Sunday, June 21, 2009

சேலத்து சித்தர்கள் -- GCE days part 4

GCE Salem Siddhar

GCE Salem Hostel Days .. cont



ஒரு வாரமாக சித்தர்கள் தொடர்பான சில மின்னஞ்சல்களும் குறுஞ்செய்திகளும் எனக்கு வந்து கொண்டிருந்தன. படிக்கிற காலத்தில் கடுமையான வறுமையின் காரணமாக விரக்தி மேலிட்டு சித்தர் பாடல்கள் படித்திருக்கிறேன். மத்திய வயதைக் கடந்த பின்னர் மறுபடியும் படித்துப் பார்த்தால் அவற்றின் perspective வேறு மாதிரி இருக்கிறது. நான் வளர்ந்து திரிந்த பாண்டிச்சேரியும் சித்தர்கள் உலவிய மண்தான். ஜிப்மரிலிருந்து மூன்று கி.மீ. தூரத்தில் இரும்பை என்னும் கிராமத்தில் மகா காளீஸ்வரர் கோயில் உள்ளது. இங்குதான் கடுவெளி சித்தர் இருந்தார். அவருடைய கீழ்கண்ட பாடலை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
நந்தவனத்தில் ஓர் ஆண்டி. அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டு வந்தான் ஒரு தோண்டி. அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி.

பாமரர்களோடு நெருங்கிப் பழகிக் கொண்டு, கட்டமைப்புக்கு அடங்காத, எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத social scientist -களை சித்தர் என்று சொல்வார்கள். புதுச்சேரியில் வாழ்ந்தபோது, மகாகவி பாரதியும் ஒரு சித்தர் என்றே அறியப்பட்டார். என்னைப்போன்ற பகுத்தறிவுக் குஞ்சுகளுக்கு ( பறவைக் குஞ்சு என்பது போலப் பொருள் கொள்க ) முன்னோடி சிவவாக்கியர். இவர் பாடல்கள் இன்றைய தேதிக்கும் புரட்சிதான்.

இப்போது தலைப்புக்குள்...

சேலம் அ.பொ.கல்லூரியில் காமெடி சித்தர்களுக்கும் கலக்கல் சித்தர்களுக்கும் பஞ்சமே இருந்ததில்லை. இதில் பெயர்களை மட்டும் விடுகதை போல் உங்கள் யூகத்துக்கு விட்டு விடுகிறேன்.

ஒரிஜினல் குகை சித்தர் : சேலம் நாகா-மினி வழியாகப் போகும்போதெல்லாம் ( படம் பார்க்க அல்ல ) இந்த சித்தரைப் பார்த்து, ' என் இந்த ஆள் இங்கேயே இருக்கான்' என்று யோசிப்பேன். அவரது வாசமே அங்கே அருகில் தான் என்பது பிறகுதான் தெரிந்தது. பெரும்பாலும் இங்கிலீஷ் பேசும் கோடீஸ்வர சாமியார்களின் புத்தகங்கள் வாசிப்பார். கலா ரசிகர்.

குடும்ப சித்தர் - (குதம்பை சித்தரின் மரூவு ) 'கருமமே' கண்ணாயினார். மற்ற எவர் அருமையும் பாரார். இவர் திருப்பாதங்கள் படாத சேலம் முட்டுச் சந்துகளும் மூவன்னா சந்துகளும் மிகக் குறைவு. தற்சமயம் சாமி ஒடுங்கி, பெரிய பொறுப்பான பதவியில் இருப்பதாகக் கேள்வி.

அழுக்கணி சித்தர் - பிறரின் phermone ஹார்மோன்களுக்கு அதிகம் வேலை வைத்தவர். எந்த மொழியிலும் இவருக்குப் பிடிக்காத வார்த்தை 'சோப்பு'. மற்றவருக்காக இரங்கும் தயாள குணம் மிக்கவர். எலக்ட்ரான் அலைகள் போல் அங்கிங்கெனாதபடி எங்கும் எப்போதும் இன்று வரை அமைதியற்று அலைந்து கொண்டிருப்பவர்.

