Showing posts with label puduchery. Show all posts
Showing posts with label puduchery. Show all posts

Wednesday, August 17, 2011

வேதபுரத்து வியாபாரிகள்

இந்த ஜூலை கோடை விடுமுறையில் தென் தமிழகத்தின் திற்பரப்பு, பத்மநாபபுரம், குத்தாலம் உள்ளிட்ட, பரவச அனுபவம் அளித்த இடங்களுக்கு முதலில் சென்றோம். ஒரு மணி நேரத்துக்கு மேல் குளித்தாலும் வெளியே வர மறுத்த என் 7 வயது மகளை மிகவும் சிரமப்பட்டுத்தான் திற்பரப்பு அருவியில் இருந்து வெளியே வர வைத்தோம். குத்தாலம் ஐந்தருவியில் தலையை நனைக்க மிகவும் சிரமப்பட்டோம். ஒரு பெரிய கும்பல் எல்லா இடங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டு பிறரை நெருங்கவே விடவில்லை. பிறகு மெயின் அருவிக்குச் சென்று ஆசை தீரக் குளித்து வந்தோம். எங்கள் அதிர்ஷ்டம், சாரலுடன் நல்ல சீசன் போலிருந்தது. நாற்பதாண்டு காலத்தில் இப்போதுதான் முதல் முறையாக இங்கெல்லாம் செல்ல முடிந்திருக்கிறது என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம்.

எல்லா அருவிகளிலும் நான் பார்த்த மகிழ்ச்சி தந்த விஷயம், அங்கு குளித்தவர்களிலே என்னுடைய தொந்திதான் மிகச் சிறியதாக இருந்தது. என்ன ஆயிற்று தமிழர்களுக்கு?

நெல்லையப்பர் கோயில் சென்றால், கத்தியைக் காட்டாத குறையாக, அர்ச்சகர்கள் எல்லாம் தட்டை முகத்தில் மோதுவது போல நீட்டி, 'தட்சணை போடுங்கள்' என்று மிரட்டுகிறார்கள். திருச்செந்தூரில் இன்னும் மோசம். தரகு பிடிப்பவர்கள் போல அர்ச்சகர்கள் 'ஸ்பெஷல் தரிசனத்துக்கு' ஆள் பிடிப்பதில் பிசியாக இருக்கிறார்கள். இந்த அனுபவமெல்லாம் அவர்களுக்கு வேறு சில தொழில்களுக்கும் பயன்படலாம். மற்றபடி, முன்னைப்போலவே நெல்லை நகரம் (எம் தமிழர் பழக்கத்துக்கு விரோதமாக) குப்பைகள் இன்றித் தூய்மையாக இருக்கின்றது.