Showing posts with label travel. Show all posts
Showing posts with label travel. Show all posts

Tuesday, July 28, 2009

கல்லிலே கலை வண்ணம் கண்டான்



இந்தப் படத்துக்கும் பயணக் கட்டுரைக்கும் என்ன சம்பந்தம்? பிறகு சொல்கிறேன்.
போனமுறை ஊருக்குப் போனபோது, ' பொன்னியின் செல்வனை' மூன்றாவது முறை படித்தேன். உடனே சோழப் பிரதேசம் சென்று பார்க்க வேண்டுமெனத் தோன்றியது. என் தம்பியின் நண்பர் சீனுவாசன் சரியான டூர் பைத்தியம். தமிழ்நாட்டின் அத்தனை ரோடுகளும் அத்துப்படி. பஸ் கனெக்ஷன் எல்லாம் கூட மனப்பாடம். நான் கேட்டவுடன், 'அதற்கென்ன.. காலையில் கிளம்பி விடுவோம் ' என்றார். மறுநாள் காலை, முதலில் 'கங்கை கொண்ட சோழபுரம்' நோக்கி வண்டியை விட்டோம். உளுந்தூர்ப் பேட்டை தாண்டியவுடன் காருக்கு உதறல் எடுக்க ஆரம்பித்து விட்டது. தமிழக அரசின் இலவச சேலையை விட மெல்லியதாகப் போடப்பட்ட தார்ச்சாலை, பத்து நிமிடம் லேசாக விழுந்த தூறலில் காணாமல் போயிருந்தது. உளுந்தூர்ப்பேட்டை சாலையில் டிஸ்னி லேண்ட் ரைட் அனுபவம் தந்த அந்தக் குத்தகைதாரர் பதினாறும் பெற்று வாழட்டும்.
கங்கை கொண்ட சோழபுரம் நெருங்க நெருங்க, வழி கிராமங்கள் எல்லாம் மிக ரம்மியமாக இருந்தன. ஊர்ப் பெயர்களும் அற்புதமான தமிழில், நெல்லைப் பக்கத்து கிராமங்களின் பெயர்கள் போலவே இருந்தன. திடீரென்று 'time travel ' செய்வது போலத் தோன்றியது. வண்டியின் பின்னால் திரும்பி, பழுவேட்டரயரோ, வந்தியத் தேவனோ, குதிரையில் வருகிறார்களா என்று எட்டிப் பார்த்தேன். ஒரு சிறுவன்தான் சைக்கிள் டயர் ஒட்டிக் கொண்டு சென்றான். கோயிலை அடைந்ததும் அதைக் கார்னர் ஆங்கிளில் பார்த்து அசந்து போனேன். (http://tamilnation.org/culture/architecture/gkc.htm ). சுற்றிலும் ஜன சந்தடியே இல்லை. வாசலில், இளநீர் விற்கும் ஒரு நோயாளி மட்டும். "யாரு சார் இங்கல்லாம் வர்றாங்க. எனக்கு வியாபாரமும் கம்மி ". அவர் இளநீர் சீவுவதைப் பார்க்கப் பாவமாக இருந்தாலும், எல்லோரும் வாங்கினோம். இக்கோயிலை இந்தியத் தொல்பொருள் துறை எடுத்துக் கொண்டிருக்கிறது. ஆச்சர்யமான வகையில், படு சுத்தமாகவும், படு விஸ்தாரமாகவும் உள்ளது. ராஜேந்திர சோழன், தன் தந்தை ராஜ ராஜ சோழன் (சிவாஜி கணேசன் அல்ல! ) எழுப்பிய பெரிய கோயிலின் மாடலில் அதே போல், ஆனால் அதை விட சிறிய அளவில் கட்டி இருக்கிறான். Amazingly Perfect Geometric structure. ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் சிதிலமடையாத சிற்பங்கள். சுற்றுப் பிரகாரத்தில் அக்காலத் தமிழ் எழுத்தில் கல்வெட்டு. வெளிப் பிரகாரத்தில் அழகான புல்தரை, சிறந்த பராமரிப்பு. குழந்தைகள் நிச்சயம் நாள் முழுதும் ஓடியாடி மகிழ்வார்கள். இப்படி ஓர் அழகான கோயிலுக்கு மக்கள் என் வருவதில்லை? கோயில் என்று இல்லாமல், டூரிஸ்ட் ஸ்பாட் மாதிரியாகவேனும் வரலாமே. யாரேனும் மாடர்ன் சாமியாருக்கோ, மயிர் போன நடிகருக்கோ காத்திருக்கிறதா?

