Tuesday, July 28, 2009

கல்லிலே கலை வண்ணம் கண்டான்



இந்தப் படத்துக்கும் பயணக் கட்டுரைக்கும் என்ன சம்பந்தம்? பிறகு சொல்கிறேன்.
போனமுறை ஊருக்குப் போனபோது, ' பொன்னியின் செல்வனை' மூன்றாவது முறை படித்தேன். உடனே சோழப் பிரதேசம் சென்று பார்க்க வேண்டுமெனத் தோன்றியது. என் தம்பியின் நண்பர் சீனுவாசன் சரியான டூர் பைத்தியம். தமிழ்நாட்டின் அத்தனை ரோடுகளும் அத்துப்படி. பஸ் கனெக்ஷன் எல்லாம் கூட மனப்பாடம். நான் கேட்டவுடன், 'அதற்கென்ன.. காலையில் கிளம்பி விடுவோம் ' என்றார். மறுநாள் காலை, முதலில் 'கங்கை கொண்ட சோழபுரம்' நோக்கி வண்டியை விட்டோம். உளுந்தூர்ப் பேட்டை தாண்டியவுடன் காருக்கு உதறல் எடுக்க ஆரம்பித்து விட்டது. தமிழக அரசின் இலவச சேலையை விட மெல்லியதாகப் போடப்பட்ட தார்ச்சாலை, பத்து நிமிடம் லேசாக விழுந்த தூறலில் காணாமல் போயிருந்தது. உளுந்தூர்ப்பேட்டை சாலையில் டிஸ்னி லேண்ட் ரைட் அனுபவம் தந்த அந்தக் குத்தகைதாரர் பதினாறும் பெற்று வாழட்டும்.
கங்கை கொண்ட சோழபுரம் நெருங்க நெருங்க, வழி கிராமங்கள் எல்லாம் மிக ரம்மியமாக இருந்தன. ஊர்ப் பெயர்களும் அற்புதமான தமிழில், நெல்லைப் பக்கத்து கிராமங்களின் பெயர்கள் போலவே இருந்தன. திடீரென்று 'time travel ' செய்வது போலத் தோன்றியது. வண்டியின் பின்னால் திரும்பி, பழுவேட்டரயரோ, வந்தியத் தேவனோ, குதிரையில் வருகிறார்களா என்று எட்டிப் பார்த்தேன். ஒரு சிறுவன்தான் சைக்கிள் டயர் ஒட்டிக் கொண்டு சென்றான். கோயிலை அடைந்ததும் அதைக் கார்னர் ஆங்கிளில் பார்த்து அசந்து போனேன். (http://tamilnation.org/culture/architecture/gkc.htm ). சுற்றிலும் ஜன சந்தடியே இல்லை. வாசலில், இளநீர் விற்கும் ஒரு நோயாளி மட்டும். "யாரு சார் இங்கல்லாம் வர்றாங்க. எனக்கு வியாபாரமும் கம்மி ". அவர் இளநீர் சீவுவதைப் பார்க்கப் பாவமாக இருந்தாலும், எல்லோரும் வாங்கினோம். இக்கோயிலை இந்தியத் தொல்பொருள் துறை எடுத்துக் கொண்டிருக்கிறது. ஆச்சர்யமான வகையில், படு சுத்தமாகவும், படு விஸ்தாரமாகவும் உள்ளது. ராஜேந்திர சோழன், தன் தந்தை ராஜ ராஜ சோழன் (சிவாஜி கணேசன் அல்ல! ) எழுப்பிய பெரிய கோயிலின் மாடலில் அதே போல், ஆனால் அதை விட சிறிய அளவில் கட்டி இருக்கிறான். Amazingly Perfect Geometric structure. ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் சிதிலமடையாத சிற்பங்கள். சுற்றுப் பிரகாரத்தில் அக்காலத் தமிழ் எழுத்தில் கல்வெட்டு. வெளிப் பிரகாரத்தில் அழகான புல்தரை, சிறந்த பராமரிப்பு. குழந்தைகள் நிச்சயம் நாள் முழுதும் ஓடியாடி மகிழ்வார்கள். இப்படி ஓர் அழகான கோயிலுக்கு மக்கள் என் வருவதில்லை? கோயில் என்று இல்லாமல், டூரிஸ்ட் ஸ்பாட் மாதிரியாகவேனும் வரலாமே. யாரேனும் மாடர்ன் சாமியாருக்கோ, மயிர் போன நடிகருக்கோ காத்திருக்கிறதா?

