Monday, March 28, 2016

மெட்ராஸ் ஷேத்ரே



  
Disclaimer: எழுத்தாளர் ஜெயமோகனின் நெல்லை ஜங்க்ஷன் கீதையை சென்னை எக்மோருக்கு மாற்றியுள்ளேன்...
"ஹல்லோ,  துலுக்கானமா?  கிண்டி கெஜாவ எக்மோர் டேசன் கேட்டாண்ட ஸ்கெட்ச் போட்டுத் தூக்கறன்னு அட்வான்ஸ் வாங்கிக்னு 'கொக்கி அர்ச்சுனனும்'  'கோனாரு கோவாலும்' போனானுங்க.  இன்னாடா பண்றானுங்க இவ்வ்வ்ளோ நேரம்?" என்று பேட்டை பழைய வஸ்தாது, 'நொள்ளக்கண்ணு கபாலி', தன் மச்சானிடம் செல்போனில் கேட்டான்.
பழக்கப்பட்ட பெட்டிக்கடை பின்னால் மறைந்து நின்று கொண்டு செல்போனில் மெல்லிய குரலில் துலுக்காணம்: "தோ, மாமு,  நாகர்கோயிலு எஸ்ப்ரஸ்ல இருந்து கெஜாவும், மாமங்காரன் கன்ஸாமியும், கூட கொஞ்சம்பேரும் செட்டா வர்றானுங்கபா.  கோனாரு இப்ப கொக்கியக் கூட்டிக்னு டேசன் நடு சென்டர்ல நிறுத்தராம்பா.  அப்ப கோவாலு  சொன்னத நான் உன்னாண்ட சொல்றேன்.


கோவாலு: "இத்தப்பார்ரா.. அவந்தான் கிண்டி கெஜா.. கூட வர்றவன் அவனோட தாய்மாமன் கன்ஸாமி.  பழைய பிஸ்தா.  கோதாவுல எறங்குனா இன்னக்கும் பேட்டைல அவன அடிக்க எவனும் இல்ல.  அந்தாண்ட வரது 'கெடா குமாரு'.. சோத்துக்கைப் பக்கம் வரவன், ஆய்வார்ப்பேட்ட முன்சாமி,  அப்பால வரது ஜாம்பஜார் ஜக்கு.  அதாண்டா அந்த லூசு. அப்பால , வண்ணாரப்பேட்ட வில்ஸன்.  நல்லா பாத்துக்க."


ஒடனே நம்ம கொக்கி, சொக்காய்க்குப் பின்னால கைய விட்டுப் பொருளு இருக்குதான்னு ஒரு தபா செக் பண்ணிட்டு அவுனுங்க முன்னால கும்பல்ல ஒளிஞ்சிக்குனு அல்லாரையும் ஒரு லுக் உடறான்.   ஒடனே டர்ர்ருன்னு பேனரக் கியிக்கறாமாரி அயுவுற சத்தம்.  நம்மாளு கொக்கிதான் அப்பிடி அயுவுறான்.

கோவாலு: "ஏண்டா பன்னாட இப்டீ அய்வுற?"
கொக்கி: "அண்ணாத்த, இவுனங்கல்லாம் நம்ம பசங்கதான.. ஜக்குதான எனக்கு மூணு சீட்டு கத்துத் தந்தான். டுபாக்கூர் ரவியும், வில்சனும் நானும் டாஸ்மாக்ல பண்ணாத அக்குறும்பு இல்ல.. பர்ஸ்ட்டு பர்ஸ்ட்டு அரஸ்டானப்ப வெலங்கொட இன்னொரு காப்புல இருந்தது முன்சாமி கையிதான..  தலீவரே, எனுக்கு ஒண்ணுக்கு வரா மாரீக்கீது.. மூணு புல்லு ராவா அட்ச்சா மாரி கிர்ர்ர்னு சுத்துது.  நிக்க முடீல்ல..  தெரியாமத்தான் கேக்கறன், எவ்னோ ஒரு சோமாறி துட்டு குட்த்தான்ட்டு, நம்ம தோஸ்துங்களயே  தூக்கறது இன்னா நாயம்?"  

"தல, இவனுங்க அல்லாரும் ட்யூப் லைட்டுங்க.  கேனையனுங்க எவனாச்ச்சும் குவாட்ரும் ஆப் பாயிலும் வாங்கித்தந்தா போட்டுத் தள்ளிட்டு வருவானுங்க.  நமக்குன்னு ஒரு ரேஞ்சு இருக்குதுல்ல.   எதுக்குத் தலீவரே இதெல்லாம் ?  லம்ப்பா வர துட்டுக்கா? ஒரு மாசம் ஒக்காந்து குட்ச்சா காலி ஆய்டுமே. இந்த டிச்சுல எறங்கற கலீஜு வேலல்லாம் நமக்கு வாணாம்.  எங்க நைனா  லீஸ்ல எட்த்து வெச்ச குஜிலி கட கீது.  கம்னு போயி அதப் பாத்துக்கறேன்"

அப்டீன்னு சொல்லிட்டு, மறச்சி வெச்சிருந்த 'பொருள' எடுத்துக் கோனாரு கைல குட்த்துட்டு அப்டியே தரைல குந்திக்கனான் கொக்கி அர்ச்சுனன்.  கோனாரு ஒரு நிமிட் காண்டாய்ட்டாரு.  ஆனா ஆளு செம கில்லி வாத்யாரே.  ஒட்னே சமாளிச்சிக்னு பேசறாரு... 

