Friday, July 31, 2009

என் ஜன்னலின் வெளியே -- 1

என் அபிமான எழுத்தாளர்களுள் ஒருவரான சுஜாதா சொல்வார் "காஷ்மிரில் வசித்துக் கொண்டு மாம்பலத்தில் மாமி இட்டிலி சுடுவது பற்றிக் கதை எழுதுவார்கள். அங்கு ஜன்னலைத் திறந்தால் ஆயிரம் கதைகள் கிடைக்கும்.." என்று.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் பாஸ்டன் நகரில் காலடி எடுத்து வைத்தபோது, இதுதான் நான் 'வாக்கப்படப் போற பூமி' என்று நினைக்கவில்லை. கலிபோர்னியாவில் எட்டாண்டுகள் வசித்துவிட்டு நான் தற்சமயம் வசிக்குமிடம் டெக்சஸ் மாகாணத்துத் தலைநகர் ஆஸ்டின். இடையில் நடந்த கதையெல்லாம் சுவாரசியம் இல்லாததால் இங்கே சொல்லப்போவதில்லை. இந்தியாவின் வெகு ஜன மீடியாவில் வராத, எனது ஜன்னலுக்கு வெளியே நடக்கும் சமூக, அரசியல் விஷயங்களை இங்கு என் பார்வையில் பட்டவாறு கொடுக்கிறேன். தமிழகம் அளவுக்கு இங்கு அரசியல் சமூக நிகழ்வுகள் அத்தனை கேளிக்கையோ திருப்பங்களோ அற்றது. இருந்தாலும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்று நீங்கள் தெரிந்து கொள்ளவே இந்தப்பதிவு.


யு. எஸ். ஏவின் பிரதான இரண்டு அரசியல் கட்சிகள் ரிபப்ளிகன், டெமாக்ரட் கட்சிகள் என்பது சென்னை பள்ளிசிருவர்களுக்கும் தெரியும். அதில்லாமல், சோஷலிச கட்சி, அரசியலமைப்பு கட்சி, பச்சைக் கட்சி, போன்ற நிறைய உதிரிக் கட்சிகளும் உண்டு. இவையெல்லாம் சொற்ப அளவில் ஒட்டு வாங்கித் தோற்பவை. இரண்டு பெரிய கட்சிகளுக்கும் சிறிதளவில்தான் வித்தியாசம். ஒரு கட்சி கொண்டு வரும் திட்டங்களை அடுத்த கட்சி கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கும் வகையில் நம்ம ஊர் தி.மு.க. அ.தி.மு.க. போல ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். முந்தைய ஆட்சி உழவர் சந்தை, கல்வி, மருத்துவ உதவித் திட்டங்கள் கொண்டு வந்ததா? தூக்கி உடைப்பில் போடு, சாராயக் கடை திறந்ததா? ?? ஹ்ம்ம்.... ?? சரி இருக்கட்டும் விடு.. இது போல.

ஜார்ஜ் புஷ் போன்றவர்கள் அடங்கிய ரிப்பப்ளிக்கன் கட்சி, கிழவர்கள் நிரம்பிய அவ்வளவாக படிப்பறிவில்லாதவர்கள் விரும்பும், தேசிய உணர்வுகளைத் தூண்டி குளிர்காயும் அதி தீவிர வலது சாரிக் கட்சி. டெமாக்ரடிக் கட்சியினர் தம்மை முற்போக்கானவர்கள் என்று அடிக்கடி சொல்லிகொண்டாலும், முக்கியமான விஷயங்களில் ஜகா வாங்கிக் கொண்டும், பல்டி அடித்துக் கொண்டும், சமரசம் செய்து கொண்டும், கேனைத்தனமாக லேசான வலதுசாரித் தனத்துடன் இருப்பவர்கள். இந்த வகையில் ரிபப்ளிகன் கட்சியை பா.ஜ.க என்றும், டெமாக்ரட் கட்சியை, சோனியா காங்கிரஸ் என்றும் சொல்லலாம். பொதுவில் இரண்டு கட்சிக்காரர்களும் கார்ப்பரேட் கோடீஸ்வரர்களின் அடிவருடிகள். ஜனாதிபதி முதல், மாவட்ட ஜட்ஜ்கள், போலீஸ் தலைவர் வரை, பொதுமக்களே ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுப்பார்கள். நான்கு வருடத்துக்கு ஒருமுறை, நிறைய செலவு செய்து ஜட்ஜ் தேர்தலில் நிற்கும் ஜட்ஜின் நீதி வழங்கல் எப்படி இருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன்.

