Friday, July 31, 2009

என் ஜன்னலின் வெளியே -- 1

என் அபிமான எழுத்தாளர்களுள் ஒருவரான சுஜாதா சொல்வார் "காஷ்மிரில் வசித்துக் கொண்டு மாம்பலத்தில் மாமி இட்டிலி சுடுவது பற்றிக் கதை எழுதுவார்கள். அங்கு ஜன்னலைத் திறந்தால் ஆயிரம் கதைகள் கிடைக்கும்.." என்று.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் பாஸ்டன் நகரில் காலடி எடுத்து வைத்தபோது, இதுதான் நான் 'வாக்கப்படப் போற பூமி' என்று நினைக்கவில்லை. கலிபோர்னியாவில் எட்டாண்டுகள் வசித்துவிட்டு நான் தற்சமயம் வசிக்குமிடம் டெக்சஸ் மாகாணத்துத் தலைநகர் ஆஸ்டின். இடையில் நடந்த கதையெல்லாம் சுவாரசியம் இல்லாததால் இங்கே சொல்லப்போவதில்லை. இந்தியாவின் வெகு ஜன மீடியாவில் வராத, எனது ஜன்னலுக்கு வெளியே நடக்கும் சமூக, அரசியல் விஷயங்களை இங்கு என் பார்வையில் பட்டவாறு கொடுக்கிறேன். தமிழகம் அளவுக்கு இங்கு அரசியல் சமூக நிகழ்வுகள் அத்தனை கேளிக்கையோ திருப்பங்களோ அற்றது. இருந்தாலும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்று நீங்கள் தெரிந்து கொள்ளவே இந்தப்பதிவு.


யு. எஸ். ஏவின் பிரதான இரண்டு அரசியல் கட்சிகள் ரிபப்ளிகன், டெமாக்ரட் கட்சிகள் என்பது சென்னை பள்ளிசிருவர்களுக்கும் தெரியும். அதில்லாமல், சோஷலிச கட்சி, அரசியலமைப்பு கட்சி, பச்சைக் கட்சி, போன்ற நிறைய உதிரிக் கட்சிகளும் உண்டு. இவையெல்லாம் சொற்ப அளவில் ஒட்டு வாங்கித் தோற்பவை. இரண்டு பெரிய கட்சிகளுக்கும் சிறிதளவில்தான் வித்தியாசம். ஒரு கட்சி கொண்டு வரும் திட்டங்களை அடுத்த கட்சி கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கும் வகையில் நம்ம ஊர் தி.மு.க. அ.தி.மு.க. போல ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். முந்தைய ஆட்சி உழவர் சந்தை, கல்வி, மருத்துவ உதவித் திட்டங்கள் கொண்டு வந்ததா? தூக்கி உடைப்பில் போடு, சாராயக் கடை திறந்ததா? ?? ஹ்ம்ம்.... ?? சரி இருக்கட்டும் விடு.. இது போல.

ஜார்ஜ் புஷ் போன்றவர்கள் அடங்கிய ரிப்பப்ளிக்கன் கட்சி, கிழவர்கள் நிரம்பிய அவ்வளவாக படிப்பறிவில்லாதவர்கள் விரும்பும், தேசிய உணர்வுகளைத் தூண்டி குளிர்காயும் அதி தீவிர வலது சாரிக் கட்சி. டெமாக்ரடிக் கட்சியினர் தம்மை முற்போக்கானவர்கள் என்று அடிக்கடி சொல்லிகொண்டாலும், முக்கியமான விஷயங்களில் ஜகா வாங்கிக் கொண்டும், பல்டி அடித்துக் கொண்டும், சமரசம் செய்து கொண்டும், கேனைத்தனமாக லேசான வலதுசாரித் தனத்துடன் இருப்பவர்கள். இந்த வகையில் ரிபப்ளிகன் கட்சியை பா.ஜ.க என்றும், டெமாக்ரட் கட்சியை, சோனியா காங்கிரஸ் என்றும் சொல்லலாம். பொதுவில் இரண்டு கட்சிக்காரர்களும் கார்ப்பரேட் கோடீஸ்வரர்களின் அடிவருடிகள். ஜனாதிபதி முதல், மாவட்ட ஜட்ஜ்கள், போலீஸ் தலைவர் வரை, பொதுமக்களே ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுப்பார்கள். நான்கு வருடத்துக்கு ஒருமுறை, நிறைய செலவு செய்து ஜட்ஜ் தேர்தலில் நிற்கும் ஜட்ஜின் நீதி வழங்கல் எப்படி இருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன்.

