Showing posts with label gce. Show all posts
Showing posts with label gce. Show all posts

Tuesday, July 7, 2009

பாடல் பெற்ற ஸ்தலங்கள் - GCE Days - 5

GCE மக்களைப் பற்றிப் பினாத்துவதை சிறிது இடைவெளி விட்டுப் பின்னர் தொடருவேன். அதற்கிடையில் நாம் உலாவிய அந்த மண்ணைக் கொஞ்சம் பார்த்து வருவோமா? இதோ, வந்துட்டோம்ல...

அட்மின் பிளாக்
அடையாளம் - ஒரு புராதன கார் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். அது கல்லூரி முதல்வரின் கார். இன்னும் இருக்கிறதா என்று தெரியவில்லை. அரசாங்க அலுவலகத்தின் அத்தனை விசேஷங்களையும் கொண்டு, உள்ளே நுழைந்ததும் கொட்டாவி வரவழைக்கும், வெகுவாக போர் அடிக்கும் இடம். வருடத்தில் இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே அக்கவுண்ட்ஸ் பார்க்க செல்ல வேண்டியிருக்கும். ஸ்ட்ரைக் மற்றும் இதர கலக நாட்களில் மட்டும் ஜேஜே என்று இருக்கும்.

கோளரங்கம் ( planetarium )
எந்தக் கல்லூரியிலும் இல்லாத அற்புதமாக எங்களிடம் மட்டும் இருந்தது இந்த planetarium. ஆனால், உள்ளே யார் போய் பார்த்தார்கள்! அதைவிட சுவாரஸ்யமான விஷயங்கள் கட்டிடத்துக்கு வெளியே நடந்து கொண்டிருக்கும்.
'பனி விழும் மலர்வனம் .. உன் பார்வை ஒரு வரம்.. ' என்று எதோ ஜோடி கால்களைப் பார்த்து மெதுவாகப் பாடிக் கொண்டிருப்பார்கள். உதடுகள் அசையும், ஓர் வார்த்தையும் வெளி வராது. சிலர் தனியே யாரையோ ஆவலாக எதிர்பார்த்தபடி
' காற்று வாங்கப் போனேன்.. ஒரு கவிதை வாங்கி வந்தேன்.. அதைக் கேட்டு வாங்கிப் போனாள்.. அந்தக் கன்னி என்னவானாள்.. ' என்று பாடிக் கொண்டிருப்பார்கள். அந்த சமயம் வேறு யாருமே அவர்கள் கண்ணில் படமாட்டார்கள். கிட்டே போய்,
'என்னடா மச்சி, என்ன சேதி ?'
'ஹம்.. ஒண்ணுமில்ல. அதுசரி, உன்ன அங்க யாரோ கூப்புடறாங்க, போய்ப் பாரு '

இதற்கு மேல் அங்கே நின்றால் நமக்கு உதைதான் விழும். அந்தக் கட்டிடம் நிறைய மரம்-செதுக்கும் கலைஞர்களையும் உருவாக்கியிருந்த்தது. அங்கிருக்கும் மரங்களின் மேல் பட்டையைப் பார்த்தால் என்ன மரம் என்றே சொல்ல முடியாத அளவுக்கு அத்தனை உளியின் வேலைகள். கோயில் மரத்தில் தொங்கும் பிரார்த்தனை முடிச்சுகள் போல எத்தனையோ பெயர்கள். கல்லூரியின் சமூக கலாச்சாரமே அதிலிருக்கும்.
முதலாம் ஆண்டு எங்களை ஒரு டெமோ காட்ட அங்கு அழைத்துச் சென்ற போது, அங்கே மரத்தடியில், வின்னர் கைப்புள்ள போல் ஒரு சீனியர். 'எதிர்பார்த்த ஆள் ' வராத கடுப்பில் இருந்த அவன், இருந்ததிலேயே நோஞ்சானாக இருந்த என்னைக் கூப்பிட்ட்டான். "ஏண்டா, லெக்சரர் கூப்பிட்டா இங்க வந்துடறதா ? இன்னைக்குத்தான் கடைசி, இனிமேல் 'பிள்ளைங்க' தவிர யாராவது இங்க வந்தீங்க, மவனே தொலைஞ்சீங்க" என்று சொல்லித் தலையில் தட்டி அனுப்பினான். எனக்குத் தெரிந்து, பாவம், அவன் கடைசி வருடம் வரை, அப்படித் தனியாகத்தான் இருந்தான்.
ஒரு தடவை பார்த்த அணி, அடுத்த இரண்டு மாதத்துக்கும் அப்படியே இருந்தது என்று சொல்ல முடியாது. ஆறு மணி மெகா சீரியலில் அண்ணன்- தங்கையாக வருபவர்கள், எட்டு மணி மெகா சீரியலில் பிசினஸ் எதிரிகள் ஆவது போல்தான் இங்கும் மாதா மாதம் அணி மாற்றம் நடைபெற்றபடி இருக்கும். என்ன கொடும சார் இது? ( நம்ம G.K. சொல்றார்.. " பல்லிருக்கிறவன் பட்டாணி தின்றான். நமக்கென்ன வந்தது? சும்மா பாத்து என்ஜாய் பண்ணிட்டுப் போடா " ).