கோவாலு: "ஏண்டா கொக்கி, ஒம்மண்டைல மசாலா எதாச்சும் கீதா? நைட்டு இன்னாத்தடா துன்ன?  சோமாறி,  ரெண்டு கட்டிங்கோட நிறுத்துடான்னு எத்னி தபா சொன்னன்?  டெங்குல போறவனே.  நமக்குல்லாம், என்னிக்கும் வரக்கூடாத பீலிங்க்ஸ்டா இது.  வந்தாக்கா, ஸ்ட்ரெயிட்டா பொழல் ஜெயிலுதான்.  பெரிய்ய லாடு லபக்குதாஸ் கணக்கா பேசற.  செய்றத பாத்தா கெய்வி மாரி ஜகா வாங்குற.  எய்ந்திர்றா பிஸ்கோத்து".
"இன்னாத்துக்கு இங்க வந்து பருப்பு மாரி பேசற?  இவனுங்கல்லாம் யார்ரா?  எல்லாம், பிளேடு கேஸுங்க.  ரீஜண்ட் இல்லாத பேக்குப்  பசங்களுக்கு நாயம் பேசற.  இவனுங்க இருந்தாலும் செத்தாலும் யாரும் கவலப்பட மாட்டாங்க.."

"தபார்றா மச்சி, இன்னைக்கி நாம இருக்கோம்.  இதே எக்மோர்ல முன்னாடி 'நாய் சேகரும்', 'பாட்டில் மணியும்' இருந்தானுங்க.  அதுக்கு முன்னாடி 'மாணிக் பாச்சா'ன்னு ஒர்த்தன் இருந்தான்னு சொல்லுவானுங்க.  இன்னக்கி நாம பல்பு வாங்குனா, நம்ம பசங்க அப்பால வருவானுங்க.   எந்தம்பி  கொரங்கு குப்பன் மேல இப்பவே நாலு கேஸ் கீது"


"டேய், நாம என்னைக்குமே இல்லாம இருந்தது கெடயாது.  இனிமேப்பட்டு இல்லாம இருக்கப் போறதுங் கெடயாது.  அத்த மட்டும் நாபகம் வெச்சிக்க. இருக்கறவன் நென்சி சந்தோசப் பட்றது, போனவன நென்ச்சி டாஸ்மாக்குக்குப் போறது நம்ம ரூட்டு இல்ல.  இந்தமாரி பீலிங்ஸ்லாம் சீரியல் பாக்கறப்ப வெச்சிக்னு அப்பால சைலண்டா வந்துடனும்.  அப்பதாண்ட நாம மன்ஸங்க".

"தெரியாமதான் கேக்கறன், நீ இப்ப பால்மாறனா இவனுங்க இன்னா நூறு வர்ஸமா வாயப் போறானுங்க?  இன்னிக்கு நீ வெட்லனா, நாளக்கி  எவனாவ்து வெட்டுவான்.  பிராய்லர் கோழிக்கு அறுவதாம் கல்யாணம் இருக்காடா?  நீ கொன்னா இவனுங்க இல்லாம போய்டுவனுன்களா?  இன்னோர்த்தன் வருவான்.. இதெல்லாம் என்னிக்குமே இருக்குண்டா பேமானி.  இவ்னுங்க ஆளுதான் மாறுவானுங்க, கேப்மாரித்தனம் அப்டியேதான் இருக்கும். ஒப்பனிங்கும் இல்ல, என்டும் இல்ல..  அப்டீன்னாக்கா,  நீ எவனப் போட்டுத் தள்ற?"
"சாவுன்னா இன்னான்ற ?  கேப்டன் ஆக்ட் பண்ண சத்திரியன் படம் பாத்தியா?  சத்திரியனுக்குக் சாவு கடயாதுடா  கய்தே.  கலீஜான சொக்காய மாத்திக்னு, பான்ஸ் பவ்டர் ஒத்திக்னு ஒடனே டாஸ்மாக் போறது மாறிடா"..

"நைனா, சொல்றதக் கேள்டா. நாம மன்ஸனுங்க.  ஆனா உள்ள இர்க்கர்து வேற.  இப்ப நீ இங்க இருக்க, ஓம் புத்தி வேலு மிலிட்ரில கொத்து பரோட்டால சால்னா ஊத்தித் துண்ணுது.  ஓம் புத்தியக் கொல்லனும்னா வேலு மிலிட்ரிக்குப் போவனும்.  அங்க போனா, அங்க நீ இருக்கமாட்ட இல்ல?"