இப்போது நானிருக்கும் ஊர் ஆஸ்டின், டெக்சாசின் தலைநகர் . டெக்சசின் பொது குணாதிசயத்துக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத ஊர் இந்த ஆஸ்டின். இப்போதெல்லாம் விக்கிப்பீடியாவின் உதவியுடன் எந்த இடத்தைப் பற்றியும் அல்லது விஷயத்தைப் பற்றியும் உடனே தெரிந்து கொள்ள முடிவதால், பூகோள, வரலாற்று விபரங்களுக்குச் செல்லப் போவதில்லை.
யு. எஸ். ஏவின் எந்த மாவட்டத்துக்கும் இல்லாத சிறப்பு டெக்சசுக்கு உண்டு. இங்கிருந்து போய் ஜனாதிபதி ஆனவர்கள்தான் பேரழிவான யுத்தங்களை ஆரம்பித்துள்ளார்கள். ரிச்சர்ட் நிக்சன் வியட்நாம் போர், சீனியர் புஷ் முதல் ஈராக் யுத்தம், ஜூனியர் புஷ், சொல்லவே தேவையில்லை, தேன் கூட்டைக் கலைத்த குரங்கு . 'முதலில் சுடு. அப்புறம் கேள்வி கேட்கலாம்' என்ற கவ்பாய் மனப்பான்மை உள்ளவர்கள். கரடு முரடான பண்ணை வாழ்க்கை, கடுமையான தட்ப வெப்ப நிலைகள், தீவிர பைபிள் நம்பிக்கை, எல்லாவற்றுக்கும் மேலாக, கொஞ்சம் தடித்தனம், இவற்றின் கலவையே டெக்சஸ் மக்கள். மாநகரங்கள் அல்லாத இடங்களில் வசிப்பவர்கள், இன்னும் 16-ஆம் நூற்றாண்டு மனப்பான்மையைத் தாண்டி வரவில்லை, விருப்பமும் இல்லை. கொஞ்சம் ரிமோட்டான இடங்களுக்குச் சென்றால், வெள்ளையராக இல்லாத பட்சத்தில் குறைந்தபட்ச ஆபத்து உத்தரவாதம். பல மைனாரிட்டி இனங்கள் இங்கே வசித்து வந்தாலும், வெள்ளையர் அல்லாதவர்களை டூரிஸ்ட்கள் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கரடு முரடான ஆட்கள் என்றாலும், அடிப்படை நேர்மையில், பிற மாநிலத்தவரை விடவும், இந்தியரை விடவும் மிக உயர்ந்தவர்கள். சில இடங்களில், இன்னும் பழைய வாசனை போகாமல், வழி கேட்டு வருபவர்களுக்கும் உணவளித்து உபசரிக்கும் சிற்றூர்களும் சில உண்டு. அடியும் கொடுத்து அல்வாவும் வாங்கித்தரும் மதுரைக்காரர்கள் போல....
டெக்சசைப் பொறுத்தவரை, கண்ணை மூடிக்கொண்டு ரிபப்ளிக்கன் கட்சிக்கே எப்போதும் ஓட்டுப்போடுவார்கள். ஒபாமா வென்ற இந்தத் தேர்தலில் டெமாக்ரட் கட்சி வாங்கியிருக்கும் வாக்கு சதவீதம் உயர்ந்திருப்பது சற்று ஆறுதலானவிஷயம்.
இங்குத் தேர்தலில் நிற்க விரும்புபவர்கள் கட்டாயம் ரெகுலராக சர்ச்சுக்குப் போக வேண்டும். மனைவி குழந்தைகளுடன் வாழ வேண்டும் என்பது போன்ற எழுதப்படாத விதிகள் உண்டு. உங்களுக்கு ஏசுவின் மேல் விசுவாசம் இல்லையா ? அரசு உயர் வேலையை மறந்து விடலாம்.

அடுத்து: ஆஸ்டின் நகர் மக்களைப் பற்றிக் கொஞ்சம், நிகழ்வுகள் கொஞ்சம்..

Tuesday, July 28, 2009

கல்லிலே கலை வண்ணம் கண்டான்



இந்தப் படத்துக்கும் பயணக் கட்டுரைக்கும் என்ன சம்பந்தம்? பிறகு சொல்கிறேன்.
போனமுறை ஊருக்குப் போனபோது, ' பொன்னியின் செல்வனை' மூன்றாவது முறை படித்தேன். உடனே சோழப் பிரதேசம் சென்று பார்க்க வேண்டுமெனத் தோன்றியது. என் தம்பியின் நண்பர் சீனுவாசன் சரியான டூர் பைத்தியம். தமிழ்நாட்டின் அத்தனை ரோடுகளும் அத்துப்படி. பஸ் கனெக்ஷன் எல்லாம் கூட மனப்பாடம். நான் கேட்டவுடன், 'அதற்கென்ன.. காலையில் கிளம்பி விடுவோம் ' என்றார். மறுநாள் காலை, முதலில் 'கங்கை கொண்ட சோழபுரம்' நோக்கி வண்டியை விட்டோம். உளுந்தூர்ப் பேட்டை தாண்டியவுடன் காருக்கு உதறல் எடுக்க ஆரம்பித்து விட்டது. தமிழக அரசின் இலவச சேலையை விட மெல்லியதாகப் போடப்பட்ட தார்ச்சாலை, பத்து நிமிடம் லேசாக விழுந்த தூறலில் காணாமல் போயிருந்தது. உளுந்தூர்ப்பேட்டை சாலையில் டிஸ்னி லேண்ட் ரைட் அனுபவம் தந்த அந்தக் குத்தகைதாரர் பதினாறும் பெற்று வாழட்டும்.
கங்கை கொண்ட சோழபுரம் நெருங்க நெருங்க, வழி கிராமங்கள் எல்லாம் மிக ரம்மியமாக இருந்தன. ஊர்ப் பெயர்களும் அற்புதமான தமிழில், நெல்லைப் பக்கத்து கிராமங்களின் பெயர்கள் போலவே இருந்தன. திடீரென்று 'time travel ' செய்வது போலத் தோன்றியது. வண்டியின் பின்னால் திரும்பி, பழுவேட்டரயரோ, வந்தியத் தேவனோ, குதிரையில் வருகிறார்களா என்று எட்டிப் பார்த்தேன். ஒரு சிறுவன்தான் சைக்கிள் டயர் ஒட்டிக் கொண்டு சென்றான். கோயிலை அடைந்ததும் அதைக் கார்னர் ஆங்கிளில் பார்த்து அசந்து போனேன். (http://tamilnation.org/culture/architecture/gkc.htm ). சுற்றிலும் ஜன சந்தடியே இல்லை. வாசலில், இளநீர் விற்கும் ஒரு நோயாளி மட்டும். "யாரு சார் இங்கல்லாம் வர்றாங்க. எனக்கு வியாபாரமும் கம்மி ". அவர் இளநீர் சீவுவதைப் பார்க்கப் பாவமாக இருந்தாலும், எல்லோரும் வாங்கினோம். இக்கோயிலை இந்தியத் தொல்பொருள் துறை எடுத்துக் கொண்டிருக்கிறது. ஆச்சர்யமான வகையில், படு சுத்தமாகவும், படு விஸ்தாரமாகவும் உள்ளது. ராஜேந்திர சோழன், தன் தந்தை ராஜ ராஜ சோழன் (சிவாஜி கணேசன் அல்ல! ) எழுப்பிய பெரிய கோயிலின் மாடலில் அதே போல், ஆனால் அதை விட சிறிய அளவில் கட்டி இருக்கிறான். Amazingly Perfect Geometric structure. ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் சிதிலமடையாத சிற்பங்கள். சுற்றுப் பிரகாரத்தில் அக்காலத் தமிழ் எழுத்தில் கல்வெட்டு. வெளிப் பிரகாரத்தில் அழகான புல்தரை, சிறந்த பராமரிப்பு. குழந்தைகள் நிச்சயம் நாள் முழுதும் ஓடியாடி மகிழ்வார்கள். இப்படி ஓர் அழகான கோயிலுக்கு மக்கள் என் வருவதில்லை? கோயில் என்று இல்லாமல், டூரிஸ்ட் ஸ்பாட் மாதிரியாகவேனும் வரலாமே. யாரேனும் மாடர்ன் சாமியாருக்கோ, மயிர் போன நடிகருக்கோ காத்திருக்கிறதா?