சென்ட்ரல் கேட்
பெயர்க்கு ஏற்ற மாதிரி 'central' கேட். நாங்கள் படித்த காலத்தில் கூரை வேய்ந்த இரண்டு (நாயர்தான்!) டீக்கடைகள். வருத்தப்பட்டு பாடம் படிப்பவர்களுக்கு இளைப்பாறுதல் தரும் இடம். அந்த மாஸ்டர் போடும் அற்புதமான டீ போல வெகு சில இடங்களில்தான் சாப்பிட்டிருக்கிறேன். ஆனால் அவர் கையை மட்டும் பார்க்கக்கூடாது. அப்போதெல்லாம் லேடீஸ் அங்கு வரமாட்டார்கள் என்பதால் பல ஊர் வட்டார வசைகள் பிரவாகமாக ஓடும். அந்த டீக்கடை நாயர், காலேஜைச் சுற்றி நிறைய இடம் வாங்கிப் போட்டதாகக் கேள்விப்பட்டேன். விட்டால் காலேஜையே வாங்கியிருப்பான்.

ஆடிட்டோரியம்
'நானும் ரௌடிதான், ஆனா ஒரு பயலும் மதிக்க மாட்ரானுங்களே' என்றபடி டவுசர் கிழிந்த டார்ச்சர் வகையறாக்கள் பகலில் சுற்றும் இடம் இது. இதில் சில பேருக்கு ஜீப்பில் முண்டியடித்து ஏறி விடும் வாய்ப்பு கிடைத்து planetarium போய்ச்சேர்ந்து விடுவதும் உண்டு. நிறைய புதுக் கவிஞர்களை உருவாக்கும் ' ஸ்பெஷல் சிகரெட்' சுருட்டப் படுவதும் ஆடிட்டோரியம் பின்பகுதியில்தான். வருடத்துக்கு மூன்று கலை நிகழ்ச்சிகள் நடந்தால் பெரிய விஷயம். வெளியே 'கோயிந்து' போலிருக்கும் என்னைப் போன்றவர்கள் எல்லாம் உள்ளே போனால் ரகளைதான். பாட்டுக் கச்சேரி மேடையில் நடக்கும்போது, கீழே எங்களுடைய டேன்ஸ் கச்சேரி பட்டையைக் கிளப்பும். மேடையிலேயே இங்கிலிஷ் நடனம் ஆடக்கூடிய 'திறமை' வாய்ந்தவன் P.சுரேஷ். அதென்னவோ எப்பொழுதும் இளமாறன் சைசில் உள்ளவர்களிடம் இரவல் வாங்கிய பேண்டில்தான் சுழன்று சுழன்று டான்ஸ் ஆடுவான். பிறகுதான் தெரிந்தது, டான்ஸ் முடிந்ததும், பேன்ட் பெரும்பாலும் கிழிந்து விடும் என்ற ரகசியம். ஒரு முறை அஷோக் தனி ஆளாக பெரிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்து அசத்தி இருந்தான். என்னவோ அதற்கப்புறம் மவுன சாமியாராகிவிட்டான். அந்த மவுன சாமி இங்கு Portland பக்கத்தில் ஆசிரமம் அமைத்திருப்பதாகக் கேள்வி.

டாக்டர் மஞ்சமுத்து கிளினிக்
ஹாஸ்டலுக்கு உள்ளேயே இப்படி ஒரு இடம் இருந்ததே ரொம்பப் பேருக்குத் தெரியாது. இந்த இலவச க்ளினிக்குக்கு மாதத்திற்கு மூன்று பேஷன்ட் வந்தாலே அபூர்வம். ஒருமுறை வயிற்று வலிக்கும், அடுத்த முறை ஜூரத்துக்கும் போனேன். இரண்டு தடவையும் அதே மாத்திரையையே கொடுத்தார். இருந்தாலும் கைராசிக்காரர் என்பதால் உடம்பு சரியாகிவிட்டது. இங்கு அமெரிக்காவில் மட்டும் என்ன வாழ்கிறதாம்?

தாபா
மெஸ்ஸில் சாப்பிட்டு நாக்கு செத்தவர்களுக்கும், பணம் கட்டாததால் மெஸ்ஸிலிருந்து விரட்டப் பட்டவர்களுக்கும் தாபாதான் புகலிடம். இங்கே ஐந்து ரூபாயில் சாப்பிட்ட முட்டைப் பொரியலும், மீல் மேக்கரும், கொடுத்த சுவையும் திருப்தியும் வேறு எங்கும் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால், அடிக்கடி சாப்பிட்டால் மேலே குறிப்பிட்ட கிளினிக் தான் செல்ல வேண்டும்.

லைப்ரரி
பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்து விட்டுப் போனபோது அவர்கள் கொண்டு வந்த புத்தகங்களையும் இந்த லைப்ரரியில்தான் விட்டு விட்டுப் போனார்கள் போலிருக்கிறது. சோவியத் யூனியன் மிர் பப்ளிஷர்ஸ் புத்தகங்கள் கொஞ்சம் கிடைக்கும். அது தவிர, உள்ளே நல்ல காற்று வரும். லைப்ரரியன்தான் முதன் முதல் குருவிக்கூடு ஹேர் பாஷன் அறிமுகம் செய்தவர். அவர், அசிஸ்டன்ட், படிக்க வந்தவர்கள், எல்லோரும் பாரபட்சமின்றி தூங்குவார்கள். இப்போது ஏ.சி. வசதி செய்துவிட்டார்களாம். சுகம். அப்படியே கொஞ்சம் புத்தகங்களையும் வாங்கிப் போட்டா, பசங்க படிப்பாங்கல்ல ?

