Tuesday, June 21, 2016

எந்த நாளும் திருவிழா - பாகம் 1

 
போன வாரம் பாண்டியில் உறவினர்களோடு பேசியபோது,  "என்னப்பா இது அநியாயமா இருக்கு.  நாராயணசாமி எலெக்ஷன்ல நிக்காம சி.எம். ஆயிட்டாரு.  எங்கெல்லாம் எப்பதான் அமேரிக்கா மாதிரி வரப்போவுதோ தெரியல". என்றனர்.  "சரி, இங்க எப்படி எலக்ஷன் நடக்குது தெரியுமா?" என்றேன்.  "அவ்வளவா தெரியாது" என்று பதில் வந்தது.   அவர்களுக்காகவும், மற்ற நண்பர்களுக்காகவும் உலகின் இரண்டாவது பெரிய மக்களாட்சியின் தேர்தல் கூத்துகளை இங்கு பதிவேற்றம் செய்கிறேன்

Friday, May 20, 2016

மகேசன் தீர்ப்பு எனும் மாம்பழம்

ஐந்தாண்டுகளாக பக்கவாதம் வந்து படுத்துக்கொண்டிருந்த அரசாங்கத்தையே மறுபடியும் மக்கள் எப்படி தேர்ந்தெடுத்தார்கள் என்பது,  டாக்டரேட் செய்யக்கூடிய ஒரு சப்ஜெக்ட்.  வசூலைத் தவிர வேறு எந்த வகையிலும் செயல்பாடு இல்லை.  சின்னச்சின்ன நியாயமான போராட்டங்களைக் கூட போலிசை வைத்து அடக்குவது,  பத்திரிக்கைகளுக்கு அவதூறு வழக்குகள் மூலம் வாய்ப் பூட்டு போடுவது,  எந்த அமைப்பையும் நம்பாமல், ஒய்வு பெற்ற சில குறிப்பிட்ட அதிகாரிகளை மட்டுமே வைத்துக்கொண்டு ஆட்சி செய்வது, என்று  ஜனநாயக அமைப்பே கேலிக்கூத்தாக மாறியது.  

Monday, March 28, 2016

மெட்ராஸ் ஷேத்ரே



  
Disclaimer: எழுத்தாளர் ஜெயமோகனின் நெல்லை ஜங்க்ஷன் கீதையை சென்னை எக்மோருக்கு மாற்றியுள்ளேன்...
"ஹல்லோ,  துலுக்கானமா?  கிண்டி கெஜாவ எக்மோர் டேசன் கேட்டாண்ட ஸ்கெட்ச் போட்டுத் தூக்கறன்னு அட்வான்ஸ் வாங்கிக்னு 'கொக்கி அர்ச்சுனனும்'  'கோனாரு கோவாலும்' போனானுங்க.  இன்னாடா பண்றானுங்க இவ்வ்வ்ளோ நேரம்?" என்று பேட்டை பழைய வஸ்தாது, 'நொள்ளக்கண்ணு கபாலி', தன் மச்சானிடம் செல்போனில் கேட்டான்.
பழக்கப்பட்ட பெட்டிக்கடை பின்னால் மறைந்து நின்று கொண்டு செல்போனில் மெல்லிய குரலில் துலுக்காணம்: "தோ, மாமு,  நாகர்கோயிலு எஸ்ப்ரஸ்ல இருந்து கெஜாவும், மாமங்காரன் கன்ஸாமியும், கூட கொஞ்சம்பேரும் செட்டா வர்றானுங்கபா.  கோனாரு இப்ப கொக்கியக் கூட்டிக்னு டேசன் நடு சென்டர்ல நிறுத்தராம்பா.  அப்ப கோவாலு  சொன்னத நான் உன்னாண்ட சொல்றேன்.

Sunday, October 12, 2014

சுவரொட்டித் தமிழன், தினமணி, மற்றும் சில..