தாராசுரம்: அங்கிருந்து கிளம்ப மனமே இல்லாமல் கிளம்பி, தாராசுரம் (http://en.wikipedia.org/wiki/Airavateswara_temple) நோக்கிப் பயணமானோம். அது கும்பகோணத்துக்கு ஐந்து மைல் தூரத்தில் உள்ளது. வழியெல்லாம் கண் கொள்ளாத அழகில் வெற்றிலை மற்றும் வாழைத்தோட்டங்கள். தாராசுரம் ஒரு un-assuming small town. ஐராவதேஸ்வரர் கோயிலில்தான் ஆச்சரியம் காத்திருக்கிறது. உள்ளே போகும்போது, 'ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றிய' கதையாக இங்கும் கோயிலில் யாருமே இல்லை. கோயிலைப் பற்றிய விபரங்கள் எல்லாம் மேலே கொடுத்துள்ள சுட்டியில் உள்ளது. அந்த சிற்பங்களைப் பார்த்து சற்று நேரம் மூச்சடைந்தது. தூண்கள் நிறைந்த மண்டபத்தில் ஒவ்வொரு தூணிலும் ஒவ்வொரு விதமான மிக நுண்ணிய வேலைப்பாடுள்ள சிற்பங்கள். இந்தக் கல் சிற்பங்களுக்கு சவால் விடும் வகையில் அமைந்தது, எனக்குத் தெரிந்து, ஹம்ப்பியில் உள்ள கிருஷ்ணதேவராயரின் ஹளபேடுதான். "மனுஷன் சும்மா வெண்ணையில செதுக்கறா மாதிரி செதுக்கி இருக்காம்பா! " ஒரு பகுதி மூடினால் பசு, மறு பகுதி மூடினால் யானை, என்பன போன்ற சிற்பங்கள். கருவறை மற்றும் இதர அறைகள் ஜன்னல்கள் எல்லாம், கல்லிலே, டிசைன் டிசைனாக, அனுபவித்து செதுக்கியிருக்கிறார்கள். ஒவ்வொன்றாக அனுபவிக்க ஒரு நாள் போதாது. இந்தக் கோயிலையும் தொல்பொருள் துறை எடுத்திருப்பதால், சுவற்றில், ' I am loves Grijaa... ' , ' தன்மானச் சிங்கம் முனியாண்டி அழைக்கிறார்.. ', ' பொன்வண்டு சோப் ' போன்ற அநாகரீகக் கிறுக்கல்கள் இல்லை.
மேற்கொண்டு விவரிக்காமல், குடும்பத்துடன் போய் இந்த இடங்களைப் பார்க்குமாறு வேண்டுகிறேன். தமிழ்நாட்டில் இருந்து கொண்டு இதெல்லாம் பார்க்காமல் இருப்பது பெரிய குற்றம்.

கடைசியாக.. எதற்கு இந்தப் பயணக் கட்டுரையில் டெர்ரர் ராஜேந்தர் படம் ? முதல் காரணம், சுவாரஸ்யம் காரணமாக இந்தப் பதிவைப் படிக்க வருவீர்கள். இரண்டாவது முக்கிய காரணம். இத்தகைய சிறப்பான கலைகள் வெறுமனே மன்னர்களின் அதிகாரத்தால் மட்டுமே வளர்ந்திருக்காது. குறைந்த அளவுக்காவது மக்களும் கலாச்சார ரீதியாக மிக உயர்ந்து இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சிறந்த செவ்விலக்கியங்களும் தோன்றியிராது. பின்னர் தமிழர்களுக்கு என்ன நேர்ந்தது? டீ. ராஜேந்தர், விஜய்,தல, விஷால், சிம்பு, தனுஷ் போன்ற கோமாளிகளைக் கொண்டாடும் குறைப் பட்டப் பிறவிகளாய்ப் போனது ஏன் என்று யாராவது ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்.