கருப்பூர் கேட்
மாலை வெயில் மங்கியதும், சில ஆட்கள் வருவதும் போவதுமாக இருப்பார்கள். சிலசமயம், பஞ்சரான உடம்பும், ஆஸ்பத்திரி கட்டுமாக ஓரிருவர் கருப்பூரிலிருந்து திரும்பி வருவர் ( சண்டையின்னு வந்தா சட்ட கிழியறது சகஜந்தானே ) . மேலும் விபரமாக எழுதினால் ஆட்டோ வரும் என்ற பயத்தில், இதை இப்படியே விட்டு விடுகிறேன். இப்பொழுதெல்லாம் ஆட்டோவில் உருட்டுக் கட்டைக்கு பதிலாக தமிழ் பட டிவீடீக்களைக் கொண்டு வருகிறார்களாமே ( லூசுப் பையன் சொல்றான் ). நானெல்லாம் வார இறுதி மதியங்களில் மோர் சாப்பிட்ட மயக்கத்தில், வழி தவறி இந்தப் பக்கம் வருவதோடு சரி.

பிள்ளையார் கோயில்
இந்த மிகச் சிறிய கோயில் மிகவும் ரம்மியமான ஒரு லொக்கேஷனில் அமைக்கப்பட்டிருக்கிறது. வெட்டவெளியில் வீசும் காற்றில் கோயில் மணி தானாக லேசாக ஆடி, அடித்துக்கொள்ளும். வழக்கம்போல பரீட்சை சமயங்களில்தான் எல்லோருக்கும் நினைவு வரும். எனக்குத் தெரிந்து, செந்தில் நாயகம்தான் ரெகுலர் விசிட்டர். நானும் அவ்வப்போது உடன் சென்று மணியடித்து விட்டு வருவேன்.

லேடீஸ் ஹாஸ்டல்
இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நாங்கள் வெளியே போனதும் அடுத்த ஆண்டே வந்து விட்டது. ( நல்லா இருப்பிங்களா ? உக்காந்து யோசிச்சான்களோ ... )

முன் பதிவு: சேலத்து சித்தர்கள் - GCE days part 4.

Sunday, June 21, 2009

சேலத்து சித்தர்கள் -- GCE days part 4

GCE Salem Siddhar

GCE Salem Hostel Days .. cont



ஒரு வாரமாக சித்தர்கள் தொடர்பான சில மின்னஞ்சல்களும் குறுஞ்செய்திகளும் எனக்கு வந்து கொண்டிருந்தன. படிக்கிற காலத்தில் கடுமையான வறுமையின் காரணமாக விரக்தி மேலிட்டு சித்தர் பாடல்கள் படித்திருக்கிறேன். மத்திய வயதைக் கடந்த பின்னர் மறுபடியும் படித்துப் பார்த்தால் அவற்றின் perspective வேறு மாதிரி இருக்கிறது. நான் வளர்ந்து திரிந்த பாண்டிச்சேரியும் சித்தர்கள் உலவிய மண்தான். ஜிப்மரிலிருந்து மூன்று கி.மீ. தூரத்தில் இரும்பை என்னும் கிராமத்தில் மகா காளீஸ்வரர் கோயில் உள்ளது. இங்குதான் கடுவெளி சித்தர் இருந்தார். அவருடைய கீழ்கண்ட பாடலை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
நந்தவனத்தில் ஓர் ஆண்டி. அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டு வந்தான் ஒரு தோண்டி. அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி.

பாமரர்களோடு நெருங்கிப் பழகிக் கொண்டு, கட்டமைப்புக்கு அடங்காத, எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத social scientist -களை சித்தர் என்று சொல்வார்கள். புதுச்சேரியில் வாழ்ந்தபோது, மகாகவி பாரதியும் ஒரு சித்தர் என்றே அறியப்பட்டார். என்னைப்போன்ற பகுத்தறிவுக் குஞ்சுகளுக்கு ( பறவைக் குஞ்சு என்பது போலப் பொருள் கொள்க ) முன்னோடி சிவவாக்கியர். இவர் பாடல்கள் இன்றைய தேதிக்கும் புரட்சிதான்.

இப்போது தலைப்புக்குள்...

சேலம் அ.பொ.கல்லூரியில் காமெடி சித்தர்களுக்கும் கலக்கல் சித்தர்களுக்கும் பஞ்சமே இருந்ததில்லை. இதில் பெயர்களை மட்டும் விடுகதை போல் உங்கள் யூகத்துக்கு விட்டு விடுகிறேன்.

ஒரிஜினல் குகை சித்தர் : சேலம் நாகா-மினி வழியாகப் போகும்போதெல்லாம் ( படம் பார்க்க அல்ல ) இந்த சித்தரைப் பார்த்து, ' என் இந்த ஆள் இங்கேயே இருக்கான்' என்று யோசிப்பேன். அவரது வாசமே அங்கே அருகில் தான் என்பது பிறகுதான் தெரிந்தது. பெரும்பாலும் இங்கிலீஷ் பேசும் கோடீஸ்வர சாமியார்களின் புத்தகங்கள் வாசிப்பார். கலா ரசிகர்.