இணையம் மற்றும் காட்சி ஊடகங்கள் பெருகி விட்ட இந்தக் காலத்திலும் புராதனமான சுவரொட்டிப் பிரச்சாரத்தை எம் தமிழர் விடவில்லை.  கல்யாணம், திடீர்ப் பிரமுகர்கள் வீட்டு மஞ்சள் நீராட்டு விழாவோ அல்லது அவர்தம் இறுதி ஊர்வலமோ, எதுகை மோனையும் எழுத்துப் பிழையுமாக சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன.  எதிர் கோஷ்டிக்கு சவால் விட வேண்டுமா?  ஒரு மணி நேரத்தில் எதிர்  சுவரொட்டித் தயாராகி. சம்பத்தப்பட்டவர் பார்வையில் படும்படி ஒட்டப்படும்.  ப்ளக்ஸ் பலகை விளம்பரங்களில் முதலீடு செய்வது அவர்தம் அந்தஸ்தை அன்போடு வெளிப்படுத்தும் செயலாகும்.  
இன்ன இடத்தில்தான் ஒட்டுவது என்றில்லாமல், பசு மாட்டின் மீது ஓட்டுவது, பெயர்ப்பலகையில் ஒட்டுவது என்பதெல்லாம் பரிணாம வளர்ச்சி, அல்லது அப்போது அருந்திய டாஸ்மாக் சரக்கின் வீரியம் என்பதன் வெளிப்பாடே.

Tuesday, March 20, 2012

கொடுத்த காசுக்கு மேல் கூவும் தினமலர்


Dr.உதயகுமார் ஒருங்கிணைப்பில் கூடங்குளம் போராட்டம் தொடங்கிய நாள் முதலாக தினமலர் நாளிதழைப் பார்த்தவர்கள் ஒன்று கவனித்திருக்கலாம்.   எவ்வளவு வீச்சுடன் பொய்ப் பிரச்சாரம் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு தனது முதல் பக்கத்தில் பொய் பிரச்சாரம் செய்து வந்தது.  அதற்குக் கருத்து சொல்ல அத்தனை அரை வேக்காடுகள்.  ஏறக்குறைய அரசாங்கத்தின் ஊது குழலை விட மோசமாகவே 'செய்தி'களை வெளியிட்டு வருகிறது.  போராடும் எளிய மக்களை 'கும்பல்' என்றும், 'கூலிகள்' என்றும்,  'எப்போது கைது' என்றும் நாள் தவறாது சிறப்பு செய்திகள்.  தம் எதிர்காலத்துக்காகவும் சந்ததியினருக்காகவும் போராடும் மக்களைத் தீவிரவாதிகளை விடக் கேவலமாகச் சித்தரிப்பதை நடுநிலை மக்கள் எப்படி ஜீரணிக்க முடியும்.  செய்திகளை வெளியிடாமல் கருத்துகளையே செய்திகளாக வெளியிடும் தினமலருக்கும் நக்கீரனுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது ?  ஐந்தாண்டுகளுக்கு முன்னர் தினகரன் நாளிதழ் ஒரு ரூபாய்க்குக் கொடுத்தபோதும், ஜெயேந்திரர் கைதின்போதும் தினமலர் வாசித்தவர்களுக்கு அதன் சாயம் தெரியும்.

Saturday, November 19, 2011

சிரியாவா, சவூதியா ? - கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்

84 வயது பெண்மணியின் மீது கண்-எரிச்சல் மருந்தைப் பீய்ச்சும் வீரர்:











   
   
   
   
   




