Thursday, May 14, 2009

இவ்வருடப் பயணப் பதிவுகள் - 2009

இந்த வருடம் எந்க கம்பெனியில் எல்லாரையும் கட்டாய விடுப்பு எடுக்கச் சொன்னதால் சீசன் கெட்ட சீசன்ல ஊருக்குப் போக வேண்டியதாச்சு. கிளம்பி துபாய் வழியா போனோம்.
முதல் ஸ்டாப் துபாய்:
துபாய்ல மூணு நாள் வசந்த பவன் ஹோடெல்ல ஸ்டே. அப்படியே இந்தியாவுல இருக்க பீலிங்! தக்காளி... அங்கங்க எச்சி துப்பி வச்சிருக்கானுக! நடக்கறப்ப பாத்து நடக்காட்டி கால் வழியே கிருமி வந்துரும். இந்தியனுங்கள விட அங்க பாகிஸ்தான் காரனுங்க ரொம்ப துப்பரானுங்க. கிட்டப் போன அப்படி ஒரு கப்பு. சிங்கப்பூர்'லயும் இதே மாதிரி நம்ம ஜனங்க இருக்க எடம் எல்லாம் கவர்மென்ட் கண்டுக்காம இருக்குது. எனக்குத் தெரிஞ்சி இங்க நியூ ஜெர்சில குஜராத்திங்க கடைக்கு முன்னாடி சாக்கட ஓடுது!.நீங்கள்ளாம் திருந்தவேமாட்டீங்களாடா?
எங்க சொந்தக்காரத தம்பி ஒன்னு துபாய சுத்திக் காட்டுச்சு. பத்தடிக்கு பத்தடி ரூம்ல எட்டுப் பேரு. அங்கேயே சமையல். காலைல இருந்து நைட் வரைக்கும் வேலை. அங்கிருந்து ரொம்ப தூரத்துல வேல பாக்கிறவங்க வாரத்துக்கு ஒரு தடவ துபாய் சிட்டி வந்து வேண்டிய பொருள வாங்கிட்டு பஸ் ஏற (வடிவேலு அண்ணே, துபாய்ல நெசமாலுமே பஸ் ஸ்டாண்டு இருக்கு, துபாய் போற பஸ் அங்க நிக்குது!) நீண்ட லைன்ல நிக்கறாங்க. கண்ணெல்லாம் பஞ்சடஞ்சு பாக்கவே பாவமா இருக்கு. எப்படியும் வட்டிக்கு வாங்கி, காட்ட, வீட்ட வித்து புரோக்கர் மூலமா வந்திருப்பாங்க. சம்பளமும் அவ்வளவு சொல்லிக்கிற மாதிரி இல்ல. இப்படி கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறத ஊர்ல இருக்கறவங்க சென்ட் அடிச்சி செலவழிக்கறாங்க. என்னத்தச் சொல்றது? இன்னொரு பக்கம் பளபளன்னு வெள்ளக்காரங்க துபாய். அது நமக்கு வாணாம்.

இவ்வருடப் பயணப் பதிவுகள் - பாண்டிச்சேரி

pondicherry GCE Salem
பாண்டிச்சேரி பதிவுகள்: வேலை விஷயமா வெளி நாடு போறவங்களுக்கு அவங்க ஊரப்பத்தியும் ஜனங்களப் பத்தியும் ஒரு frozen image இருக்கும். கொஞ்சம் வருஷம் கழிச்சுத் திரும்பி வந்து பாக்குறப்ப, அங்க ஏற்பட்ட தவிர்க்க முடியாத மாற்றமெல்லாம் மனசுக்குக் கொஞ்சம் கஷ்டத்தையோ ஏமாற்றத்தையோ தர்றது சகஜமாக இருக்குது. எனக்கும் ஒவ்வொரு தடவை பாண்டிச்சேரி வர்றப்பல்லாம் அதே பீலிங்க்ஸ் தான். என்னவோ எங்க ஊர் தன்னோட பழைய வசீகரத்தை ரொம்பவே இழந்து விட்டதாகவே தோணுது.