குடும்ப சித்தர் - (குதம்பை சித்தரின் மரூவு ) 'கருமமே' கண்ணாயினார். மற்ற எவர் அருமையும் பாரார். இவர் திருப்பாதங்கள் படாத சேலம் முட்டுச் சந்துகளும் மூவன்னா சந்துகளும் மிகக் குறைவு. தற்சமயம் சாமி ஒடுங்கி, பெரிய பொறுப்பான பதவியில் இருப்பதாகக் கேள்வி.

அழுக்கணி சித்தர் - பிறரின் phermone ஹார்மோன்களுக்கு அதிகம் வேலை வைத்தவர். எந்த மொழியிலும் இவருக்குப் பிடிக்காத வார்த்தை 'சோப்பு'. மற்றவருக்காக இரங்கும் தயாள குணம் மிக்கவர். எலக்ட்ரான் அலைகள் போல் அங்கிங்கெனாதபடி எங்கும் எப்போதும் இன்று வரை அமைதியற்று அலைந்து கொண்டிருப்பவர்.

கைலாசநாதர் : பெரும்பாலும் கால்கள் தரையில் பாவாது ஒரு அடி மேலேயே நடப்பவர். மற்றபடி யாருக்கும் தீங்கிழைக்காதவர். என்னிடம் மட்டும் இவருக்கு ஏதோ வாஞ்சை. தற்சமயம் கீழிறங்கி பூமியில் கால் பதித்து நடப்பதாகக் கேள்வி.

புலிப்பாண்டி சித்தர் : சதா அங்குமிங்கும் அலைந்து கொண்டு, எதிர்பட்டவர்களிடம் பந்தா செய்வதா, அல்லது பயப்படுவதா என்று குழம்பி, எக்ஸ்பிரஸ் வேகத்தில் பேசுவார். செல்வச் செழிப்பான வீட்டில் இருந்து வந்தாலும், இந்தப் புண்ணியவான் தயவால் சென்ட்ரல் கேட்டில் கணேஷ் பீடி விலை ஏறியது. பில்டர் சிகரெட்டின் இறுதி வரை இழுத்து இன்பம் கண்டவர்.

பாம்பாட்டிச் சித்தர்: இவர் திறந்த சோடா பாட்டில்களுக்குக் ( குடிப்பதற்கு அல்ல) கணக்கே இல்லை. கழகக் கட்சித் தலைவர் ஆவதற்குரிய எல்லா சிறப்புத் தகுதிகளும் நிரம்பியவர். அரசியலுக்குச் சென்று கும்மி அடிப்பார் என்று நான் நம்பிய சிலரில் இவரும் ஒருவர்.

அககறைசித்தர் : ஹாஸ்டலில் எல்லோரும் நலமாக இருக்கிறார்களா என்று தினமும் இரண்டு வேலை ரவுண்ட்ஸ் வருவார். காசு வாங்காமல் 'வார்டன்' வேலை பார்த்தவர், நான்கு வருடங்களும்! .

புத்தக சித்தர்கள் : ஒருவர் குணத்தில் ரத்தினம், கணக்கில் புலி. மற்றவர், பேசினால் வசந்தம் வீசும். இருவர் கையிலும் எப்போதும் புத்தகம் இருக்கும். புத்தகம் இல்லாத போது, குளியலறை டவல் இருக்கும் ( அனேகமாக, குளிப்பதற்கு என்று நினைக்கிறேன் ) .


கீழே உள்ள வரிகள் யாரைக் குறிப்பிடுகின்றன என்று தெரிகிறதா? தெரிந்தால் எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

ஒரிஜினல் சித்தர் பாடல்கள் :

1. தாவாரம் இல்லை, தனக்கொரு வீடில்லை
தேவாரம் ஏதுக்கடி குதம்பாய் தேவாரம் ஏதுக்கடி

2. மாங்காய்ப் பால் உண்டு மலை மேல் இருப்பார்க்கு
தேங்காய்ப் பால் ஏதுக்கடி குதம்பாய் தேங்காய்ப் பால் ஏதுக்கடி

3. செத்தாரைப் போலத் திரியும் மெய்ஞானிக்கு
கைத்தாளம் எதுக்கடி - குதம்பாய் கைத்தாளம் எதுக்கடி

4. பட்டணம் சுற்றிப் பகலே திரிவோர்க்கு
முட்டாக்கு எதுக்கடி - குதம்பாய் முட்டாக்கு எதுக்கடி.

உல்டா வரிகள்:
5. 'பாட்டில்' கலந்திடவே அங்கே ஒரு
பத்தினிப் பெண் வேணும் - எங்கள்
'கூட்டுக் களி'யினிலே - கவிதைகள்
கொண்டு தரவேணும்.

6. எங்கிருந்தோ வந்தான் 'இடைப்பாடி' நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்.



=========
முன்பதிவு : நித்தமும் நாடகம் .. நினைவெல்லாம் காவியம் - GCE days part 3..