Sunday, October 30, 2011

கடலுக்கப்பால் காந்தியப் போராட்டம் - வரலாற்றுத் தருணம்


எகிப்தில் துவங்கிய அரபு வசந்தத்தின் பாதிப்பில் இந்த செப்டம்பர் இரண்டாம் வாரம் நியூயார்க் நகரில் 'வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்புப் போராட்டம்'  சில நூறு பேர்களுடன் தொடங்கியது.   பொதுப் பிரச்னைக்காக அமெரிக்க மக்கள் சாதாரணமாகப் போராட்டங்கள் எதுவும் நடத்துவதில்லை.  சனி-ஞாயிறு கிழமைகளில் மதியம் ஆரம்பித்து இரவு வரை தொலைக்காட்சியில் விளையாட்டுப் போட்டிகள் காட்டி மக்களைக் காயடித்து வைத்திருப்பார்கள்.   வம்பு வழக்குகளில் சிக்கினால் கடைசி வரை எழுந்திருக்கவே முடியாது என்ற பயமும் ஒரு காரணம்.   ரீகன் காலம் தொடங்கி கட்டுப்பாடுகள் நீங்கிய பகாசுர நிதி நிறுவனங்களின் கார்ப்பரேட் மெகா ஊழல்கள் படிப்பவர் கண்களைப் பிதுக்க வைக்கும்.  மக்களின் வாழ்வாதாரங்களை இவர்கள் சுரண்டிய விதம் ஹாலிவுட் படங்களை மிஞ்சிய சாகசங்கள்.  இவர்கள் போடும் எலும்புத் துண்டுகளுக்காக அனைத்து சட்டங்களை இயற்றியும் வளைத்தும் செநேட்டர்களும் ஜட்ஜுகளும் பணிந்து கிடக்கிறார்கள் .  தேர்ந்த கணித விற்பன்னர்களையும் பிசிக்ஸ் நிபுணர்களையும் வைத்து இவர்கள் ஆடிய சூதாட்டங்கள் மனிதக் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவை.  கடனில் சிக்கி வீடிழந்தவர்களும், உற்பத்தியை வேறு நாடுகளுக்குக் கொண்டு சென்றதால் வேலை இழந்தவர்களும் இத்தனை நாட்கள் கார்ப்பரேட்-அரசாங்க-நீதிமன்ற கூட்டுச் சதிக்கு ஈடு கொடுக்க முடியாமல் உள்ளுக்குள் குமுறியபடியே விதியை நொந்தபடியே நாட்களைத் தள்ளி வந்தார்கள்.  ஐரோப்பிய நாடுகளைப் போலெல்லாம் அமெரிக்காவில் ஒருநாளும் மக்கள் வெளியே வந்து போராட மாட்டார்கள் என்றே பலரும் நம்பி வந்தோம்.  ஏனென்றால் நிஜத்தில் அமெரிக்கர்கள் மிகவும் பயந்தவர்கள்.

Tuesday, September 6, 2011

சேதம் - நாவல் - கபாலிக்குத் தபால்


ஒலகத்துலேயே பெரிய அறிவாளியான அண்ணாத்தை கபாலிக்கு, சிஸ்யன் துலுக்காணத்தோட தபால்.
வெசயம் இன்னான்னா, நேத்து நம்ம மஜீத் பாயோட பழைய பேப்பர் கடையில ஓரமா நின்னுக்குனு பலான பலான புஸ்தகத்தலாம் நைசா பொரட்டிப் பாத்துக்கனு இருக்க சொல்ல, ஒம்பேரு போட்டு, 'சேதம்' அப்டீன்னு அதுங்களுக்கு நடுவுல ஒரு புஸ்தகம்.  பாயாண்ட போயி, 'இன்ன பாய், நம்ம குருநாதரோட பொஸ்தகத்த ஞாபகமில்லாம பலான பொஸ்தகத்துக்கு நடுவுல மறந்து போயி வெச்சிட்டியே' அப்டீன்னு சொன்னேன். அதுக்கு பாயி, 'போடா பொறம்போக்கு.  கபாலி போட்ட 'சேதம்' பொஸ்தகத்த அங்க வெக்கறதக்குக் கூடக் கூச்சமா இருக்குதுடா' ன்றாரு.  இப்பதான் எல்லாமே நெனப்புக்கு வருது.

Wednesday, August 24, 2011

"I am Sam" - தெய்வத் திருமகள் - ஏழு வித்தியாசங்கள்

எங்கள் வீட்டில் எல்லோருக்கும் Dakota Fanning என்ற குழந்தை நட்சத்திரத்தைப் பிடிக்கும் என்பதால் அவள் நடித்த "I am Sam" என்ற 2001 -ல் வெளியான ஒரு பழைய படத்தைப் போன வாரம் பார்த்தோம்.  அதற்கும், சமீபத்தில் வெளி வந்த புகழ் பெற்ற "தெய்வத் திருமகள்" படத்துக்கும் கீழ்க்கண்ட ஏழு வித்தியாசங்களாவது கண்டு பிடித்தோம்.  நல்ல  வேளை,  தமிழ்ப்படத்தின் மானத்தைக் காப்பாற்றி விட்டார் இயக்குனர். 