ஊரெங்கும் தொடர்ச்சியா இருந்த கலர் கலரான கொன்றை மரங்கள், ரோட்டோரம் அடர்ந்து கிடந்த தென்னை மரமெல்லாம் எங்க போச்சி? எல்லாம் கண்ணாடி வெச்ச ஷோரூமா மாறிடுத்து. கசகசன்னு ஒரே ஜன நெரிசல்.
இதாவது பரவால்ல. நான் படிச்ச ஸ்கூல் எதிர்ல மகாகவி பாரதியார் குயில் பாட்டு, கண்ணன் பாட்டெல்லாம் பாடிய அற்புதமான, ரம்யமான ஒரு தோப்பு, கருவடிக்குப்பம் சித்தானந்த சுவாமி கோயில ஒட்டி இருந்தது. உள்ள போனா, நேரம் போறதே தெரியாது. எப்பவும் வத்தாத நீரோடை, நிறைய மாமரம், கொய்யா மரம். இப்படி. மகா கவிக்கும், பாரதிதாசனும் லாகிரி வஸ்துக்கள் சாப்பிட்டு அதி அற்புதமான காவியங்கள் பாடியிருக்காங்க. அந்த இடத்தைப் பாத்தா எனக்கே பாட்டு வரும். அந்த இடத்த பாதுகாக்காம பிளாட் போட்டு வித்துட்டானுங்க. இதவிட மோசம் பாருங்க. அங்க அரவிந்தர் வீதில இருந்த பெரிய புக் ஸ்டால மூடிட்டு ஒயின் ஷாப் தொறந்துட்டானுங்க.
முன்னாடி தமிழ்நாடும் பாண்டிச்சேரியும் எல்லாத்துலயும் ஏட்டிக்குப் போட்டியா இருக்கும். அதனால் ஊர் நல்லா இருந்துச்சி. இப்பல்லாம் தமிழ்நாட்ல ஜனங்களுக்கு கவர்மென்ட் எட்டு அடி குழி வெட்டினா, பாண்டிச்சேரி கவர்மென்ட் எங்க ஜனங்களுக்குப் பதினாறு அடி குழி வெட்டுது. அங்க ஒரு ரூபாய்க்கு அரிசி தந்தா இங்க இலவசமாத் தரானுங்கோ. வர வர எல்லாருக்கும் வேல செய்யறதே மறந்து போயிடிச்சி. அது சரி.... எம்.ஆர். ராதா சொன்னாப்ல, நாமளே பங்களாக்குள்ள உக்காந்துக்கிட்டு பாலிடிக்ஸ் பேசக்கூடாது.

எங்க வீட்டு மரத்தில் இருந்து இளநீர், நல்ல வாசனைய்டன் வகை வகையா பலா, வாழைப்பழங்கள், நல்ல சாப்பாடு. இன்னும் கொஞ்சம் வெயிட் போட்டாச்சு. போன முறை சன் டீ.வீ. பாத்தா சீரியல் எல்லாம் இன்னும் ஓடிக்கிட்டு இருக்கு. ஜனங்களும் ஆர்வம் குறையாம, உக்காந்து பாத்துக்கிட்டு இருக்காங்க. யாரோ சாபம் விட்டாப் போல இருக்குது. :(