இப்போது நானிருக்கும் ஊர் ஆஸ்டின், டெக்சாசின் தலைநகர் . டெக்சசின் பொது குணாதிசயத்துக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத ஊர் இந்த ஆஸ்டின். இப்போதெல்லாம் விக்கிப்பீடியாவின் உதவியுடன் எந்த இடத்தைப் பற்றியும் அல்லது விஷயத்தைப் பற்றியும் உடனே தெரிந்து கொள்ள முடிவதால், பூகோள, வரலாற்று விபரங்களுக்குச் செல்லப் போவதில்லை.
யு. எஸ். ஏவின் எந்த மாவட்டத்துக்கும் இல்லாத சிறப்பு டெக்சசுக்கு உண்டு. இங்கிருந்து போய் ஜனாதிபதி ஆனவர்கள்தான் பேரழிவான யுத்தங்களை ஆரம்பித்துள்ளார்கள். ரிச்சர்ட் நிக்சன் வியட்நாம் போர், சீனியர் புஷ் முதல் ஈராக் யுத்தம், ஜூனியர் புஷ், சொல்லவே தேவையில்லை, தேன் கூட்டைக் கலைத்த குரங்கு . 'முதலில் சுடு. அப்புறம் கேள்வி கேட்கலாம்' என்ற கவ்பாய் மனப்பான்மை உள்ளவர்கள். கரடு முரடான பண்ணை வாழ்க்கை, கடுமையான தட்ப வெப்ப நிலைகள், தீவிர பைபிள் நம்பிக்கை, எல்லாவற்றுக்கும் மேலாக, கொஞ்சம் தடித்தனம், இவற்றின் கலவையே டெக்சஸ் மக்கள். மாநகரங்கள் அல்லாத இடங்களில் வசிப்பவர்கள், இன்னும் 16-ஆம் நூற்றாண்டு மனப்பான்மையைத் தாண்டி வரவில்லை, விருப்பமும் இல்லை. கொஞ்சம் ரிமோட்டான இடங்களுக்குச் சென்றால், வெள்ளையராக இல்லாத பட்சத்தில் குறைந்தபட்ச ஆபத்து உத்தரவாதம். பல மைனாரிட்டி இனங்கள் இங்கே வசித்து வந்தாலும், வெள்ளையர் அல்லாதவர்களை டூரிஸ்ட்கள் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கரடு முரடான ஆட்கள் என்றாலும், அடிப்படை நேர்மையில், பிற மாநிலத்தவரை விடவும், இந்தியரை விடவும் மிக உயர்ந்தவர்கள். சில இடங்களில், இன்னும் பழைய வாசனை போகாமல், வழி கேட்டு வருபவர்களுக்கும் உணவளித்து உபசரிக்கும் சிற்றூர்களும் சில உண்டு. அடியும் கொடுத்து அல்வாவும் வாங்கித்தரும் மதுரைக்காரர்கள் போல....
டெக்சசைப் பொறுத்தவரை, கண்ணை மூடிக்கொண்டு ரிபப்ளிக்கன் கட்சிக்கே எப்போதும் ஓட்டுப்போடுவார்கள். ஒபாமா வென்ற இந்தத் தேர்தலில் டெமாக்ரட் கட்சி வாங்கியிருக்கும் வாக்கு சதவீதம் உயர்ந்திருப்பது சற்று ஆறுதலானவிஷயம்.
இங்குத் தேர்தலில் நிற்க விரும்புபவர்கள் கட்டாயம் ரெகுலராக சர்ச்சுக்குப் போக வேண்டும். மனைவி குழந்தைகளுடன் வாழ வேண்டும் என்பது போன்ற எழுதப்படாத விதிகள் உண்டு. உங்களுக்கு ஏசுவின் மேல் விசுவாசம் இல்லையா ? அரசு உயர் வேலையை மறந்து விடலாம்.

அடுத்து: ஆஸ்டின் நகர் மக்களைப் பற்றிக் கொஞ்சம், நிகழ்வுகள் கொஞ்சம்..

1 comment:

அமுதா கிருஷ்ணா said...

நிறைய விஷயம் தெரிந்துக் கொள்ள முடிகிறது.

Post a Comment