 ஒரிஜினல்:  ஹீரோ, ஸ்டார் பக்ஸ் காப்பிக்கடையில் மேஜை சுத்தம் செய்பவன்
காப்பி:  தமிழ்ப்படத்தில் ஹீரோ, சாக்லேட் தொழிற்சாலையில் வேலை செய்பவன்.

ஒரிஜினல்: பெண்ணின் தாய் ஒரு 'homeless ' அனாதைப் பெண்.
காப்பி: தமிழ் செண்டிமெண்டுக்கு அனாதை ஒத்து வராது, அதனால் ஒரு பணக்கார வீட்டுப் பெண்.

ஒரிஜினல்:  குழந்தையின் தாய் பஸ் நிறுத்தத்தில் கூட்டத்தில் கலந்து எஸ்கேப் ஆகிறாள்.
காப்பி: தமிழ் செண்டிமெண்டுக்கு இந்தத் தாலி, தாய்ப்பாசத் தடைகள் இருப்பதால்,  குழந்தையின் தாய் பிள்ளைப்பேற்றின் போது இறந்து போகிறாள்.

ஒரிஜினல்: தனியாகக் காமெடி ட்ராக் இல்லை
காப்பி:  தமிழ்ப்படத்தில் அவசியம் இருந்தே ஆகவேண்டும்

ஒரிஜினல்: பெண் வக்கீல் மன வளர்ச்சி குன்றிய கதாநாயகனைக் காதலிப்பதில்லை
காப்பி: தமிழ்ப்பட விதிகளின் படி ஒரு கனவுப் பாட்டாவது இருந்தே ஆகவேண்டும்.  இந்த விதியை இயக்குனர் மீறவில்லை.

ஒரிஜினல்: குழந்தையை வளர்க்கும் foster பெற்றோர்கள், அவளைத் தகப்பனிடம் ஒப்படைத்து விட்டுத் தம் மேற்பார்வையில் வளர்க்க சம்மதிக்கிறார்கள்.
காப்பி: ரொம்ப சிந்தனைக்குப் பிறகு தகப்பன்,   இறந்து போன தாயின் அழகான தங்கையிடம் ஒப்படைத்து வளர்க்க சொல்கிறான்.

ஒரிஜினல்: ஹீரோவுக்கு அவார்ட் கிடைக்கவில்லை
காப்பி: ஹீரோவுக்கு தேசிய விருது நிச்சயம். மேலும் திருட்டு VCD பற்றி வெட்கமில்லாமல் அங்கலாய்ப்பார்கள்.

மற்றபடி, ஒரிஜினலில் ஆங்கிலம் பேசுகிறார்கள், காப்பியில் தமிழ்.

Wednesday, August 17, 2011

வேதபுரத்து வியாபாரிகள்

இந்த ஜூலை கோடை விடுமுறையில் தென் தமிழகத்தின் திற்பரப்பு, பத்மநாபபுரம், குத்தாலம் உள்ளிட்ட, பரவச அனுபவம் அளித்த இடங்களுக்கு முதலில் சென்றோம். ஒரு மணி நேரத்துக்கு மேல் குளித்தாலும் வெளியே வர மறுத்த என் 7 வயது மகளை மிகவும் சிரமப்பட்டுத்தான் திற்பரப்பு அருவியில் இருந்து வெளியே வர வைத்தோம். குத்தாலம் ஐந்தருவியில் தலையை நனைக்க மிகவும் சிரமப்பட்டோம். ஒரு பெரிய கும்பல் எல்லா இடங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டு பிறரை நெருங்கவே விடவில்லை. பிறகு மெயின் அருவிக்குச் சென்று ஆசை தீரக் குளித்து வந்தோம். எங்கள் அதிர்ஷ்டம், சாரலுடன் நல்ல சீசன் போலிருந்தது. நாற்பதாண்டு காலத்தில் இப்போதுதான் முதல் முறையாக இங்கெல்லாம் செல்ல முடிந்திருக்கிறது என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம்.

எல்லா அருவிகளிலும் நான் பார்த்த மகிழ்ச்சி தந்த விஷயம், அங்கு குளித்தவர்களிலே என்னுடைய தொந்திதான் மிகச் சிறியதாக இருந்தது. என்ன ஆயிற்று தமிழர்களுக்கு?