ஊர்ல யாரப் பாத்தாலும்,
'என்னங்க அமெரிக்காவுல இருந்து இந்தியருங்களத் தொரத்தராங்கலாமே ' அப்படின்னு, சந்தோஷத்த கஷ்டப்பட்டு மறைச்சிக்கிட்டு கேள்வி.
'அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லீங்களே' அப்படீன்னு சொன்னதும், உடனே கேட்டவங்க முகம் ஏமாத்தத்துல வாடிப்போகுது.
அப்படியும் விடாம, 'இல்லிங்களே தினத் தந்தியில விலாவாரியாப் போட்டிருக்காங்களே. நீங்க பாக்கலியா? உங்க ஏரியாவுல இல்ல போலிருக்கு.'
அதற்கு நான், 'தினத் தந்தி எல்லாம் படிக்கிறதா விட்டு அறுவது வருஷம் ஆகுதுங்க. அது சரி, உங்க பெரிய புள்ள இப்ப என்ன செய்றாரு ? '
' இங்க கவர்மென்ட் போஸ்டிங்குக்கு எட்டு வருஷமா வெய்ட் பண்றான். நீங்களே சொல்லுங்க... கஷ்டப்பட்டு அஞ்சி வருஷம் பீ.காம் படிச்சிட்டு ப்ரைவேட் வேலைக்கா போறது? விவசாயத்தைப் பாக்கலாம்னா, ஒரு பயலும் லேபர் வேலைக்கு வர மாட்றானுங்க. சரீ, நீங்க இருக்கறது ப்ரைவேட்டா, கவர்மேன்ட்டா? '
நான், 'அமெரிக்காவுல போலீஸ், மிலிடரி, போஸ்ட் ஆபீஸ் மாதிரி வேலையத் தவிர்த்து எல்லாம் ப்ரைவேட் தான். '
இதக் கேட்டதும் அவருக்கு ரொம்ப சந்தோசம். 'அதானப் பாத்தேன். யாருக்கு என்ன வேல தர்றதுன்னு வெள்ளக்காரனுக்குத் தெரியாதா? நாமப் போயி அவங்கள நிர்வாகம் பண்ண முடியுமா சொல்லுங்க? '
அடேங்கப்பா! அதுல உட்ட சந்தோஷத்த இதுல புடிச்சிட்டாரு!! ஆமா, நாங்கல்லாம் உங்கள என்ன பண்ணோம்? இங்க எல்லாம் நித்திய கண்டம்தான். வேல போனா, கவர்மென்ட் நிவாரண உதவி, ஒரு ரூவா அரிசி, இதெல்லாம் குடுக்காது.

மத்தபடி ஊர்ல கொஞ்சம் பழைய விஷயம் அப்படியே இருக்குது. துடிப்பான மரியாதையான, சின்னப் பசங்க, கள் மணக்கும் கிராமம், கோயில்லையும் ஒயின் ஷாப்லயும் இருக்கும் நெரிசல், குடிச்சிட்டு ரோட்ல விழுந்து கிடக்கற வெளியூர் ஜனங்க. பொதுவா பாண்டிச்சேரி, ரோட்ல போதையில விழுந்து கிடக்கிறதெல்லாம் வெளியூர் ஆளுங்கன்னு சொன்னா நம்புங்க.
அரசு சுற்றுலாத்துறை இப்போ டெய்லி பஸ் டூர் ஏற்பாடு செஞ்சிருக்கு. சீந்துவார் இல்லாம இருந்த ஊஸுடு ஏரி, இப்போ பிரபலமான டூர் ஸ்தலம். பிரபஞ்சன் தன்னோட மானுடம் வெல்லும், வானம் வசப்படும் நாவலுங்கள்ள இந்த ஏரியப் பத்தி எழுதி இருக்கார். அப்புறம் இந்த சுண்ணாம்பாறு இப்படி டூரிஸ்ட் ஸ்பாட் ஆகா மாறி இருக்கும்னு எதிர் பாக்கவே இல்ல. வில்லியனுர்ல ( என்னோட ஊர் !) பெரிய கோயிலும் இப்போ நிறைய ஜனம். இருக்கிற பிரச்னைல ஜனங்கள்ளாம், முதல்ல சிவன் கோயிலுக்குப் போயிட்டு, அப்புறம் மாதா கோயில்ல ஒரு மெழுகு வத்தி ஏத்திட்டு, அப்படியே போய் மசூதியில ஒரு தடவ ஒதிட்டுப் போறாங்க. ஒரு தடவப் போய்ப் பாருங்க.