தாராசுரம்: அங்கிருந்து கிளம்ப மனமே இல்லாமல் கிளம்பி, தாராசுரம் (http://en.wikipedia.org/wiki/Airavateswara_temple) நோக்கிப் பயணமானோம். அது கும்பகோணத்துக்கு ஐந்து மைல் தூரத்தில் உள்ளது. வழியெல்லாம் கண் கொள்ளாத அழகில் வெற்றிலை மற்றும் வாழைத்தோட்டங்கள். தாராசுரம் ஒரு un-assuming small town. ஐராவதேஸ்வரர் கோயிலில்தான் ஆச்சரியம் காத்திருக்கிறது. உள்ளே போகும்போது, 'ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றிய' கதையாக இங்கும் கோயிலில் யாருமே இல்லை. கோயிலைப் பற்றிய விபரங்கள் எல்லாம் மேலே கொடுத்துள்ள சுட்டியில் உள்ளது. அந்த சிற்பங்களைப் பார்த்து சற்று நேரம் மூச்சடைந்தது. தூண்கள் நிறைந்த மண்டபத்தில் ஒவ்வொரு தூணிலும் ஒவ்வொரு விதமான மிக நுண்ணிய வேலைப்பாடுள்ள சிற்பங்கள். இந்தக் கல் சிற்பங்களுக்கு சவால் விடும் வகையில் அமைந்தது, எனக்குத் தெரிந்து, ஹம்ப்பியில் உள்ள கிருஷ்ணதேவராயரின் ஹளபேடுதான். "மனுஷன் சும்மா வெண்ணையில செதுக்கறா மாதிரி செதுக்கி இருக்காம்பா! " ஒரு பகுதி மூடினால் பசு, மறு பகுதி மூடினால் யானை, என்பன போன்ற சிற்பங்கள். கருவறை மற்றும் இதர அறைகள் ஜன்னல்கள் எல்லாம், கல்லிலே, டிசைன் டிசைனாக, அனுபவித்து செதுக்கியிருக்கிறார்கள். ஒவ்வொன்றாக அனுபவிக்க ஒரு நாள் போதாது. இந்தக் கோயிலையும் தொல்பொருள் துறை எடுத்திருப்பதால், சுவற்றில், ' I am loves Grijaa... ' , ' தன்மானச் சிங்கம் முனியாண்டி அழைக்கிறார்.. ', ' பொன்வண்டு சோப் ' போன்ற அநாகரீகக் கிறுக்கல்கள் இல்லை.
மேற்கொண்டு விவரிக்காமல், குடும்பத்துடன் போய் இந்த இடங்களைப் பார்க்குமாறு வேண்டுகிறேன். தமிழ்நாட்டில் இருந்து கொண்டு இதெல்லாம் பார்க்காமல் இருப்பது பெரிய குற்றம்.

கடைசியாக.. எதற்கு இந்தப் பயணக் கட்டுரையில் டெர்ரர் ராஜேந்தர் படம் ? முதல் காரணம், சுவாரஸ்யம் காரணமாக இந்தப் பதிவைப் படிக்க வருவீர்கள். இரண்டாவது முக்கிய காரணம். இத்தகைய சிறப்பான கலைகள் வெறுமனே மன்னர்களின் அதிகாரத்தால் மட்டுமே வளர்ந்திருக்காது. குறைந்த அளவுக்காவது மக்களும் கலாச்சார ரீதியாக மிக உயர்ந்து இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சிறந்த செவ்விலக்கியங்களும் தோன்றியிராது. பின்னர் தமிழர்களுக்கு என்ன நேர்ந்தது? டீ. ராஜேந்தர், விஜய்,தல, விஷால், சிம்பு, தனுஷ் போன்ற கோமாளிகளைக் கொண்டாடும் குறைப் பட்டப் பிறவிகளாய்ப் போனது ஏன் என்று யாராவது ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்.