தாராசுரம்: அங்கிருந்து கிளம்ப மனமே இல்லாமல் கிளம்பி, தாராசுரம் (http://en.wikipedia.org/wiki/Airavateswara_temple) நோக்கிப் பயணமானோம். அது கும்பகோணத்துக்கு ஐந்து மைல் தூரத்தில் உள்ளது. வழியெல்லாம் கண் கொள்ளாத அழகில் வெற்றிலை மற்றும் வாழைத்தோட்டங்கள். தாராசுரம் ஒரு un-assuming small town. ஐராவதேஸ்வரர் கோயிலில்தான் ஆச்சரியம் காத்திருக்கிறது. உள்ளே போகும்போது, 'ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றிய' கதையாக இங்கும் கோயிலில் யாருமே இல்லை. கோயிலைப் பற்றிய விபரங்கள் எல்லாம் மேலே கொடுத்துள்ள சுட்டியில் உள்ளது. அந்த சிற்பங்களைப் பார்த்து சற்று நேரம் மூச்சடைந்தது. தூண்கள் நிறைந்த மண்டபத்தில் ஒவ்வொரு தூணிலும் ஒவ்வொரு விதமான மிக நுண்ணிய வேலைப்பாடுள்ள சிற்பங்கள். இந்தக் கல் சிற்பங்களுக்கு சவால் விடும் வகையில் அமைந்தது, எனக்குத் தெரிந்து, ஹம்ப்பியில் உள்ள கிருஷ்ணதேவராயரின் ஹளபேடுதான். "மனுஷன் சும்மா வெண்ணையில செதுக்கறா மாதிரி செதுக்கி இருக்காம்பா! " ஒரு பகுதி மூடினால் பசு, மறு பகுதி மூடினால் யானை, என்பன போன்ற சிற்பங்கள். கருவறை மற்றும் இதர அறைகள் ஜன்னல்கள் எல்லாம், கல்லிலே, டிசைன் டிசைனாக, அனுபவித்து செதுக்கியிருக்கிறார்கள். ஒவ்வொன்றாக அனுபவிக்க ஒரு நாள் போதாது. இந்தக் கோயிலையும் தொல்பொருள் துறை எடுத்திருப்பதால், சுவற்றில், ' I am loves Grijaa... ' , ' தன்மானச் சிங்கம் முனியாண்டி அழைக்கிறார்.. ', ' பொன்வண்டு சோப் ' போன்ற அநாகரீகக் கிறுக்கல்கள் இல்லை.
மேற்கொண்டு விவரிக்காமல், குடும்பத்துடன் போய் இந்த இடங்களைப் பார்க்குமாறு வேண்டுகிறேன். தமிழ்நாட்டில் இருந்து கொண்டு இதெல்லாம் பார்க்காமல் இருப்பது பெரிய குற்றம்.

கடைசியாக.. எதற்கு இந்தப் பயணக் கட்டுரையில் டெர்ரர் ராஜேந்தர் படம் ? முதல் காரணம், சுவாரஸ்யம் காரணமாக இந்தப் பதிவைப் படிக்க வருவீர்கள். இரண்டாவது முக்கிய காரணம். இத்தகைய சிறப்பான கலைகள் வெறுமனே மன்னர்களின் அதிகாரத்தால் மட்டுமே வளர்ந்திருக்காது. குறைந்த அளவுக்காவது மக்களும் கலாச்சார ரீதியாக மிக உயர்ந்து இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சிறந்த செவ்விலக்கியங்களும் தோன்றியிராது. பின்னர் தமிழர்களுக்கு என்ன நேர்ந்தது? டீ. ராஜேந்தர், விஜய்,தல, விஷால், சிம்பு, தனுஷ் போன்ற கோமாளிகளைக் கொண்டாடும் குறைப் பட்டப் பிறவிகளாய்ப் போனது ஏன் என்று யாராவது ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்.

No comments:

Post a Comment