Saturday, May 16, 2009

புத்தகம் பையிலே.... புத்தியோ பாட்டிலே - GCE days - part 2

GCE Salem Admin Block

GCE Salem Hostel Days


நான் சுற்றிய நண்பர்கள் மற்றும் என்னுடைய ரூம் மேட்ஸ் பற்றி கொஞ்சம். ஒரு சின்ன பெட்டி, தலையணை மற்றும் போர்வையுடன், எனக்குத் தந்த ரூமுக்குள் நுழைந்த போது ஏற்கனவே வந்து சேர்ந்த நான்கு பேர் திருவென்று விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். பாண்டிசேரிக்காரர்கள் புவனேஸ்வரன், முனாவர், இமாச்சல் தேவிராம், மணிப்பூர் சரத் சந்த். இதில் நான்தான் பூச்சி மாதிரி ரொம்ப சின்னதாக இருந்தேன்.
புவனேஸ்வரன் ஏற்கனவே என்னுடைய ஸ்கூலில் கிளாஸ்மேட். நல்ல படிப்பாளி, அறிவாளி. அதைவிட நல்ல முன்கோபி. இப்போது புதுவை ப்ளானிங் துறையில் வேலை. முன்பே சொன்னது போல, 'சகல' கலைகளையும் சேலம் கற்றுத் தந்தது.
முனாவர், எங்களோட போட்டி ஸ்கூல். ரொம்ப ப்ரில்லியன்ட். எஞ்சினியரிங் மேத்ஸ் எல்லாம், சும்மா ஒரு லுக் விட்டுட்டு பிரமாதமா போடுவான். நல்ல செஸ் பிளேயர். ரஷ்யப் பத்திரிகையில் வரும் செஸ் புதிர்களை சால்வ் செய்வது இவன் பொழுது போக்கு. கோபமே வராத ஜென்டில்மேன். இப்போது சுவிஸ் நாட்டுல ஆல்ப்ஸ் மலை அடிவாரத்துல குடும்பம். அடிக்கடி ஈமெயில் போக்குவரத்து உண்டு.
தேவிராம் இமாச்சல் பிரதேசத்தில் மண்டி என்ற ஊரிலிருந்து வந்தவன். மிக மிக மிக டைட் ஆக ட்ரஸ் போடும் ஆள். எங்கே இவன் பேன்ட் கிழிந்து விடுமோ என்று நாங்கள் பயப்படாத நாளே இல்லை. இவனது ஒரே ஆசை, எப்படியாவது நடிகை ஸ்ரீதேவிக்கு ஒரு முத்தம் கொடுப்பது, முடிந்தால் கல்யாணம் செய்து கொள்வது என்பதுதான். அதற்காகவே படிப்பதற்காக வந்தானாம். வாரம் ஒருமுறை இண்லேண்டு லெட்டரில் ஸ்ரீதேவிக்கு லவ் லெட்டர் எழுதி, அதை எனக்குப் படித்து, பொருள் சொல்லி பாடாய் படுத்துவான். அதன் பிறகு ஸ்ரீதேவியைச் சந்தித்தானா என்று தெரியவில்லை. இப்போது வேண்டுமானால் மறுபடியும் முயற்சி செய்து பாக்கலாம்.
சரத் சந்த் எங்களுக்கு பாடி கார்ட் மாதிரி. அவன் கூட சென்றால் சீனியர்கள் எங்களைக் கண்டுகொள்ள மாட்டார்கள். தன்னுடைய தம்பியை எம். எல்.ஏ. ஆக்கப் போவதாகச் சொல்லிக்கொண்டிருப்பான்.

எங்கள் பக்கத்து ரூமில், சுஜித், குமரன், மதியழகன், அண்ணாமலை ஆகியோர் இருந்தனர். அப்போது கல்லூரியிலேயே நன்றாக இங்கிலீஷ் பேசத் தெரிந்தவர்களில் சுஜித் முக்கியமான் ஆள். சுஜித்தைப் பார்த்து, 'ஒன்றானவன்.... உருவில் இரண்டானவன்' என்று பாட்டுப் பாடி, குமரனிடம் அடி வாங்கியது இன்னும் நினைவில் இருக்கிறது. சுஜித் இப்போ ஒரு பிசினஸ்மேன். கொடிகாத்த குமரன் திருப்பூருக்கு பெருமை சேர்த்தவர் என்றால், குடியாத்தம் குமரன் கருப்பூருக்கு பெருமை சேர்த்தவர். 'எங்கெல்லாம் தேடுவதோ.. எழில் மேவும் குமரா நின் அருள் வேண்டி தினமும் நான்...... ' என்று பாடினால், புளங்காகிதம் அடைந்து சென்ட்ரல் கேட் கடையில் டீ வாங்கித் தருவான். ஆனால் இந்த ட்ரிக் நிரம்ப நாள் ஓடவில்லை. அதே ரூமில் இருந்த மதியழகனை, 'சரோஜா தேவி ' என்ற அடைமொழியாலே ரொம்ப நாள் அழைத்தார்கள்.

எங்கள் ரூமுக்கு frequent visitor வெங்கி ( விருத்தாசலம் வெங்கடேசன் ). நல்ல புட்பால் பிளேயர், பாடகன், ரசிகன், நல்ல நண்பன். என்னுடைய ரூமில் அடிக்கடி பாட்டுக் கச்சேரி நடக்கும். இவன் பந்தாட்டத்துக்கு நிறைய ரசிகர்கள் என்றால், பாட்டுக்கு நிறைய ரசிகைகள். 'பாவை என் பதம் காண நாணமா... உந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா...... ' எனக் காத்துக்கிடந்தவர்களை நான் அறிவேன். விடுமுறையில் ஊருக்குப் போகும்போது சக பயணி. டவுனுக்குப் போய் நிறைய எம் .ஜி.ஆர் படங்களாகப் பார்த்திருக்கிறோம். 'ஆயிரத்தில் ஒருவன்' பார்த்து விட்டு, நல்ல மழையில் குதிரை வண்டியில் நாலு-ரோடு வந்தது நினைவு இருக்கிறதா?
கடைசியாக என்னுடைய ஸ்கூல் கிளாஸ்மேட் கல்யாணத்தில் பார்த்தது ( வெங்கியின் முறைப் பெண், இப்போது என் கிளாஸ்மேட்டின் மனைவி ) .

இன்னும் வருவார்கள்......
முன் பதிவு: Baski's lounge: எண்ணமே சுமைகளாய்.. இதயமே பாரமாய் - GCE நாட்கள்

1 comment:

எஸ்.கே said...

நண்பர்கள் பற்றி நினைத்துப் பார்ப்பதே ஒரு சுகம்தான்!

Post a Comment