நெல்லையப்பர் கோயில் சென்றால், கத்தியைக் காட்டாத குறையாக, அர்ச்சகர்கள் எல்லாம் தட்டை முகத்தில் மோதுவது போல நீட்டி, 'தட்சணை போடுங்கள்' என்று மிரட்டுகிறார்கள். திருச்செந்தூரில் இன்னும் மோசம். தரகு பிடிப்பவர்கள் போல அர்ச்சகர்கள் 'ஸ்பெஷல் தரிசனத்துக்கு' ஆள் பிடிப்பதில் பிசியாக இருக்கிறார்கள். இந்த அனுபவமெல்லாம் அவர்களுக்கு வேறு சில தொழில்களுக்கும் பயன்படலாம். மற்றபடி, முன்னைப்போலவே நெல்லை நகரம் (எம் தமிழர் பழக்கத்துக்கு விரோதமாக) குப்பைகள் இன்றித் தூய்மையாக இருக்கின்றது.

Saturday, March 19, 2011

வித்தியாசமான சினிமாப் படம் எடுப்பது எப்படி


இரண்டு வாரங்களுக்கு முன்னர், என்னுடைய நண்பர் ஒருவர், மிகவும் சிறப்பான, வித்தியாசமான ஓர் தமிழ்ப்படம் வந்திருப்பதாகவும், அதை நான அவசியம் பார்க்க வேண்டும் என்றும் சிபாரிசு செய்தார்.  எப்போதுமே என்னை வம்பில் மாட்டி விடுவது அவரது பொழுது போக்கு என்பதையும் மறந்து அந்தப் படத்தைப் பார்த்தேன்.  அந்த பாதிப்பில் எழுதப்படுவதுதான் இந்த கோனார் நோட்ஸ்.  இந்தக் கையேடு,  அசிஸ்டன்ட் டைரக்டர்களுக்கு உதவும் நோக்கில் எழுப்படுகிறது.

முதலில் பார்க்க வேண்டியது பட்ஜெட். பெரிய அளவில் நிதியுதவி கிடைத்தால், வெளிநாடு லொக்கேஷன்கள் மற்றும் நூறு ரவுடிகள் என்று திட்டம் போடலாம். ஆனால், வித்தியாசமானப் படம் எடுக்க வருபவரிடம் அவ்வளவாகப் பணம் இருக்காது என்பதால் மிகவும் பின் தங்கிய கிராமத்தை லோக்கேஷனாகவும், கதாநாயகனையே ரவுடியாக மாற்றுவதும் சாலச் சிறந்தது.

Sunday, January 9, 2011

என்ன.. பெய்கிறதா மழை வெளியே ?

நான்கு மாதங்களாகக் கடுமையான பணிச்சுமை.  வெளியே மழை பெய்கிறதா என்று கூடத் தெரியாமல் தினமும் முப்பது மணி நேரம் வேலை.  கணி மொழியை நிரடி நிரடிப் பூச்சிப் பிடித்துக் கொண்டிருந்தேன். புத்தாண்டு தொடங்கி இரண்டு நாட்கள் ரிலாக்ஸ் செய்ய பழைய உள்ளூர் வெளியூர் செய்திகளை வாசித்தால், அங்கும் கனிமொழி-நிரா ரடியா செய்திகள்.  உலகமே 4 -G பயன்படுத்த ஆரம்பித்து விட்டது, நீங்கள் இப்போதுதான் 2 -G யில் ஊழல் செய்கிறீர்களா?  சீக்கிரம் வந்து 4 -G ' யிலும் உங்க தெறமயக் காட்டுங்க.  இதிலே நோக்க வேண்டிய முக்கியமான ஒரு விஷயம்.  அனைத்து மீடியாக்களும், அரசியல் வியாதிகளும், சேவகர்களும், பரபரப்பு டீ.வீ.  மற்றும் 'சோ' போன்ற 'சிந்தனை'யாளர்களும்,   ராசாவையும் கனிமொழியையும் மட்டுமே தாக்குகிறார்கள், ஆனால் இந்த ஊழலைத்தூண்டி, அதனால் பலன் அடைந்த ரத்தன் டாட்டாவைப் பற்றியோ, மும்பை அம்பானி பிரதர்ஸ் பற்றியோ மறந்தும் வாயைத் திறக்க மாட்டேன் என்கிறார்கள்.  இந்தியா உண்மையிலேயே இந்த விஷயத்தில் (முதலாளிகளின் காலில் விழுவது ) அமெரிக்காவை மிஞ்சி விட்டது.  அமெரிக்கா, வெல்கம் டு இந்தியா.  சமீபத்தில் 'நோபலுக்கு மேல்' எழுத்தாளர் & கம்பெனி புத்தக வெளியீட்டைப் பப்ளிசிட்டி பண்ணிய விதம் அட்டகாசமாக இருந்தது. தொடர் தோல்விப் படங்களால் நொந்து போயிருந்த இளைய தளபதி விஜய்,  இதைப் பார்த்து அவர்களிடம் தம் அடுத்த படத்தின் விளம்பர கான்ட்டிராக்டைக் கொடுத்திருக்கிறாராம்.