Wednesday, June 3, 2009

நித்தமும் நாடகம் .. நினைவெல்லாம் காவியம் - GCE days part 3

GCE Salem Hostel BBB

GCE Salem Hostel Days 2


ஹாஸ்டல் தினங்கள் தொடர்கிறது...
என்னுடைய க்ளாஸ்மேட் பத்ரி ஹாஸ்டல் எதிரிலிருந்த பனைமரத்தடிக்கு அழைத்துச் சென்ற புண்ணியவான். பெரும்பாலான மெக்கானிகல் மக்களுக்கு அது ஒரு தீர்த்த யாத்திரை ஸ்தலம். நயம் சரக்கு. அந்த சுர் என்று ஏறும் அனுபவம் வேறு எதிலும் வரவில்லை. அந்தப் பரமானந்தத்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்த மகான் பத்ரி வாழ்க! ஒவ்வொரு வெள்ளிக்கிழைமையும் மாலை குரூப் குரூப்-ஆக பாட்டும் சிரிப்புமாக மக்கள் மெஸ் பக்கம் வந்தால், பனைமரத்தடியான் நல்ல கல்லா கட்டியிருக்கிறார் என்று அர்த்தம். இன்னும் சில கோஷ்டி (BJM, DS ), காலையில் உற்சாகப் பானம்
சாப்பிட்டு விட்டு வகுப்பறை போன கதைஎல்லாம் உண்டு.

நிலையில்லாமல் ஓடுவதும்
நினைவில்லாமல் பாடுவதும்
பகைவர் போலே பேசுவதும்
பருவம் செய்யும் கதையல்லவா

இப்போது பலர் திருமணம், குழந்தைகள் என்று ஆன பின் எல்லாவற்றையும் விட்டு விட்டதாகக் கேள்வி. திருந்துங்க, ஆனா ரொம்ப திருந்தாதீங்க.

என்னுடைய மூன்றாம் ஆண்டு ரூம் மேட் சேகர் அந்தக் காலத்தில் ஒரு அப்பாவி. அநியாயத்துக்கு சாந்த சொரூபி, பயந்த சுபாவம். உருவத்துக்கும் உள்ளத்துக்கும் சம்பந்தமே இல்லாத வேலூர் வள்ளலார். அவனை மிரட்டும் ஒல்லியான நபர்கள் ரவிசங்கர் , நமச்சிவாயம் ஆகியோரைப் பார்த்தால் நமக்கே பாவமாக இருக்கும். ரெண்டு பேருக்கும் மம்முட்டியின் கணேஷ் பிராண்ட் தான் பிரியம். இதில் நமச்சிவாயம் இலந்தைப் பழம் பாடலையே மேலும் பக்திப் பரவசமாக மாற்றிப் பாடியவர். நமசிவாயம் எங்கள் ரூமுக்குள் வரும்போதெல்லாம், ஏதோ தசாவதாரம் படம் பார்க்கக் கூப்பிட்டது போல சேகரின் முகம் வெளிறிப் போகும். ரவிசங்கர் அப்போதே படிப்பாளி.
ஒரு முறை வேலை நிமித்தம் வேலூர் சென்றபோது சேகர் என்னை வந்துப் பார்த்தான். உடனே எனக்கு அந்த ஹோட்டலில் பயங்கர மரியாதை. சேகர், வேலூரில் மிகப் பெரிய கோடிச்வரர் பெண்ணைக் கல்யாணம் செய்திருந்த விஷயம் அப்போதான் தெரிந்தது. அவர்கள் தொழுவத்தில் இருபதுக்கும் மேற்பட்ட கார்கள். பிறகு நான் பெரியார் பஸ்ல ஊருக்கு வந்து சேர்ந்தேன்.

விடுதி கேம்பஸில் பலர் பல விதங்களில் வசீகரமானவர்களாக இருந்தனர். யாரையும் காயப்படுத்தாத ஜி.கே. கண்ணன், முக்கியமான கிரிக்கெட் பிளேயர். நாடகங்களில் சிவன் வேஷம், வினு சக்கரவர்த்திக்கு டூப் போட ஏற்ற ஆகிருதி. ஹாஸ்டல் வாழ்க்கையை நன்றாக அனுபவித்து வாழ்ந்தவன். சினிமாவில் சேருவான் என்று நினைத்தேன், இப்போது சென்னையில் பிசினஸ் செய்வதாகக் கேள்வி. பலாப்பழத்து மேல் ஈக்கள் போல் ரவிராஜைச் சுற்றி எப்போதும் நண்பர்கள். சரமாரியான டைமிங் ஜோக்குகள். நெற்றியில் ஜோக் எழுதி ஓட்டியதைப் போல பார்த்ததுமே சிரிப்பு வரும். மிகவும் சுவாரஸ்யமான ஆள். இவனும் சினிமா துறைக்கு செல்வான் என்று நினைத்திருந்தேன். இப்போது ஓஹையோவில் வாசம். ரவிராஜ் குரூப்-ல இருந்த இன்னொரு ஆள் : " இந்த இது இதுன்றதுக்கு அந்த இது சரி வராது. வேற இத வெச்சி இதுன்னம். போன தடவ இது பண்ணாத லைட்டா இதுன்னா கூட போறும்".. இத இதுன்றது யார் தெரிகிறதா? என்னோட neighbor all-round sportsman நம்ம இளங்கோ தான். ennudaiya க்ளாசில் என்னுடைய பெஞ்ச்-மேட். என்னைப் பலமுறை மேடத்திடம் மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்க வைத்ததற்கு நன்றி உடையவன் ஆவேன்.

