Thursday, July 9, 2009

கண்ணதாசனின் ரசவாதம் - 1



Disclaimer: கீழ்கண்டவை முழுமையும் என் சொந்த சரக்கல்ல. நான் பல புத்தகங்களில், பல இடங்களில் படித்தவற்றின் பாதிப்பே ஆகும்.

புகழ் பெற்ற இரண்டு ஒப்பாரிப் பாடல்களைக் கவியரசு கண்ணதாசன் அழகிய காதல் பாடல்களாக ரசவாதம் செய்யும் வித்தையை இங்குப் பார்ப்போம்.

1. மன்னன் பாரியின் பெண்கள், அங்கவை, சங்கவை. இவர்கள், தந்தையையும், நாட்டையும் இழந்து, ஆதரவற்ற நிலையில் ஆற்றாமையில் குமையும் கீழ்கண்ட காட்சியைப் பாருங்கள். ஒரு மதிய வேளையில் தனியே உட்கார்ந்து படித்தால், அப்படியே கண்ணீர் வருகிறது.



"அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்
எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்;
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின்
வென்று ஏறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே!"
(புறநானூறு)

விளக்கம்:
அன்றொரு நாள் இந்த வெண்ணிலவு வானில் நீந்தி வருகையில்
எங்கள் தந்தையின் அருகாமையில் இருந்தோம்.
எங்கள் பறம்பு மலையையும் பிறர் கவராமலிருந்தார்.
அன்று காய்ந்த அதே வெண்ணிலவு தான் இன்றும் காய்கிறது.
நிலவு இருக்கிறதே தவிர, இப்போது எம் தந்தை இல்லை எமதருகில்..
பகை வேந்தர், எம் குன்றையும் (நாட்டையும் ) கைப்பற்றிக் கொண்டார், ஐயா!

இதோ கவியரசின் ரசவாதம். ஒப்பாரி, அழகான காதல் பாடலாகிறது பாருங்கள்.

"அன்றொரு நாள் இதே நிலவில் அவர் இருந்தார் என் அருகில்
நான் அடைக்கலம் தந்தேன் என் அழகை, நீ அறிவாயே வெண்ணிலவே.
அந்த ஒரு நாள் ஆனந்தத் திருநாள், இன்று நினைத்தால் என்னென்ன சுகமோ
பாதி விழிகள் மூடிக் கிடந்தேன், பாவை மேனியிலே..
நீ பார்த்தாயே வெண்ணிலவே."

ஐயோ........... எங்கேயோ சும்மா சொக்கித் தூக்கிக்கொண்டு போகிறதே!


====================================================

2. இப்போது, நெஞ்சை உருக்கும் ஒரு நாட்டுப்புற ஒப்பாரி.
"சில்லென்று பூத்த சிறு நெரிஞ்சிக் காட்டினிலே
நில்லென்று கூறி நிற்க வழி போனீரே"

வாழ்க்கை எனும் பாதையின் இரு பக்கத்திலும் மரகதப் பாய் விரித்தது போல் பசும்புல் தரை. அதன் மேல் ஆங்காங்கே நெரிஞ்சியின் மஞ்சள் பூக்கள் மங்களகரமாகக் கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கிறது. கணவன் அவளைத் தனித்து விட்டுச் சென்று விடுகிறான் ( இறந்து விடுகிறான் ). இவளோ செல்லும் வழி தெரியாமல், கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கும் நெரிஞ்சி முள்ளின் மேல் காலை வைத்து விடுகிறாள். முள் குத்தி, கால்கள் காயம் படுகின்றன. கணவனுடன் இருந்தபோது மஞ்சள் பூப்போல இருந்த உறவினர்கள், அவன் இறந்ததும், முட்களாகக் குத்துகின்றனர். நம் வாழ்விலே எத்தனையோ பேரை இதுபோல துன்பமான சூழ்நிலையில் பார்த்திருப்போம். இயலாமையில் கண்ணீர்தான் வருகின்றது.

கவியரசு இதை விருத்தமாக வைத்து எழுதி, டீ.ஆர். மகாலிங்கம் தன்னுடைய ட்ரேட் மார்க் சிரிப்புடன், காதல் பாட்டாகப் பாடுவார். அப்போதெல்லாம் இது ஒரு பிலாக்கணப் பாட்டு என்றே எனக்குத்தெரியவில்லை.
"சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
நின்றது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்.....
செந்தமிழ் தென் மொழியாள்.. நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்..
பைங்கனி இதழில் பழரசம் தருவாள், பருகிட தலை குனிவாள்"

எச்சரிக்கை: மேலும் தொடரலாம்...

1 comment:

Anonymous said...

After reading your blogs, I feel that I should have paid more attention to the Elakkiyam at school cause they seem very interesting now.

Post a Comment