Tuesday, May 21, 2019

யார் தந்தார் இந்த அரியாசனம் ?

பொதுவாகவே குஜராத்திகள் வியாபாரத்தில் சிறந்தவர்கள். பெரிய முதலீடுகள் அங்கு குவிந்து முதல்வர் மோடிக்கு நல்ல பெயர் வாங்கித் தந்தது.  பத்திரிகைகளும் அவருக்கு ஒரு பெரிய இமேஜை உருவாக்கி வைத்தது.  சிலிக்கன் வேலி பணக்காரர்கள் வித்தியாசமானவர்கள்.  ஹோட்டல் சர்வருக்கான டிப்ஸை, ஐபோன் ஆப் உபயோகித்துப் பிரித்துக் கொள்வார்கள், ஆனால் இந்தியாவிலிருந்து ஏதாவது சாமியார் வந்தால் கணக்குப் பார்க்காமல் பணத்தை அள்ளி இறைப்பார்கள்.  மோடி ஒரு தீவிர இந்துக் காவலர் என்று அவர்களுடைய புத்தியில் ஏற்றப்பட்டது. குஜராத்தில் அவருடைய வீர சாகஸங்களைப் பார்த்தவர்கள், அவரை எப்படியும் மேலுக்கு கொண்டு வர தம்முடைய பங்கும் பெருமளவு  இருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.


தமக்குக் கைவசமான போட்டோஷாப்பைக் கையில் எடுத்தனர்.  இதோ இந்த போட்டோவில்தான் பிள்ளையார் சுழி போட்டனர்.  சதா ஹார்ட்வெர் மைக்ரோ கோடில் புழங்கும் என் போன்றவர்களிடமே "இது குஜராத் ஹைடெக் நகரம்" என்று அடித்து விட்டனர்.  எத்தனை முறை மூக்கை  உடைத்தாலும் வெட்கப்படாமல் அடுத்த போட்டோ ஷாப் படம் வரும். சில ஆண்டுகளுக்குப் பிறகு விஜயகாந்த் கட்சியினர் கூட போட்டோஷாப் உபயோகப் படுத்தியதால் அதன் வீரியம் ஓரளவு குறைந்து விட்டது.

இந்தமுறை தெரிதல் கமிஷனுடன் கூட்டணி வைத்ததில் பிஜேபியின் வெற்றி ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டு விட்டது.  அதனால் வட அமெரிக்க வாழ் மோடி பக்தர்கள் ( NaMo - North American Modi Order) சமீபத்தில் ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளார்கள.  அதன் வரைவு நகல் (draft copy) லீக் ஆகியுள்ளது.  அதிலிருந்து சில விஷயங்கள் உங்கள் பார்வைக்கு.

1. மே 23 பாரத தேசத்துக்கு மிக முக்கியமான நாள்.  அன்றுதான் இந்தியாவின் கடைசி தேர்தலாக அமையும் வகையில் தேர்தல் கமிஷன் ஒத்துழைக்கும்.

2. அதற்கு அடுத்த மாதம் நாம் அனைவரும் கிருஸ்துவ நாடான அமெரிக்காவை விட்டுக் குடும்பத்தோடு பாரத நாட்டுக்குக் குடி பெயர்வோம்.

3. அப்படி உடனடியாக வரமுடியாத நிலையில் இருக்கும் NaMo உறுப்பினர்கள், கிருஸ்துவர்கள் மேனேஜர்களாகவும், தலைவர்களாகவும் உள்ள கம்பெனிகளில் இருந்து வேலையை ராஜினாமா செய்வோம்.

4. அப்படி உடனே வேலையை விட முடியாத நிலையில் இருப்பவர்கள் வேலை செய்தாலும் சம்பளம் வாங்க மாட்டோம் என்று உறுதி கூறுவோம்.

5. வெளி நாடுகளில் வேலை பார்க்கும் அனைத்து NaMo பக்தர்களும் உடனே வேலையை விட்டு பாரதத்துக்குத் திரும்ப வேண்டும்,

6. பாரத நாட்டில் MNC களில் வேலை செய்யும் பக்தர்களுக்கும் மேற்கண்டவை பொருந்தும்.

7. வெளிநாட்டு வேலை என்றால் இந்து நாடான நேபாளத்துக்கு மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவர் .

8. அதேபோல் நம் பாரத நாட்டில் மிஷனரி பள்ளிகளில் படிக்கும் நம் உறவினர்களின் பிள்ளைகள் அனைவரையும் உடனே வெளியேறி அருகில் உள்ள ஷாக்காக்கள் அல்லது இந்துப்பள்ளிகளில் சேர்க்கச் சொல்லி வலியுறுத்துவோம்.

9. சரித்திரப் புத்தகங்கள் அனைத்தும் திருத்தி எழுதப்படும்.  அர்ஜுன் சம்பத் தலைமயில் அதற்கு ஒரு குழு அமைக்கப்படும்.

10. தேசப்பிதா கோட்ஸேவுக்கு 5000 அடி உயரத்தில் தெற்கில் சிலை அமைக்கப்படும். இதற்காக தமிழகத்தில் 2000 ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு அதானியிடம் ஒப்படைக்கப் படும்.

11. வண்டலூர் - சென்னை 10 வழி  மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கு இடம் வேண்டி இருப்பிடங்களை இலவசமாகத் தந்த மைலாப்பூர்வாசிகளுக்கு மிக்க நன்றி.  இதைப் பார்த்து சேலம் 8-வழி போராளிகள் திருந்த வேண்டும்.

.....  இப்படி இன்னும் 50 பக்கங்களுக்கு மேல் இருக்கிறது.  நேரம் கிடைத்தால் மொழி பெயர்த்துப் போடுகிறேன்.