Wednesday, July 22, 2009

கண்ணதாசனின் ரசவாதம் - 2

நாம் படிக்கும் பருவத்தில் இதைப் பார்த்திருப்போம். சிலர் வாழ்க்கையில் நன்றாக மேலே வருவர் என்றும், சிலர் தேற மாட்டர்கள் என்றும் பரவலாக அபிப்பிராயம் இருக்கும். வருடங்கள் வேகமாக உருண்டோடிய பின்னர் திரும்பிப் பார்த்தால், அனுமானங்கள் பெரும்பாலும் தவறாகிப் போயிருக்கும். என்னுடைய ஊரில், மீசை அரும்பிய பருவத்தில் ஒன்றாக விளையாடியவன். ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக் கூடாது. நன்று தேர்ந்த ரசனையும் கூர்மையான அறிவும் ஆளுமையும் உடையவன்.
"நம்ம மேற்படி ஆளு ஒன்னு மந்திரியா வருவான், இல்லாட்டி பிரான்ஸ் போய் செட்டில் ஆவான் பாத்துக்கோயேன்" , என்பது அவனைப் பற்றிப் பொதுவான பேச்சாக இருக்கும். நான் மற்றும் இன்னொரு நண்பன் பொறியியல் கல்லூரிக்கும், அவன் அங்கே கலைக் கல்லூரியிலும் படிக்கப் போனோம். இடையில் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. அவன் படிப்பையும் முடிக்கவில்லை, ஆளும் உருக் குலைந்து இருந்தான். ஆனால் எந்தக் கெட்ட சகவாசமும் இல்லை. பல நாள் வேளை கிடைக்காமல் அலைந்து விட்டு தன் அண்ணன் உதவியில் சின்ன வெற்றிலைக் கடை வைத்து உட்கார்ந்து விட்டான். கிண்டலும் புன்னகையும் மட்டும் மாறவில்லை. கடையில் அக்கௌன்ட் வைத்திருப்பவர்கள் மேலும் கடன் கேட்டால், " 'பற்று' மிகுந்து வரப் பார்க்கின்றேன்.... என் அண்ணனால் பட்டு வரும் இம்சைகள் பேசி முடிவதில்லை... " என்று பாரதியின் கண்ணன் பாட்டின் உல்ட்டா வேறெ.

சரி, விஷயத்துக்கு வருவோம். கம்ப ராமாயணம் படித்தவர்கள் மிகவும் சிலாகிக்கும் தத்துவ வரிகள். இராமனைக் காட்டுக்கு அனுப்பும் செய்தி கேட்டு இலக்குவன் அதீதக் கோபம் கொண்டபோது, அவனுக்கு இராமன் கூறியது இது.
"நதியின் பிழையன்று நறும்புலன் இன்மை, அற்றே
பதியின் பிழையன்று, பயந்து நமைப்புரந்தாள்
மதியின் பிழையன்று, மகன் பிழையன்று, மைந்த,
விதியின் பிழை நீ இதற்கு என்கொல் வெகுண்டதென்றான்"

-- ஆற்றில் நல்ல தண்ணீர் இல்லாமல் போனால் அது அந்த ஆற்றின் குற்றம் இல்லை. ( அரசியல்வாதியின் குற்றமா என்று கேட்காதீர்கள். அது போன மாசம், இது இந்த மாசம் ). நம்முடைய தந்தையின் பிழையோ நம்மை வளர்த்த தாயின் அறிவின் பிழையும் அன்று.
அந்த்தத் தாயின் மகன் பரதனின் பிழையும் அன்று.
இது விதியின் பிழை. இதற்கு ஏன் பெரும் கோபம் கொள்கிறாய்.

இதை, கம்பனின் தீராக் காதலனான நம் கவிஞர் கண்ணதாசன் அற்புதமாக உள் வாங்கி நமக்குக் கொடுத்திருப்பார். 'தியாகம்' படத்தில் வரும்
"நதி வெள்ளம் காய்ந்து விட்டால் நதி செய்த குற்றமில்லை,
விதி செய்த குற்றமின்றி வேறு யாரம்மா"
என்ற பாடலைக் கேட்டதுண்டா ?


மன வலிமை மிக்கத் துணைவி:
தன் கணவன் வலிமையானவனாக இருக்க வேண்டும் என்று மனைவி நினைப்பது போல், தன் மனைவிக்கும் மன உறுதி வேண்டும் என்றும் கணவனும் நினைப்பான். அப்படி ஒரு மன உறுதி வாய்ந்த ஒரு பெண்ணை சங்கப் பாடல் படம் பிடித்துக் காட்டுவதைப் பாருங்கள்.

பின்னணி:
சோழ மன்னன் கரிகாலனின் மகள் ஆதிமந்தி; ஆடல் பாடலில் வல்லவள். சேரநாட்டரசனான ஆட்டனத்தி இவளுடைய கணவன். இருவரும் காவிரியின் புதுப்புனல் விழாவில் நீராடி மகிழ்ந்தபோது, நீர்ப்பெருக்கு ஆட்டனத்தியை இழுத்துச் சென்றுவிடுகிறது. அழுது சிவந்த கண்களோடு கணவனைத் தேடுகிறாள் ஆதிமந்தி. அவளுடைய நிலையைக் கண்டு காவிரியே ஆட்டனத்தியைக் கடற்கரையில் சேர்க்கிறது. காவிரி கடலில் கலக்கும் இடத்தில் ஒரு பெண்ணால் காப்பாற்றப்பட்ட கணவனைக் காண்கிறாள் ஆதிமந்தி.

பாடல் :

மள்ளர் குழீஇய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டுங் காணேன் மாண்டக் கோனை
யானுமோ ராடுகள மகளே யென்கைக்
கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த
பீடுகெழு குரிசிலுமோ ராடுகள மகனே.

-- குறுந்தொகை

பாடல் விளக்கம்:
" அவனை எங்கும் காணவில்லை, வீர விளையாட்டு விளையாடும் மல்லர்கள் மத்தியிலும் காணவில்லை
அழகாக, ஜோடியாக, நெருக்கமாக ஆடும் நடனப் பெண்கள் மத்தியிலும் அவனைக் காணவில்லை
ஏன் காதலனை எங்கு தேடியும் மறைந்த என் மன்னனைக் காணவில்லையே.
நானும் ஆடல் மகள்தான். மெலியும், என் கையில் அணிந்த சங்கு வளையல்கள், வருத்தத்தால் நெகிழ்ந்து விழுகின்றனவே.
அவனை எங்கேனும் கண்டால் சொல்லுங்கள். அவனும் ஒரு ஆடல் மன்னன்தான் "

இப்போது இது கண்ணதாசன் கைவண்ணத்தில் அற்புதமான திரைப் பாடலாக உருமாறுவதைப் பாருங்கள். சங்க இலக்கியத்தை நாமெல்லோரும் ரசிக்கக் கொடுத்த அந்தக் கவிஞன்வாழ்க.
படம்: மகாதேவி. தன் கணவன் எந்த நிலையில் இருக்கிறான் என்று தெரிந்து கொள்ள இயலாமல் பத்மினி உருகிப் பாடுகிறார்.

கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்
பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்
சென்ற இடம் காணேன்.. சிந்தை வாடலானேன்
சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்

நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே
கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே

தொடர்புடையது: கண்ணதாசனின் ரசவாதம்-1

Monday, July 13, 2009

நெஞ்சம் மறப்பதில்லை... அது நினைவை இழப்பதில்லை

" இருவது வருஷத்துக்கு முந்தி நடந்ததெல்லாம் இப்போ எதுக்கு மாஞ்சி மாஞ்சி எழுதறீங்க? ஒருத்தரும் அதப் படிக்கிறதுமில்ல, படிச்சாலும் ஒன்னும் திருப்பி எழுதறதுமில்ல. கார்பெட் க்ளீன் செய்யலாம், இல்லன்னா, போய் அந்த lawn -ஐ யாவது கொஞ்சம் mow பண்ணலாமில்ல" என்ற நியாயமான கோரிக்கையை நேற்று என் சகதர்மினி வைத்தாள்.
"இல்லம்மா, நீயும் நானும் எங்கெங்கியோ படிச்சாலும், அடிக்கடி நம்ம ஸ்கூல் மேட்டர் எல்லாம் பேசறமில்ல, அதத்தான் நான் எழுதி வக்கிறன். நானென்ன professional எழுத்தாளனா என்ன, அவங்க படிச்சிட்டுக் கருத்து சொல்றத்துக்கு? பாவம், இந்த வயசில எல்லாருக்கும் என்னென்னவோ பெரிய பெரிய வேலைங்க, பிரச்சினைங்க. அதில்லாம, ரொம்பப் பேரு பெரிய உத்தியோகத்தில எல்லாம் இருக்காங்க தெரியுமா? வந்து எட்டிப் பாத்தாலே பெரிய விஷயம்", என்று எனது 'தெளிந்த' ஞானத்தை உரைத்தேன்.
"ஹ ஹ்..... " எல்லாம் தெரியும் என்ற பாவனையில் உள்ளே போனாள். No man is his wife's hero.

சிலசமயம், பின் மதிய வேளை மூன்று மணி வாக்கில், கண்கள் சொக்கும் முன். பழைய நினைவுகளை அசைபோடும்போது தற்போதைய துன்பங்கள் கொஞ்சம் விலகி நிற்கின்றன. பள்ளிப் பருவத்தில், டவுசர் கிழிந்தும் கிழியாத மாலைப் பொழுதுகளில் பாண்டிச்சேரி பொட்டனிக்கல் தோட்டத்தில் நாவற் பழம் பொறுக்கியது, ஸ்கூல் எதிர்ப்புறம் இருந்த மாந்தோப்பில் மாங்காய் திருடியது, எல்லாம் பசுமையாக நினைவிருக்கிறது. கோவில் தோப்பில் உடன் கில்லி விளையாடியவர்கள் சிலர் உயர்ந்தும், பலர் தாழ்ந்தும், வெகு சிலர் இறந்தும் போயினர். இப்போதெல்லாம் அந்த இடங்களில் பலர் செல்போனில் தனித் தனியே பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது,
கவலையற்ற அக்கால நினைவுகள் ஆளை அழுத்தாமல் விடுவதில்லை.

இந்த உணர்வை ஒரு முதியவர் மூலம் புறநானூற்றுப் பாடல்
அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டுவதைப் பாருங்கள். இந்தப் பாடல்தான் கோப்பையிலே குடியிருந்து, கோலமயில் துணையிருந்த நம் கண்ணதாசனையும்
' பசுமை நிறைந்த நினைவுகளே பாடித் திரிந்த பறவைகளே....
....................

குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித் திரிந்தோமே
'
எனப் பாட வைத்தது.


இனி நினைந்து இரக்கம் ஆகின்று; திணி மணல்
செய்வுறு பாவைக்குக் கொய் பூத் தைஇ
தண் கயம் ஆடும் மகளிரொடு கை பிணைந்து,
தழுவுவழித் தழீஇ, தூங்குவழித் தூங்கி,
மறை எனல் அறியா மாயம் இல் ஆய்மொடு
உயர் சினை மருதத் துறை உறத் தாழ்ந்து,
நீர் நணிப் படி கோடு ஏறி, சீர்மிக,
கரையவர் மருள, திரையகம் பிதிர,
நெடு நீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து,
குளித்து மணற் கொண்ட கல்லா இளமை
அளிதோ தானே! யாண்டு உண்டு கொல்லோ--
தொடித் தலை விழுத் தண்டு ஊன்றி, நடுக்குற்று,
இரும் இடை மிடைந்த சில் சொற்
பெரு மூதாளரேம் ஆகிய எமக்கே?


- புறநானூறு


பாடல் விளக்கம்:

இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் வருத்தம் மேலிடுகிறது
மணல் பிடித்து பொம்மை செய்து,
பூப்பறித்து அதற்குச் சூட்டியும்
ஆற்றில் வாலைப் பெண்களின் கைகோர்த்து மகிழ்ந்ததும்
அவர் தழுவும் பொழுது தழுவியும், ஆடும்போது ஆடியும்
ஒளிவு மறைவோ, வஞ்சமோ, ஏதுமில்லாத அன்பு
நண்பர்களோடு நேரம் போவது தெரியாமல் விளையாடி மகிழ்ந்தும்
வளைந்து நீரைத் தொடும் மருத மரத்தின் கிளைகள் பற்றி ஏறி
உச்சிக் கிளை அடைந்து
கீழே நிற்போர் மருள, அவர் மீது நீர்த் திவலைகள் விழும்படி
'தொப்' என நீரில் குதித்து, மூழ்கி
ஆற்றின் ஆழத்திலிருந்து மணலை அள்ளி வந்து காட்டியும்
இப்படிப் பலவாறாக களிப்புற்றிருந்த
இளமைப் பருவம் கழிந்து சென்று விட்டதே !
ஊன்று கோலை ஊன்றி, நடுக்கத்துடனும்
இருமலுக்கிடையேயும் சிரமத்துடன் பேசும்
வயோதிகனான எனக்கு
கடந்து சென்ற அந்தக் காலம் இனி எப்போது வாய்க்கும்?