வெளியூர் சேதி இப்படி இருக்கையில், இங்கே ஒரு குறுஞ்செய்தி.  அனைத்துத் தென் மாகாணங்களிலும் 'மூளை குன்றியோர்' காப்பகங்களில் எல்லோரையும் டிஸ்சார்ஜ் செய்து விட்டார்கள்.  கேட்டால், நவம்பர்-2010 தேர்தலில் அவர்கள் அனைவரும் ரிபப்ளிக்கன் கட்சி சார்பில் வெற்றி பெற்று விட்டார்களாம்.  இனிமேல் இந்த ரிபப்ளிக்கன் cynical bas ****s நடத்தும் கூத்துகளைப் பார்த்தால் பகுத்தறிவுள்ள எவருக்கும் ரத்தக்கொதிப்பு, மண்டையிடி உள்ளிட்ட உடல் உபாதைகள் கியாரன்ட்டியாக வரும்.  போதாதற்கு நந்தவனம் போல் இருந்த என்னுடைய ஆபீசை, இந்த வாரத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்றி விட்டார்கள். புதிய இடம், பாண்டிச்சேரி பழைய பஸ் ஸ்டாண்டில் இருக்கும் நியூட்டன் தியேட்டர் போல இருக்கிறது.  இன்னும் இன்ன பிற காரணங்களால் லோக்கல் அரசியல் செய்திகள் எதையும் ஆறு மாதங்களுக்குப் பார்ப்பதில்லை என்று முடிவு செய்து விட்டேன்.
அடுத்து வரும் பதிவுகளில் கணினி உள்கட்டமைப்புப் பற்றி ஏதாவது கிறுக்கலாம், அது எனக்காவது ஒரு விதத்தில் உதவியாக இருக்கும்.

அதற்கு முன், ரிலாக்சுக்காக ஒரு சுவையான தகவல்.
"பழைய இலக்கியங்களில் இருந்து கருத்துக்களை அப்படியே எடுத்துப் பாடல்களில் உபயோகப் படுத்துகிறீர்களே" என்று கண்ணதாசனிடம் கேட்க, "தாத்தாவின் சட்டைப் பையிலிருந்து பேரப்பிள்ளைகள் செலவுக்குச் சில்லறை எடுப்பதில்லையா?  எனக்குப் பழைய இலக்கியங்கள் தாத்தாவின் சட்டைப் பை மாதிரி.  உரிமையுடன் தேவைப்படும்போது எடுத்துக் கொள்கிறேன்" என்றார்.  அப்படி அவர் ஒரு பீஸ் எடுத்துப் புகுத்திய பாடலைப் பார்ப்போம்.
கீழ்கண்டது வள்ளல் சீதக்காதியைப் பற்றிப் படிக்காசுப் புலவர் பாடியது.

காய்ந்து சிவந்தது சூரிய காந்தி, கலவியிலே
தோய்ந்து சிவந்தது மின்னார் நெடுங்கண், தொலைவில்பன்னூல்
ஆய்ந்து சிவந்தது பாவாணர் நெஞ்சம், அனுதினமும்
ஈந்து சிவந்தது மால்சீதக் காதி இருகரமே.   -- படிக்காசுப் புலவர்

இந்தப் பாடலைக் 'கர்ணன்' படத்தில் வரும் மிகப் பிரபலமான பாடலில் கையாண்ட விதம் இதோ.