மேற்கண்ட அலப்பறைக் கூட்டத்தில் வேறு முக்கியமான ஆள் நம்முடைய இம்சை அரசன், 'வைத்தி' விஜயராமச் சந்திரன். இந்த வைத்தியின் க்ளோன் பற்றி ஒரு பெரிய புத்தகமே போடலாம். எந்தக் கூட்டத்திலும் புகுந்து சேதாரம் இல்லாமல் வெளியே வரக்கூடிய ஆள். நாரதர் வேஷமா? உடனே புக பண்ணலாம். பேசி ஜெயிக்க முடியாது. எனக்கும் ரொம்ப தோஸ்த். கொஞ்சம் முயற்சி செய்திருந்தால் வடிவேலுக்குப் போட்டியாக வந்திருக்கலாம். எல்லா வஸ்துக்களையும் தயங்காமல் பரிசோதனை செய்து பார்த்தவன். இப்படிப் பட்ட மகான் சென்னைக்குக் குடி பெயர்ந்ததால் ஸ்வாமி மலை தப்பித்தது. விஜயராமனின் சமீபத்திய புகைப்படம் பார்த்தேன். அதே கண்கள்!


இன்னும் வருவார்கள்.....

Saturday, May 16, 2009

புத்தகம் பையிலே.... புத்தியோ பாட்டிலே - GCE days - part 2

GCE Salem Admin Block

GCE Salem Hostel Days


நான் சுற்றிய நண்பர்கள் மற்றும் என்னுடைய ரூம் மேட்ஸ் பற்றி கொஞ்சம். ஒரு சின்ன பெட்டி, தலையணை மற்றும் போர்வையுடன், எனக்குத் தந்த ரூமுக்குள் நுழைந்த போது ஏற்கனவே வந்து சேர்ந்த நான்கு பேர் திருவென்று விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். பாண்டிசேரிக்காரர்கள் புவனேஸ்வரன், முனாவர், இமாச்சல் தேவிராம், மணிப்பூர் சரத் சந்த். இதில் நான்தான் பூச்சி மாதிரி ரொம்ப சின்னதாக இருந்தேன்.
புவனேஸ்வரன் ஏற்கனவே என்னுடைய ஸ்கூலில் கிளாஸ்மேட். நல்ல படிப்பாளி, அறிவாளி. அதைவிட நல்ல முன்கோபி. இப்போது புதுவை ப்ளானிங் துறையில் வேலை. முன்பே சொன்னது போல, 'சகல' கலைகளையும் சேலம் கற்றுத் தந்தது.
முனாவர், எங்களோட போட்டி ஸ்கூல். ரொம்ப ப்ரில்லியன்ட். எஞ்சினியரிங் மேத்ஸ் எல்லாம், சும்மா ஒரு லுக் விட்டுட்டு பிரமாதமா போடுவான். நல்ல செஸ் பிளேயர். ரஷ்யப் பத்திரிகையில் வரும் செஸ் புதிர்களை சால்வ் செய்வது இவன் பொழுது போக்கு. கோபமே வராத ஜென்டில்மேன். இப்போது சுவிஸ் நாட்டுல ஆல்ப்ஸ் மலை அடிவாரத்துல குடும்பம். அடிக்கடி ஈமெயில் போக்குவரத்து உண்டு.
தேவிராம் இமாச்சல் பிரதேசத்தில் மண்டி என்ற ஊரிலிருந்து வந்தவன். மிக மிக மிக டைட் ஆக ட்ரஸ் போடும் ஆள். எங்கே இவன் பேன்ட் கிழிந்து விடுமோ என்று நாங்கள் பயப்படாத நாளே இல்லை. இவனது ஒரே ஆசை, எப்படியாவது நடிகை ஸ்ரீதேவிக்கு ஒரு முத்தம் கொடுப்பது, முடிந்தால் கல்யாணம் செய்து கொள்வது என்பதுதான். அதற்காகவே படிப்பதற்காக வந்தானாம். வாரம் ஒருமுறை இண்லேண்டு லெட்டரில் ஸ்ரீதேவிக்கு லவ் லெட்டர் எழுதி, அதை எனக்குப் படித்து, பொருள் சொல்லி பாடாய் படுத்துவான். அதன் பிறகு ஸ்ரீதேவியைச் சந்தித்தானா என்று தெரியவில்லை. இப்போது வேண்டுமானால் மறுபடியும் முயற்சி செய்து பாக்கலாம்.
சரத் சந்த் எங்களுக்கு பாடி கார்ட் மாதிரி. அவன் கூட சென்றால் சீனியர்கள் எங்களைக் கண்டுகொள்ள மாட்டார்கள். தன்னுடைய தம்பியை எம். எல்.ஏ. ஆக்கப் போவதாகச் சொல்லிக்கொண்டிருப்பான்.