கைலாசநாதர் : பெரும்பாலும் கால்கள் தரையில் பாவாது ஒரு அடி மேலேயே நடப்பவர். மற்றபடி யாருக்கும் தீங்கிழைக்காதவர். என்னிடம் மட்டும் இவருக்கு ஏதோ வாஞ்சை. தற்சமயம் கீழிறங்கி பூமியில் கால் பதித்து நடப்பதாகக் கேள்வி.

புலிப்பாண்டி சித்தர் : சதா அங்குமிங்கும் அலைந்து கொண்டு, எதிர்பட்டவர்களிடம் பந்தா செய்வதா, அல்லது பயப்படுவதா என்று குழம்பி, எக்ஸ்பிரஸ் வேகத்தில் பேசுவார். செல்வச் செழிப்பான வீட்டில் இருந்து வந்தாலும், இந்தப் புண்ணியவான் தயவால் சென்ட்ரல் கேட்டில் கணேஷ் பீடி விலை ஏறியது. பில்டர் சிகரெட்டின் இறுதி வரை இழுத்து இன்பம் கண்டவர்.

பாம்பாட்டிச் சித்தர்: இவர் திறந்த சோடா பாட்டில்களுக்குக் ( குடிப்பதற்கு அல்ல) கணக்கே இல்லை. கழகக் கட்சித் தலைவர் ஆவதற்குரிய எல்லா சிறப்புத் தகுதிகளும் நிரம்பியவர். அரசியலுக்குச் சென்று கும்மி அடிப்பார் என்று நான் நம்பிய சிலரில் இவரும் ஒருவர்.

அககறைசித்தர் : ஹாஸ்டலில் எல்லோரும் நலமாக இருக்கிறார்களா என்று தினமும் இரண்டு வேலை ரவுண்ட்ஸ் வருவார். காசு வாங்காமல் 'வார்டன்' வேலை பார்த்தவர், நான்கு வருடங்களும்! .

புத்தக சித்தர்கள் : ஒருவர் குணத்தில் ரத்தினம், கணக்கில் புலி. மற்றவர், பேசினால் வசந்தம் வீசும். இருவர் கையிலும் எப்போதும் புத்தகம் இருக்கும். புத்தகம் இல்லாத போது, குளியலறை டவல் இருக்கும் ( அனேகமாக, குளிப்பதற்கு என்று நினைக்கிறேன் ) .


கீழே உள்ள வரிகள் யாரைக் குறிப்பிடுகின்றன என்று தெரிகிறதா? தெரிந்தால் எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

ஒரிஜினல் சித்தர் பாடல்கள் :

1. தாவாரம் இல்லை, தனக்கொரு வீடில்லை
தேவாரம் ஏதுக்கடி குதம்பாய் தேவாரம் ஏதுக்கடி

2. மாங்காய்ப் பால் உண்டு மலை மேல் இருப்பார்க்கு
தேங்காய்ப் பால் ஏதுக்கடி குதம்பாய் தேங்காய்ப் பால் ஏதுக்கடி

3. செத்தாரைப் போலத் திரியும் மெய்ஞானிக்கு
கைத்தாளம் எதுக்கடி - குதம்பாய் கைத்தாளம் எதுக்கடி

4. பட்டணம் சுற்றிப் பகலே திரிவோர்க்கு
முட்டாக்கு எதுக்கடி - குதம்பாய் முட்டாக்கு எதுக்கடி.

உல்டா வரிகள்:
5. 'பாட்டில்' கலந்திடவே அங்கே ஒரு
பத்தினிப் பெண் வேணும் - எங்கள்
'கூட்டுக் களி'யினிலே - கவிதைகள்
கொண்டு தரவேணும்.

6. எங்கிருந்தோ வந்தான் 'இடைப்பாடி' நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்.



=========
முன்பதிவு : நித்தமும் நாடகம் .. நினைவெல்லாம் காவியம் - GCE days part 3..

1 comment:

Information said...

மிகவும் அருமை

Post a Comment