Thursday, May 14, 2009

இவ்வருடப் பயணப் பதிவுகள் - பாண்டிச்சேரி

pondicherry GCE Salem
பாண்டிச்சேரி பதிவுகள்: வேலை விஷயமா வெளி நாடு போறவங்களுக்கு அவங்க ஊரப்பத்தியும் ஜனங்களப் பத்தியும் ஒரு frozen image இருக்கும். கொஞ்சம் வருஷம் கழிச்சுத் திரும்பி வந்து பாக்குறப்ப, அங்க ஏற்பட்ட தவிர்க்க முடியாத மாற்றமெல்லாம் மனசுக்குக் கொஞ்சம் கஷ்டத்தையோ ஏமாற்றத்தையோ தர்றது சகஜமாக இருக்குது. எனக்கும் ஒவ்வொரு தடவை பாண்டிச்சேரி வர்றப்பல்லாம் அதே பீலிங்க்ஸ் தான். என்னவோ எங்க ஊர் தன்னோட பழைய வசீகரத்தை ரொம்பவே இழந்து விட்டதாகவே தோணுது.

ஊரெங்கும் தொடர்ச்சியா இருந்த கலர் கலரான கொன்றை மரங்கள், ரோட்டோரம் அடர்ந்து கிடந்த தென்னை மரமெல்லாம் எங்க போச்சி? எல்லாம் கண்ணாடி வெச்ச ஷோரூமா மாறிடுத்து. கசகசன்னு ஒரே ஜன நெரிசல்.
இதாவது பரவால்ல. நான் படிச்ச ஸ்கூல் எதிர்ல மகாகவி பாரதியார் குயில் பாட்டு, கண்ணன் பாட்டெல்லாம் பாடிய அற்புதமான, ரம்யமான ஒரு தோப்பு, கருவடிக்குப்பம் சித்தானந்த சுவாமி கோயில ஒட்டி இருந்தது. உள்ள போனா, நேரம் போறதே தெரியாது. எப்பவும் வத்தாத நீரோடை, நிறைய மாமரம், கொய்யா மரம். இப்படி. மகா கவிக்கும், பாரதிதாசனும் லாகிரி வஸ்துக்கள் சாப்பிட்டு அதி அற்புதமான காவியங்கள் பாடியிருக்காங்க. அந்த இடத்தைப் பாத்தா எனக்கே பாட்டு வரும். அந்த இடத்த பாதுகாக்காம பிளாட் போட்டு வித்துட்டானுங்க. இதவிட மோசம் பாருங்க. அங்க அரவிந்தர் வீதில இருந்த பெரிய புக் ஸ்டால மூடிட்டு ஒயின் ஷாப் தொறந்துட்டானுங்க.
முன்னாடி தமிழ்நாடும் பாண்டிச்சேரியும் எல்லாத்துலயும் ஏட்டிக்குப் போட்டியா இருக்கும். அதனால் ஊர் நல்லா இருந்துச்சி. இப்பல்லாம் தமிழ்நாட்ல ஜனங்களுக்கு கவர்மென்ட் எட்டு அடி குழி வெட்டினா, பாண்டிச்சேரி கவர்மென்ட் எங்க ஜனங்களுக்குப் பதினாறு அடி குழி வெட்டுது. அங்க ஒரு ரூபாய்க்கு அரிசி தந்தா இங்க இலவசமாத் தரானுங்கோ. வர வர எல்லாருக்கும் வேல செய்யறதே மறந்து போயிடிச்சி. அது சரி.... எம்.ஆர். ராதா சொன்னாப்ல, நாமளே பங்களாக்குள்ள உக்காந்துக்கிட்டு பாலிடிக்ஸ் பேசக்கூடாது.

எங்க வீட்டு மரத்தில் இருந்து இளநீர், நல்ல வாசனைய்டன் வகை வகையா பலா, வாழைப்பழங்கள், நல்ல சாப்பாடு. இன்னும் கொஞ்சம் வெயிட் போட்டாச்சு. போன முறை சன் டீ.வீ. பாத்தா சீரியல் எல்லாம் இன்னும் ஓடிக்கிட்டு இருக்கு. ஜனங்களும் ஆர்வம் குறையாம, உக்காந்து பாத்துக்கிட்டு இருக்காங்க. யாரோ சாபம் விட்டாப் போல இருக்குது. :(