எங்கள் பக்கத்து ரூமில், சுஜித், குமரன், மதியழகன், அண்ணாமலை ஆகியோர் இருந்தனர். அப்போது கல்லூரியிலேயே நன்றாக இங்கிலீஷ் பேசத் தெரிந்தவர்களில் சுஜித் முக்கியமான் ஆள். சுஜித்தைப் பார்த்து, 'ஒன்றானவன்.... உருவில் இரண்டானவன்' என்று பாட்டுப் பாடி, குமரனிடம் அடி வாங்கியது இன்னும் நினைவில் இருக்கிறது. சுஜித் இப்போ ஒரு பிசினஸ்மேன். கொடிகாத்த குமரன் திருப்பூருக்கு பெருமை சேர்த்தவர் என்றால், குடியாத்தம் குமரன் கருப்பூருக்கு பெருமை சேர்த்தவர். 'எங்கெல்லாம் தேடுவதோ.. எழில் மேவும் குமரா நின் அருள் வேண்டி தினமும் நான்...... ' என்று பாடினால், புளங்காகிதம் அடைந்து சென்ட்ரல் கேட் கடையில் டீ வாங்கித் தருவான். ஆனால் இந்த ட்ரிக் நிரம்ப நாள் ஓடவில்லை. அதே ரூமில் இருந்த மதியழகனை, 'சரோஜா தேவி ' என்ற அடைமொழியாலே ரொம்ப நாள் அழைத்தார்கள்.

எங்கள் ரூமுக்கு frequent visitor வெங்கி ( விருத்தாசலம் வெங்கடேசன் ). நல்ல புட்பால் பிளேயர், பாடகன், ரசிகன், நல்ல நண்பன். என்னுடைய ரூமில் அடிக்கடி பாட்டுக் கச்சேரி நடக்கும். இவன் பந்தாட்டத்துக்கு நிறைய ரசிகர்கள் என்றால், பாட்டுக்கு நிறைய ரசிகைகள். 'பாவை என் பதம் காண நாணமா... உந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா...... ' எனக் காத்துக்கிடந்தவர்களை நான் அறிவேன். விடுமுறையில் ஊருக்குப் போகும்போது சக பயணி. டவுனுக்குப் போய் நிறைய எம் .ஜி.ஆர் படங்களாகப் பார்த்திருக்கிறோம். 'ஆயிரத்தில் ஒருவன்' பார்த்து விட்டு, நல்ல மழையில் குதிரை வண்டியில் நாலு-ரோடு வந்தது நினைவு இருக்கிறதா?
கடைசியாக என்னுடைய ஸ்கூல் கிளாஸ்மேட் கல்யாணத்தில் பார்த்தது ( வெங்கியின் முறைப் பெண், இப்போது என் கிளாஸ்மேட்டின் மனைவி ) .

இன்னும் வருவார்கள்......
முன் பதிவு: Baski's lounge: எண்ணமே சுமைகளாய்.. இதயமே பாரமாய் - GCE நாட்கள்

Monday, May 4, 2009

எண்ணமே சுமைகளாய்.. இதயமே பாரமாய் - GCE நாட்கள்

Salem GCE days - Part 1


ரெண்டு நாளுக்கு முன்னால மதியம் ரொம்ப போரடிச்சிப் போய் நாமளும் ப்லாக பண்ணலாம்னு ஆரம்பிச்சேன். என்ன எழுதறதுன்னு யோசிச்சப்ப திடீர்னு பழைய claasmate சுந்தர் கிட்டருந்து ஒரு ஈமெயில். என்னடான்னு பாத்தா எங்க சேலம் காலேஜ் மக்கள் லிஸ்ட் சேக்க ஆரம்பிச்சிருக்கார். ஒவ்வொருத்தர் முகமா கண்ணு முன்னால வந்து போகுது. சுந்தர், ரொம்ப நன்றிப்பா . அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பர்களே.. பொக்கிஷமாக நெஞ்சில் சுமந்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே.
ஷன்முகேச்வரன் : - திட்டினாலும் சிரித்துக்கொண்டே திட்டியவன். நம்பவே முடியவில்லை இவனது மறைவுச் செய்தி. Prof.கங்காதரின் ஆதர்ச மாணவன். KRP க்கே பிடித்த அதிசயப் பிறவி.
ஹாஸ்டலில் எங்கள் பலருக்கு ஆசிரியராக இருந்தவன். என்னைப்போல மர மண்டைகளுக்கும் பொறுமையாய் சொல்லித் தந்த ஆசான். எங்கள் தகுதி பாராமல் பாசமாய் பழகினாய்.
நேரங்காலம் பார்க்காமல் யார் அழைத்தாலும் சென்று விடுவாயே ஷன்முகேசா, அழைத்தது காலன் என்று தெரிந்துமா சென்றாய் ?

லெஸ்லி, வசந்தன் & co : தமிழ்வாணன் , சாண்டில்யன் படித்துக்கொண்டிருந்த எங்களை நல்ல எழுத்தாளர்களையும் நல்ல தமிழை சுவாசிக்கக் கற்றுத்தந்தவர்கள். . கொஞ்சம் பொறுமை (நமக்கு!) இருந்தால் பழக மிகவும் இனிமையானவர்கள். நீங்கள் எங்கிருந்தாலும் சகலசவுபாக்கியங்களையும் பெற்று வாழுங்கள்.