Related: கண்ணதாசனின் ரசவாதம் - 1

Thursday, July 9, 2009

கண்ணதாசனின் ரசவாதம் - 1



Disclaimer: கீழ்கண்டவை முழுமையும் என் சொந்த சரக்கல்ல. நான் பல புத்தகங்களில், பல இடங்களில் படித்தவற்றின் பாதிப்பே ஆகும்.

புகழ் பெற்ற இரண்டு ஒப்பாரிப் பாடல்களைக் கவியரசு கண்ணதாசன் அழகிய காதல் பாடல்களாக ரசவாதம் செய்யும் வித்தையை இங்குப் பார்ப்போம்.

1. மன்னன் பாரியின் பெண்கள், அங்கவை, சங்கவை. இவர்கள், தந்தையையும், நாட்டையும் இழந்து, ஆதரவற்ற நிலையில் ஆற்றாமையில் குமையும் கீழ்கண்ட காட்சியைப் பாருங்கள். ஒரு மதிய வேளையில் தனியே உட்கார்ந்து படித்தால், அப்படியே கண்ணீர் வருகிறது.



"அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்
எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்;
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின்
வென்று ஏறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!"
(புறநானூறு)

விளக்கம்:
அன்றொரு நாள் இந்த வெண்ணிலவு வானில் நீந்தி வருகையில்
எங்கள் தந்தையின் அருகாமையில் இருந்தோம்.
எங்கள் பறம்பு மலையையும் பிறர் கவராமலிருந்தார்.
அன்று காய்ந்த அதே வெண்ணிலவு தான் இன்றும் காய்கிறது.
நிலவு இருக்கிறதே தவிர, இப்போது எம் தந்தை இல்லை எமதருகில்..
பகை வேந்தர், எம் குன்றையும் (நாட்டையும் ) கைப்பற்றிக் கொண்டார், ஐயா!

இதோ கவியரசின் ரசவாதம். ஒப்பாரி, அழகான காதல் பாடலாகிறது பாருங்கள்.

"அன்றொரு நாள் இதே நிலவில் அவர் இருந்தார் என் அருகில்
நான் அடைக்கலம் தந்தேன் என் அழகை, நீ அறிவாயே வெண்ணிலவே.
அந்த ஒரு நாள் ஆனந்தத் திருநாள், இன்று நினைத்தால் என்னென்ன சுகமோ
பாதி விழிகள் மூடிக் கிடந்தேன், பாவை மேனியிலே..
நீ பார்த்தாயே வெண்ணிலவே."

ஐயோ........... எங்கேயோ சும்மா சொக்கித் தூக்கிக்கொண்டு போகிறதே!


====================================================

2. இப்போது, நெஞ்சை உருக்கும் ஒரு நாட்டுப்புற ஒப்பாரி.
"சில்லென்று பூத்த சிறு நெரிஞ்சிக் காட்டினிலே
நில்லென்று கூறி நிற்க வழி போனீரே"

வாழ்க்கை எனும் பாதையின் இரு பக்கத்திலும் மரகதப் பாய் விரித்தது போல் பசும்புல் தரை. அதன் மேல் ஆங்காங்கே நெரிஞ்சியின் மஞ்சள் பூக்கள் மங்களகரமாகக் கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கிறது. கணவன் அவளைத் தனித்து விட்டுச் சென்று விடுகிறான் ( இறந்து விடுகிறான் ). இவளோ செல்லும் வழி தெரியாமல், கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கும் நெரிஞ்சி முள்ளின் மேல் காலை வைத்து விடுகிறாள். முள் குத்தி, கால்கள் காயம் படுகின்றன. கணவனுடன் இருந்தபோது மஞ்சள் பூப்போல இருந்த உறவினர்கள், அவன் இறந்ததும், முட்களாகக் குத்துகின்றனர். நம் வாழ்விலே எத்தனையோ பேரை இதுபோல துன்பமான சூழ்நிலையில் பார்த்திருப்போம். இயலாமையில் கண்ணீர்தான் வருகின்றது.

கவியரசு இதை விருத்தமாக வைத்து எழுதி, டீ.ஆர். மகாலிங்கம் தன்னுடைய ட்ரேட் மார்க் சிரிப்புடன், காதல் பாட்டாகப் பாடுவார். அப்போதெல்லாம் இது ஒரு பிலாக்கணப் பாட்டு என்றே எனக்குத்தெரியவில்லை.
"சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
நின்றது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்.....
செந்தமிழ் தென் மொழியாள்.. நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்..
பைங்கனி இதழில் பழரசம் தருவாள், பருகிட தலை குனிவாள்"

எச்சரிக்கை: மேலும் தொடரலாம்...

Tuesday, July 7, 2009

பாடல் பெற்ற ஸ்தலங்கள் - GCE Days - 5

GCE மக்களைப் பற்றிப் பினாத்துவதை சிறிது இடைவெளி விட்டுப் பின்னர் தொடருவேன். அதற்கிடையில் நாம் உலாவிய அந்த மண்ணைக் கொஞ்சம் பார்த்து வருவோமா? இதோ, வந்துட்டோம்ல...

அட்மின் பிளாக்
அடையாளம் - ஒரு புராதன கார் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். அது கல்லூரி முதல்வரின் கார். இன்னும் இருக்கிறதா என்று தெரியவில்லை. அரசாங்க அலுவலகத்தின் அத்தனை விசேஷங்களையும் கொண்டு, உள்ளே நுழைந்ததும் கொட்டாவி வரவழைக்கும், வெகுவாக போர் அடிக்கும் இடம். வருடத்தில் இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே அக்கவுண்ட்ஸ் பார்க்க செல்ல வேண்டியிருக்கும். ஸ்ட்ரைக் மற்றும் இதர கலக நாட்களில் மட்டும் ஜேஜே என்று இருக்கும்.

