனக்கும் ரொம்ப தோஸ்த். கொஞ்சம் முயற்சி செய்திருந்தால் வடிவேலுக்குப் போட்டியாக வந்திருக்கலாம். எல்லா வஸ்துக்களையும் தயங்காமல் பரிசோதனை செய்து பார்த்தவன். இப்படிப் பட்ட மகான் சென்னைக்குக் குடி பெயர்ந்ததால் ஸ்வாமி மலை தப்பித்தது. விஜயராமனின் சமீபத்திய புகைப்படம் பார்த்தேன். அதே கண்கள்!


இன்னும் வருவார்கள்.....