ஜாலி கோஷ்டி: பாட்டு (?) பாடிக்கொண்டே சமையல் (?) செய்யும் நிமலேந்திரன், வகை வகையாக விசில் அடிக்கும், சரளமாக ஜோக் அடிக்கும் ரவிராஜ், கொசுவையே திருப்பிக் கடிக்கும் விஜயராமச்சந்திரன், என்று நினைவில் இருந்து நீங்காத எத்தனைப்பேர். ஞாயிறு காலை தூர்தர்ஷன் ஹிந்தி ராமாயணத்தை on-the-fly மொழி பெயர்க்கும் இளமாறனுக்கு எத்தனை ரசிகர்கள். அனுமனும் ராவணனும் பேசும் டயலாக் சென்சார் இல்லாமல் இங்கு போட முடியாது.
சுந்தர், சீ.ஜே, அஷோக், கண்ணன், B.J முரளி கிருஷ்ணன் என்று இன்னொரு கோஷ்டி என்று நினைக்கிறேன். ஆடிட்டோரியத்தில் செய்த கலாட்டாக்கள் நினைவில் உள்ளதா BJ? அசராமல் பீலா விடும் ரவிகாந்த் இப்போது என்ன செய்கிறாய்? சிரிக்காமல் ஜோக் அடிக்கும் மனோகர், உனது டெக்ஸ் டைல்ஸ் பிசினெஸ் நலமா?

படிப்பு கோஷ்டி: லோகநாதன், முநாவர், கண்ணன் என்று படித்து முன்னே போனவர்கள் இப்போது எப்படி இருக்கிறீர்கள்?

எப்போதும் ஆல்-பாஸ் செய்யும் மகளிர் அணி நலமாகத்தானே இருக்கறீங்க ? மாலதிக்குக் காலேஜ் போகும் மகள் (அதுவும் tachometer பறக்க விடுதா?) இருப்பது ஆச்சர்யமா இருக்குது. நமக்கெல்லாம் அவ்வளவா வயசு ஆயிடுச்சி? என்னோட பொண்ணு இப்போதான் கிண்டர் கார்டன் போகப்போவுது. காலேஜ் வரை யோசிச்சா இப்பவே கண்ணைக் கட்டுதே !

என்னை இப்போ பாத்தாக்க யாரும் கண்டு பிடிக்க முடியாது. நிறைய வெயிட் போட்டுட்டேன், தலை வெளியேயும் காலி ஆயிடுச்சி. பக்கத்து தெருக்காரன் இளங்கோ இப்போதும் தினமும் டென்னிஸ் தவறுவதே இல்லை. அப்பப்போ அவங்கூட தாக சாந்தி செய்யறபோது எல்லார் பத்தியும் பேச்சு வரும். அடுத்த முறை ஊருக்கு வரும்போது முடிஞ்சவரை ஒரு சந்திப்பு வெச்சுக்கணும்.
அப்புறம் மறுபடியும் பாக்கலாம்.
.......................
மக்கள் லிஸ்ட் வளருது. ஒவ்வொருத்தரும் இத்தன பேருங்கள ஞாபகம் வச்சிக்கிறது ஆச்சர்யமாவே இல்ல. எல்லாரும் அப்படி பழகி இருக்காங்க.
..............
ஆதி இளங்கோ : காலேஜில எனக்கு ரொம்ப தோஸ்த். வன்முறைக் கவிஞன். அதாவது, எதிர்ல ஆளு வந்தா, பிடிச்சி மடக்கி, மிரட்டி ஒரு கவிதையும் தத்துவமும் சொல்லாமல் விடாத தத்துவக் கவி. ( திண்டுக்கல் சாரதி படத்தில் வரும் காக்கை கவிராயர் போல ).
கப்பல்ல உலகம் பூரா சுத்துனதா செவி வழி செய்தி. இப்ப எங்கப்பா இருக்கே?

ஞானசேகரன்: சாந்த சொரூபி. தானே பாடலை இயற்றி, இசை அமைத்து, அதைத் தானே கேட்கும் கலைஞன். வேலை தேடி அலையும்போது ஒருமுறை கடலூரில் பார்த்தேன். நல்ல வாசனையான மீன் குழம்பு சாப்பாடு கிடைத்தது. அதற்காகவாவது மறுபடியும் சந்திக்க வேண்டும்.

சுஜாதா: ஒருமுறை டீ.சி. மோட்டார் பற்றி கட்டுரை எழுதி, அதை பேரா. தனகோடி வகுப்பறையில் படித்துக்காட்டியது நினைவு இருக்கிறதா? அந்தக் காப்பி கோடி பெரும்.

சத்தியமூர்த்தி : மறக்கக் கூடிய முகமா? நமக்குள்ள ஒரு சின்ன கணக்கு இருக்குது. அப்புறம் தனியா பேசுவோம்.

புவனேஸ்வரன்: விவேகானந்தர் நம்ம காலேஜ்ல சேந்து, வெளிய போனப்ப ப்ரேமானந்தாவா போனதப் பாத்துருக்கீங்களா ? புவனேஸ்வரன் எங்க ஊரு விவேகானந்தர். பள்ளியிலும் என்னோட கிளாஸ் மேட். அவரைத் திருத்துன பெரும சேலத்தையே சேரும்.

... இன்னும் வருவார்கள். ..