கோளரங்கம் ( planetarium )
எந்தக் கல்லூரியிலும் இல்லாத அற்புதமாக எங்களிடம் மட்டும் இருந்தது இந்த planetarium. ஆனால், உள்ளே யார் போய் பார்த்தார்கள்! அதைவிட சுவாரஸ்யமான விஷயங்கள் கட்டிடத்துக்கு வெளியே நடந்து கொண்டிருக்கும்.
'பனி விழும் மலர்வனம் .. உன் பார்வை ஒரு வரம்.. ' என்று எதோ ஜோடி கால்களைப் பார்த்து மெதுவாகப் பாடிக் கொண்டிருப்பார்கள். உதடுகள் அசையும், ஓர் வார்த்தையும் வெளி வராது. சிலர் தனியே யாரையோ ஆவலாக எதிர்பார்த்தபடி
' காற்று வாங்கப் போனேன்.. ஒரு கவிதை வாங்கி வந்தேன்.. அதைக் கேட்டு வாங்கிப் போனாள்.. அந்தக் கன்னி என்னவானாள்.. ' என்று பாடிக் கொண்டிருப்பார்கள். அந்த சமயம் வேறு யாருமே அவர்கள் கண்ணில் படமாட்டார்கள். கிட்டே போய்,
'என்னடா மச்சி, என்ன சேதி ?'
'ஹம்.. ஒண்ணுமில்ல. அதுசரி, உன்ன அங்க யாரோ கூப்புடறாங்க, போய்ப் பாரு '

இதற்கு மேல் அங்கே நின்றால் நமக்கு உதைதான் விழும். அந்தக் கட்டிடம் நிறைய மரம்-செதுக்கும் கலைஞர்களையும் உருவாக்கியிருந்த்தது. அங்கிருக்கும் மரங்களின் மேல் பட்டையைப் பார்த்தால் என்ன மரம் என்றே சொல்ல முடியாத அளவுக்கு அத்தனை உளியின் வேலைகள். கோயில் மரத்தில் தொங்கும் பிரார்த்தனை முடிச்சுகள் போல எத்தனையோ பெயர்கள். கல்லூரியின் சமூக கலாச்சாரமே அதிலிருக்கும்.
முதலாம் ஆண்டு எங்களை ஒரு டெமோ காட்ட அங்கு அழைத்துச் சென்ற போது, அங்கே மரத்தடியில், வின்னர் கைப்புள்ள போல் ஒரு சீனியர். 'எதிர்பார்த்த ஆள் ' வராத கடுப்பில் இருந்த அவன், இருந்ததிலேயே நோஞ்சானாக இருந்த என்னைக் கூப்பிட்ட்டான். "ஏண்டா, லெக்சரர் கூப்பிட்டா இங்க வந்துடறதா ? இன்னைக்குத்தான் கடைசி, இனிமேல் 'பிள்ளைங்க' தவிர யாராவது இங்க வந்தீங்க, மவனே தொலைஞ்சீங்க" என்று சொல்லித் தலையில் தட்டி அனுப்பினான். எனக்குத் தெரிந்து, பாவம், அவன் கடைசி வருடம் வரை, அப்படித் தனியாகத்தான் இருந்தான்.
ஒரு தடவை பார்த்த அணி, அடுத்த இரண்டு மாதத்துக்கும் அப்படியே இருந்தது என்று சொல்ல முடியாது. ஆறு மணி மெகா சீரியலில் அண்ணன்- தங்கையாக வருபவர்கள், எட்டு மணி மெகா சீரியலில் பிசினஸ் எதிரிகள் ஆவது போல்தான் இங்கும் மாதா மாதம் அணி மாற்றம் நடைபெற்றபடி இருக்கும். என்ன கொடும சார் இது? ( நம்ம G.K. சொல்றார்.. " பல்லிருக்கிறவன் பட்டாணி தின்றான். நமக்கென்ன வந்தது? சும்மா பாத்து என்ஜாய் பண்ணிட்டுப் போடா " ).

சென்ட்ரல் கேட்
பெயர்க்கு ஏற்ற மாதிரி 'central' கேட். நாங்கள் படித்த காலத்தில் கூரை வேய்ந்த இரண்டு (நாயர்தான்!) டீக்கடைகள். வருத்தப்பட்டு பாடம் படிப்பவர்களுக்கு இளைப்பாறுதல் தரும் இடம். அந்த மாஸ்டர் போடும் அற்புதமான டீ போல வெகு சில இடங்களில்தான் சாப்பிட்டிருக்கிறேன். ஆனால் அவர் கையை மட்டும் பார்க்கக்கூடாது. அப்போதெல்லாம் லேடீஸ் அங்கு வரமாட்டார்கள் என்பதால் பல ஊர் வட்டார வசைகள் பிரவாகமாக ஓடும். அந்த டீக்கடை நாயர், காலேஜைச் சுற்றி நிறைய இடம் வாங்கிப் போட்டதாகக் கேள்விப்பட்டேன். விட்டால் காலேஜையே வாங்கியிருப்பான்.

