Wednesday, July 22, 2009

கண்ணதாசனின் ரசவாதம் - 2

நாம் படிக்கும் பருவத்தில் இதைப் பார்த்திருப்போம். சிலர் வாழ்க்கையில் நன்றாக மேலே வருவர் என்றும், சிலர் தேற மாட்டர்கள் என்றும் பரவலாக அபிப்பிராயம் இருக்கும். வருடங்கள் வேகமாக உருண்டோடிய பின்னர் திரும்பிப் பார்த்தால், அனுமானங்கள் பெரும்பாலும் தவறாகிப் போயிருக்கும். என்னுடைய ஊரில், மீசை அரும்பிய பருவத்தில் ஒன்றாக விளையாடியவன். ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக் கூடாது. நன்று தேர்ந்த ரசனையும் கூர்மையான அறிவும் ஆளுமையும் உடையவன்.
"நம்ம மேற்படி ஆளு ஒன்னு மந்திரியா வருவான், இல்லாட்டி பிரான்ஸ் போய் செட்டில் ஆவான் பாத்துக்கோயேன்" , என்பது அவனைப் பற்றிப் பொதுவான பேச்சாக இருக்கும். நான் மற்றும் இன்னொரு நண்பன் பொறியியல் கல்லூரிக்கும், அவன் அங்கே கலைக் கல்லூரியிலும் படிக்கப் போனோம். இடையில் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. அவன் படிப்பையும் முடிக்கவில்லை, ஆளும் உருக் குலைந்து இருந்தான். ஆனால் எந்தக் கெட்ட சகவாசமும் இல்லை. பல நாள் வேளை கிடைக்காமல் அலைந்து விட்டு தன் அண்ணன் உதவியில் சின்ன வெற்றிலைக் கடை வைத்து உட்கார்ந்து விட்டான். கிண்டலும் புன்னகையும் மட்டும் மாறவில்லை. கடையில் அக்கௌன்ட் வைத்திருப்பவர்கள் மேலும் கடன் கேட்டால், " 'பற்று' மிகுந்து வரப் பார்க்கின்றேன்.... என் அண்ணனால் பட்டு வரும் இம்சைகள் பேசி முடிவதில்லை... " என்று பாரதியின் கண்ணன் பாட்டின் உல்ட்டா வேறெ.

சரி, விஷயத்துக்கு வருவோம். கம்ப ராமாயணம் படித்தவர்கள் மிகவும் சிலாகிக்கும் தத்துவ வரிகள். இராமனைக் காட்டுக்கு அனுப்பும் செய்தி கேட்டு இலக்குவன் அதீதக் கோபம் கொண்டபோது, அவனுக்கு இராமன் கூறியது இது.
"நதியின் பிழையன்று நறும்புலன் இன்மை, அற்றே
பதியின் பிழையன்று, பயந்து நமைப்புரந்தாள்
மதியின் பிழையன்று, மகன் பிழையன்று, மைந்த,
விதியின் பிழை நீ இதற்கு என்கொல் வெகுண்டதென்றான்"

-- ஆற்றில் நல்ல தண்ணீர் இல்லாமல் போனால் அது அந்த ஆற்றின் குற்றம் இல்லை. ( அரசியல்வாதியின் குற்றமா என்று கேட்காதீர்கள். அது போன மாசம், இது இந்த மாசம் ). நம்முடைய தந்தையின் பிழையோ நம்மை வளர்த்த தாயின் அறிவின் பிழையும் அன்று.
அந்த்தத் தாயின் மகன் பரதனின் பிழையும் அன்று.
இது விதியின் பிழை. இதற்கு ஏன் பெரும் கோபம் கொள்கிறாய்.

இதை, கம்பனின் தீராக் காதலனான நம் கவிஞர் கண்ணதாசன் அற்புதமாக உள் வாங்கி நமக்குக் கொடுத்திருப்பார். 'தியாகம்' படத்தில் வரும்
"நதி வெள்ளம் காய்ந்து விட்டால் நதி செய்த குற்றமில்லை,
விதி செய்த குற்றமின்றி வேறு யாரம்மா"
என்ற பாடலைக் கேட்டதுண்டா ?


மன வலிமை மிக்கத் துணைவி:
தன் கணவன் வலிமையானவனாக இருக்க வேண்டும் என்று மனைவி நினைப்பது போல், தன் மனைவிக்கும் மன உறுதி வேண்டும் என்றும் கணவனும் நினைப்பான். அப்படி ஒரு மன உறுதி வாய்ந்த ஒரு பெண்ணை சங்கப் பாடல் படம் பிடித்துக் காட்டுவதைப் பாருங்கள்.

பின்னணி:
சோழ மன்னன் கரிகாலனின் மகள் ஆதிமந்தி; ஆடல் பாடலில் வல்லவள். சேரநாட்டரசனான ஆட்டனத்தி இவளுடைய கணவன். இருவரும் காவிரியின் புதுப்புனல் விழாவில் நீராடி மகிழ்ந்தபோது, நீர்ப்பெருக்கு ஆட்டனத்தியை இழுத்துச் சென்றுவிடுகிறது. அழுது சிவந்த கண்களோடு கணவனைத் தேடுகிறாள் ஆதிமந்தி. அவளுடைய நிலையைக் கண்டு காவிரியே ஆட்டனத்தியைக் கடற்கரையில் சேர்க்கிறது. காவிரி கடலில் கலக்கும் இடத்தில் ஒரு பெண்ணால் காப்பாற்றப்பட்ட கணவனைக் காண்கிறாள் ஆதிமந்தி.

பாடல் :

மள்ளர் குழீஇய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டுங் காணேன் மாண்டக் கோனை
யானுமோ ராடுகள மகளே யென்கைக்
கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த
பீடுகெழு குரிசிலுமோ ராடுகள மகனே.

-- குறுந்தொகை

பாடல் விளக்கம்:
" அவனை எங்கும் காணவில்லை, வீர விளையாட்டு விளையாடும் மல்லர்கள் மத்தியிலும் காணவில்லை
அழகாக, ஜோடியாக, நெருக்கமாக ஆடும் நடனப் பெண்கள் மத்தியிலும் அவனைக் காணவில்லை
ஏன் காதலனை எங்கு தேடியும் மறைந்த என் மன்னனைக் காணவில்லையே.
நானும் ஆடல் மகள்தான். மெலியும், என் கையில் அணிந்த சங்கு வளையல்கள், வருத்தத்தால் நெகிழ்ந்து விழுகின்றனவே.
அவனை எங்கேனும் கண்டால் சொல்லுங்கள். அவனும் ஒரு ஆடல் மன்னன்தான் "

இப்போது இது கண்ணதாசன் கைவண்ணத்தில் அற்புதமான திரைப் பாடலாக உருமாறுவதைப் பாருங்கள். சங்க இலக்கியத்தை நாமெல்லோரும் ரசிக்கக் கொடுத்த அந்தக் கவிஞன்வாழ்க.
படம்: மகாதேவி. தன் கணவன் எந்த நிலையில் இருக்கிறான் என்று தெரிந்து கொள்ள இயலாமல் பத்மினி உருகிப் பாடுகிறார்.

கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்
பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்
சென்ற இடம் காணேன்.. சிந்தை வாடலானேன்
சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்

நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே
கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே

தொடர்புடையது: கண்ணதாசனின் ரசவாதம்-1

No comments:

Post a Comment