ஊர்ல யாரப் பாத்தாலும்,
'என்னங்க அமெரிக்காவுல இருந்து இந்தியருங்களத் தொரத்தராங்கலாமே ' அப்படின்னு, சந்தோஷத்த கஷ்டப்பட்டு மறைச்சிக்கிட்டு கேள்வி.
'அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லீங்களே' அப்படீன்னு சொன்னதும், உடனே கேட்டவங்க முகம் ஏமாத்தத்துல வாடிப்போகுது.
அப்படியும் விடாம, 'இல்லிங்களே தினத் தந்தியில விலாவாரியாப் போட்டிருக்காங்களே. நீங்க பாக்கலியா? உங்க ஏரியாவுல இல்ல போலிருக்கு.'
அதற்கு நான், 'தினத் தந்தி எல்லாம் படிக்கிறதா விட்டு அறுவது வருஷம் ஆகுதுங்க. அது சரி, உங்க பெரிய புள்ள இப்ப என்ன செய்றாரு ? '
' இங்க கவர்மென்ட் போஸ்டிங்குக்கு எட்டு வருஷமா வெய்ட் பண்றான். நீங்களே சொல்லுங்க... கஷ்டப்பட்டு அஞ்சி வருஷம் பீ.காம் படிச்சிட்டு ப்ரைவேட் வேலைக்கா போறது? விவசாயத்தைப் பாக்கலாம்னா, ஒரு பயலும் லேபர் வேலைக்கு வர மாட்றானுங்க. சரீ, நீங்க இருக்கறது ப்ரைவேட்டா, கவர்மேன்ட்டா? '
நான், 'அமெரிக்காவுல போலீஸ், மிலிடரி, போஸ்ட் ஆபீஸ் மாதிரி வேலையத் தவிர்த்து எல்லாம் ப்ரைவேட் தான். '
இதக் கேட்டதும் அவருக்கு ரொம்ப சந்தோசம். 'அதானப் பாத்தேன். யாருக்கு என்ன வேல தர்றதுன்னு வெள்ளக்காரனுக்குத் தெரியாதா? நாமப் போயி அவங்கள நிர்வாகம் பண்ண முடியுமா சொல்லுங்க? '
அடேங்கப்பா! அதுல உட்ட சந்தோஷத்த இதுல புடிச்சிட்டாரு!! ஆமா, நாங்கல்லாம் உங்கள என்ன பண்ணோம்? இங்க எல்லாம் நித்திய கண்டம்தான். வேல போனா, கவர்மென்ட் நிவாரண உதவி, ஒரு ரூவா அரிசி, இதெல்லாம் குடுக்காது.

மத்தபடி ஊர்ல கொஞ்சம் பழைய விஷயம் அப்படியே இருக்குது. துடிப்பான மரியாதையான, சின்னப் பசங்க, கள் மணக்கும் கிராமம், கோயில்லையும் ஒயின் ஷாப்லயும் இருக்கும் நெரிசல், குடிச்சிட்டு ரோட்ல விழுந்து கிடக்கற வெளியூர் ஜனங்க. பொதுவா பாண்டிச்சேரி, ரோட்ல போதையில விழுந்து கிடக்கிறதெல்லாம் வெளியூர் ஆளுங்கன்னு சொன்னா நம்புங்க.
அரசு சுற்றுலாத்துறை இப்போ டெய்லி பஸ் டூர் ஏற்பாடு செஞ்சிருக்கு. சீந்துவார் இல்லாம இருந்த ஊஸுடு ஏரி, இப்போ பிரபலமான டூர் ஸ்தலம். பிரபஞ்சன் தன்னோட மானுடம் வெல்லும், வானம் வசப்படும் நாவலுங்கள்ள இந்த ஏரியப் பத்தி எழுதி இருக்கார். அப்புறம் இந்த சுண்ணாம்பாறு இப்படி டூரிஸ்ட் ஸ்பாட் ஆகா மாறி இருக்கும்னு எதிர் பாக்கவே இல்ல. வில்லியனுர்ல ( என்னோட ஊர் !) பெரிய கோயிலும் இப்போ நிறைய ஜனம். இருக்கிற பிரச்னைல ஜனங்கள்ளாம், முதல்ல சிவன் கோயிலுக்குப் போயிட்டு, அப்புறம் மாதா கோயில்ல ஒரு மெழுகு வத்தி ஏத்திட்டு, அப்படியே போய் மசூதியில ஒரு தடவ ஒதிட்டுப் போறாங்க. ஒரு தடவப் போய்ப் பாருங்க.

No comments:

Post a Comment