இவ்வருடப் பயணப் பதிவுகள் - திருநெல்வேலி







அடுத்த
ஸ்டாப் : திருநெல்வேலி - இது என் மனைவியின் ஊர். .. இருந்தாலும் எனக்கு ரொம்பப் பிடிச்ச ஊர். கேரளத்துக்குப் பக்கத்துல இருப்பதாலோ என்னவோ ஊர் படு சுத்தம். ஜனங்களும் ரொம்ப மரியாதைப் பட்டவங்களா இருக்காங்க. வெட்டுக் குத்துன்னு பேப்பர்ல பாக்கறதெல்லாம் தனிப்பட்டவங்களுக்கு இடையிலதான். மத்த ஊர் போக்கிரிங்க மாதிரி பொது மக்களுக்கு இடைஞ்சல் தர்றது இல்ல.
இந்த ஜில்லாவுலதான் தமிழ்க் கவிதையப் புரட்டிப் போட்ட பாரதியார், உரைநடை பிதாமகர்கள் புதுமைப்பித்தன், .ரா., நவீன சிந்தனையாளர் சுந்தர ராமசாமி, கரிசல் மண்ணின் தவப்புதல்வர் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் உள்ளிட்டவர்கள் பிறந்து வளர்ந்தார்கள்.
நெல்லையச்சுத்தி நிறைய பாக்க வேண்டிய இடங்கள். திருச்செந்தூர், அப்புறம் போற வழியில நவ திருப்பதின்னு ஆழ்வார்கள் அவதரிச்சு வாழ்ந்த ஊர்கள். அந்த ஒண்ணரை மணி நேரப் பயணம் ரொம்ப அற்புதமா இருக்கும். நெல்லை டவுனில் இருக்கும் நெல்லையப்பர் கோயில் ஒரு சிற்றூர் அளவுக்கு இருக்குது. அனால் உள்ளே அவ்வளவா மக்கள் இல்லை. கோயிலின் ஒரு வாசலுக்கு வெளியே திருநெல்வேலியின் பிரசித்திப் பெற்ற இருட்டுக்கடை அல்வா கிடைக்கும். மாலை எட்டு மணிக்குள் போனால் கிடைக்கும்.

இந்த முறை பாணதீர்த்தம் போனோம். அம்பாசமுத்திரம் போய்ட்டு அங்கிருந்து பாபநாசம் போகணும். பாபநாசம் முண்டந்துறைக்காட்டு உள்ளே போய் மலை ஏறனும். பிளாட் போடாத காடு. ரசீது கொடுக்காம டிக்கெட் பணம் வாங்கிக்கறாங்க. அத மறந்துட்டு மேல போனா, அற்புதமான இடம். ரெண்டு பெரிய அருவி. படகுல ஏறி இருவது நிமிஷத்துல அருவிக்குப் போகலாம். அங்க ஒரு நாடு வயதினர், 'இங்க குளிச்சா எந்த வியாதியும் அண்டாது' ன்னு இருமிக்கிட்டே சொன்னார். பாணதீர்த்ததுலதான் .வே.சு. அய்யர் தன் மகளைக்காப்பாத்த குதிச்சி, ரெண்டு பெரும் இறந்து போனதா படிச்சிருகேன். அந்த அருவிய ஒட்டி பிரமாதமான காரையார் அணை. யாராவது E.B. யில ஆளு தெரிஞ்சா, இன்னும் நல்லா சுத்திப் பாக்கலாம். எனக்கு யாரையும் தெரியாததால்
அவ்வளவா போட்டோ எடுக்கக் கூட விடல.
இன்னொரு முக்கியமான விஷயம்.. சாப்பாடு எதுவும் மலை மேல கிடைக்காது.
கீழ பாபனாசத்துலையே வாங்கிட்டுப் போயிடனும். இது தெரியாம நாங்க மேல போய், இருந்த நொறுக்குத்தீனிய வச்சி அட்ஜஸ்ட் பண்ணிட்டு, கீழ வந்ததும், கண்ணுல பட்ட முதல் ஓட்டல்ல நுழைஞ்சிட்டோம்.
'அடகென்று சொல்லி அமுதத்தை இட்டாள்
கடகம் அணிந்த கையாள்'
அப்படின்னு அவ்வையார் பாடிய மாதிரி அப்படி ஒரு பசி. தனக்கு சாப்பாடு போட்டவளின் முகத்தைக் கூட பாக்க நேரமில்லாம, அந்தக் கையைப் பார்த்ததும் உடனே சாப்பிடத் தொடங்கி விட்டாளாம். பாவம் அவங்களுக்கு அப்படி ஒரு பசி.