"அதாண்டா அண்ணாத்த சொல்றன்.  'பொருள' வெச்சி அத வெட்ட முடியாது.  தண்ணி ஊத்தி நெனக்க முடியாது.  நெருப்ப வச்சிக் கொள்த்தவும் முடியாது.  அதும்பாட்னு சைலண்டா இருக்கும்.  அதுக்குக் காலோ கையா கெடயாது.  சொம்மா ரோசன பண்ணிப் பாரு,. ஆமா, நீ ரோசன செஞ்சிக் கிய்ச்சே.. அது நெனச்சாலும் புடி கெடக்காதுடா .  இங்க பாரு, 'வந்தது தெரியும் போவது எங்கே வழியில் நமக்கே தெரியாது..  வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த ஊர்லே நமக்கு எடமேது?.  கண்ணத் தொடச்சிக்கடா.."

"தோ, இந்த ரைலு வராமாரிதான் மன்ஸன் பொறக்றது.  ஒரே ஹாரன் இன்னா, சவுண்டு  இன்னா..  ரயிலு கெளம்பிப் போனா, ஏணி கீய உய்ந்தாமாரி தண்டவாளம் ஒண்டி இருக்கும்.  அதுல வேற ஒரு ரயிலு வரும்.."

"இன்னாமோ போ.  கத்தியக் கைல எட்த்துட்ட.  அப்பால அத வச்சி நாலு பேரப் போட்டுத் தள்னாதான் ஒனக்குப் பொயப்பு ஓடும்.  மேல போனா சொர்க்கம். கீயப் போனா பொழல் ஜெய்லு.  இப்ப நீ கத்தியக்  கீயப் போட்டுப் போனா நம்மாளுங்க ஒன்னப் பத்திக் கேவலமா நெனக்க மாட்டானுங்க? எத்தப் பத்தியும் நெனக்காத. போயி வெட்டு.  ஒனக்கு ஒன்னும் ஆவாது அண்ணாத்த சொல்றண்டா.."
"ஒர்த்தொர்த்தனுக்கும் ஒன்னு இருக்குதுடா. ஒர்த்தன் பேப்பர்ல எய்தி எய்தி வெட்றான், இன்னோர்த்தன் கறிக்கடைய்ல வெட்றான்.  அவன் அவன் வேலய அவனவன் செஞ்சானுங்கனா நல்லது.  இப்ப ஒன்ன கேஷ் கவ்ண்ட்டர்ல போட்டா வேல நடக்குமா?  துட்டு சேந்தா அப்றம் ஒன்ன கேரளாவுல இல்ல புடிக்கணும்?  இதாண்டா ஒன் தொய்லு. அத்தச் செய்யி, போறும்."

"நல்ல வேலக்காரன் என்னிக்குமே 'ஏன் செய்யணும், செஞ்சா இன்னா ஆவும்னு எத்தையும் யோசிக்க மாட்டான்.  சொன்னத செஞ்சிட்டு டாஸ்மாக்குக்கு நடையக் கட்டுவான்.  கடமைய செய்டா கபோதி.  பலன எதிர் பாக்காத.."

கோனாரு சொல்லி முட்ச்சதுக்கு அப்பால கொக்கி எயிந்து நிக்கறான்.  எங்க.. எங்கன்னு தேடறான்.  ஆனா அதுக்குள்ள டேசன்ல வந்து எறங்கவன்க எல்லாம் போய்ட்டானுங்க.

கொக்கி: "இப்ப இன்னா அண்ணாத்த செய்றது?  ஒரு டவுட் கேட்டா டக்குன்னு சொல்லி நிறுத்தாம டயாபட்டிஸ்காரன் ஒண்ணுக்குப் போனா மாறி சொல்லிக்கினே போறியே"..
கோவாலு: "சர்றா, இப்பா இன்னான்ற நீ ?  வந்தது போனது, வர்றது, எதுக்கும் பேஜாராவ மாட்டான் வாத்தியாரு.  நீ வாடா" ன்னு சொல்லி ரெண்டு பேரும் பக்கத்துல இர்ந்த டாஸ்மாக்கு உள்ள போறாங்க.  உள்ள ஒரு அட்டு டேபிள்ள ஒக்காந்துக்குனு ரெண்டு புல்லு, சிக்கனு ஆடர் பண்றானுங்க.  ஒரு புல்லு என்னாத்தப் பத்தும்னு கொக்கி சொல்றான்.  இன்னாத்த நீ கொண்டாந்த, இன்னாத்த நீ எட்த்துக்னு போறன்னு கோனாரு ஆரம்பிச்சாரு.  இனிமே பேஸ்னா, அப்டியே பாட்லத் தூக்கி அடிப்பேன்னு கொக்கி சொல்றான்.
அப்பால ரெண்டு பேரும் ஒர்த்தர ஒர்த்தர் பேலன்ஸ் பண்ணா மாறி ஆடிக்கிட்டே போறாங்க.  எங்கல்லாம்  வஸ்தாதான கொக்கியும், வாத்யாரான கோனாரும் இருக்காங்களோ அங்கல்லாம் பேலன்ஸ் இருக்கும்ன்னு சொல்லலாம்" என்று துலுக்கானம் சொல்லி முடிக்க, வானத்திலிருந்து பூமழை பொழிந்தது.




No comments:

Post a Comment