ஆடிட்டோரியம்
'நானும் ரௌடிதான், ஆனா ஒரு பயலும் மதிக்க மாட்ரானுங்களே' என்றபடி டவுசர் கிழிந்த டார்ச்சர் வகையறாக்கள் பகலில் சுற்றும் இடம் இது. இதில் சில பேருக்கு ஜீப்பில் முண்டியடித்து ஏறி விடும் வாய்ப்பு கிடைத்து planetarium போய்ச்சேர்ந்து விடுவதும் உண்டு. நிறைய புதுக் கவிஞர்களை உருவாக்கும் ' ஸ்பெஷல் சிகரெட்' சுருட்டப் படுவதும் ஆடிட்டோரியம் பின்பகுதியில்தான். வருடத்துக்கு மூன்று கலை நிகழ்ச்சிகள் நடந்தால் பெரிய விஷயம். வெளியே 'கோயிந்து' போலிருக்கும் என்னைப் போன்றவர்கள் எல்லாம் உள்ளே போனால் ரகளைதான். பாட்டுக் கச்சேரி மேடையில் நடக்கும்போது, கீழே எங்களுடைய டேன்ஸ் கச்சேரி பட்டையைக் கிளப்பும். மேடையிலேயே இங்கிலிஷ் நடனம் ஆடக்கூடிய 'திறமை' வாய்ந்தவன் P.சுரேஷ். அதென்னவோ எப்பொழுதும் இளமாறன் சைசில் உள்ளவர்களிடம் இரவல் வாங்கிய பேண்டில்தான் சுழன்று சுழன்று டான்ஸ் ஆடுவான். பிறகுதான் தெரிந்தது, டான்ஸ் முடிந்ததும், பேன்ட் பெரும்பாலும் கிழிந்து விடும் என்ற ரகசியம். ஒரு முறை அஷோக் தனி ஆளாக பெரிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்து அசத்தி இருந்தான். என்னவோ அதற்கப்புறம் மவுன சாமியாராகிவிட்டான். அந்த மவுன சாமி இங்கு Portland பக்கத்தில் ஆசிரமம் அமைத்திருப்பதாகக் கேள்வி.

டாக்டர் மஞ்சமுத்து கிளினிக்
ஹாஸ்டலுக்கு உள்ளேயே இப்படி ஒரு இடம் இருந்ததே ரொம்பப் பேருக்குத் தெரியாது. இந்த இலவச க்ளினிக்குக்கு மாதத்திற்கு மூன்று பேஷன்ட் வந்தாலே அபூர்வம். ஒருமுறை வயிற்று வலிக்கும், அடுத்த முறை ஜூரத்துக்கும் போனேன். இரண்டு தடவையும் அதே மாத்திரையையே கொடுத்தார். இருந்தாலும் கைராசிக்காரர் என்பதால் உடம்பு சரியாகிவிட்டது. இங்கு அமெரிக்காவில் மட்டும் என்ன வாழ்கிறதாம்?

தாபா
மெஸ்ஸில் சாப்பிட்டு நாக்கு செத்தவர்களுக்கும், பணம் கட்டாததால் மெஸ்ஸிலிருந்து விரட்டப் பட்டவர்களுக்கும் தாபாதான் புகலிடம். இங்கே ஐந்து ரூபாயில் சாப்பிட்ட முட்டைப் பொரியலும், மீல் மேக்கரும், கொடுத்த சுவையும் திருப்தியும் வேறு எங்கும் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால், அடிக்கடி சாப்பிட்டால் மேலே குறிப்பிட்ட கிளினிக் தான் செல்ல வேண்டும்.

லைப்ரரி
பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்து விட்டுப் போனபோது அவர்கள் கொண்டு வந்த புத்தகங்களையும் இந்த லைப்ரரியில்தான் விட்டு விட்டுப் போனார்கள் போலிருக்கிறது. சோவியத் யூனியன் மிர் பப்ளிஷர்ஸ் புத்தகங்கள் கொஞ்சம் கிடைக்கும். அது தவிர, உள்ளே நல்ல காற்று வரும். லைப்ரரியன்தான் முதன் முதல் குருவிக்கூடு ஹேர் பாஷன் அறிமுகம் செய்தவர். அவர், அசிஸ்டன்ட், படிக்க வந்தவர்கள், எல்லோரும் பாரபட்சமின்றி தூங்குவார்கள். இப்போது ஏ.சி. வசதி செய்துவிட்டார்களாம். சுகம். அப்படியே கொஞ்சம் புத்தகங்களையும் வாங்கிப் போட்டா, பசங்க படிப்பாங்கல்ல ?

கருப்பூர் கேட்
மாலை வெயில் மங்கியதும், சில ஆட்கள் வருவதும் போவதுமாக இருப்பார்கள். சிலசமயம், பஞ்சரான உடம்பும், ஆஸ்பத்திரி கட்டுமாக ஓரிருவர் கருப்பூரிலிருந்து திரும்பி வருவர் ( சண்டையின்னு வந்தா சட்ட கிழியறது சகஜந்தானே ) . மேலும் விபரமாக எழுதினால் ஆட்டோ வரும் என்ற பயத்தில், இதை இப்படியே விட்டு விடுகிறேன். இப்பொழுதெல்லாம் ஆட்டோவில் உருட்டுக் கட்டைக்கு பதிலாக தமிழ் பட டிவீடீக்களைக் கொண்டு வருகிறார்களாமே ( லூசுப் பையன் சொல்றான் ). நானெல்லாம் வார இறுதி மதியங்களில் மோர் சாப்பிட்ட மயக்கத்தில், வழி தவறி இந்தப் பக்கம் வருவதோடு சரி.

பிள்ளையார் கோயில்
இந்த மிகச் சிறிய கோயில் மிகவும் ரம்மியமான ஒரு லொக்கேஷனில் அமைக்கப்பட்டிருக்கிறது. வெட்டவெளியில் வீசும் காற்றில் கோயில் மணி தானாக லேசாக ஆடி, அடித்துக்கொள்ளும். வழக்கம்போல பரீட்சை சமயங்களில்தான் எல்லோருக்கும் நினைவு வரும். எனக்குத் தெரிந்து, செந்தில் நாயகம்தான் ரெகுலர் விசிட்டர். நானும் அவ்வப்போது உடன் சென்று மணியடித்து விட்டு வருவேன்.

லேடீஸ் ஹாஸ்டல்
இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நாங்கள் வெளியே போனதும் அடுத்த ஆண்டே வந்து விட்டது. ( நல்லா இருப்பிங்களா ? உக்காந்து யோசிச்சான்களோ ... )

முன் பதிவு: சேலத்து சித்தர்கள் - GCE days part 4.