Thursday, December 31, 2020

விட்டுச் செல்லும் பாடங்கள்

 நம்முடைய காலத்தில், நினைவு தெரிந்த வரையில் இது போல ஒரு வருஷத்தைப் பார்த்ததே  இல்லை என்று சொன்னால் அது 2020 ஆகத்தான் இருக்கும்.  ஒரு ஃபேன்சி நம்பராக அமைதியாக ஆரம்பித்து, பத்து வருஷங்களுக்குண்டான அனுபவத்தைத் தந்துவிட்டு நம்மைக் கடந்து செல்கிறது 2020.

மேலை நாடுகள் என்று சொல்லப்படும் மேற்கு நாடுகளே அண்ணாந்து பார்க்கும் அமெரிக்கா எப்படிக் கிழித்துத் தொங்க விடப்பட்டது  என்று மட்டும் இங்கு பார்ப்போம்.

முதலில் இந்த ஆண்டின் மிகப் பெரிய வில்லன் (??)
15 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என்று மார்ச் 2020ல் முதன் முதலாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது.  டிரம்ப், அது ஒரு நோயே இல்லை என்றும், வந்த வழியே மந்திரம் போட்டது போல, சில நாட்களில் காணாமல் போய் விடும் என்றும் பேட்டி அளித்தார்.  நாளாக ஆக தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போனதும் பல மாநிலங்கள் லாக்கடவுன், கடை அடைப்பு, மாஸ்க் அணிய அறிவுறுத்தல் போன்ற அடிப்படை நடவடிக்கைகளை எடுத்தனர். 


ஃபாக்ஸ் நியூஸ் உள்ளிட்ட வலதுசாரி ஊடகங்கள் வழக்கம்போல், இது வெறும்  சளிக்காய்ச்சல்.  டிரம்ப்பின் நற்பெயருக்குக்  (?!) களங்கம் விளைவிக்க எதிர்க்கட்சிகளும் படித்தவர்களும் சேர்ந்து செய்யும் பொய்ப் பிரச்சாரம் என்றும், முகக்கவசம் அணியத் தேவை இல்லை என்றும் உச்சகட்டப் பிரச்சாரம் செய்தனர்.  அதற்கு ஏற்றாற்போல அவர்கள் ஆதரவாளர்கள் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தினர்.  மிஷிகன் மாநிலத்தில் ஆயுதம் ஏந்திய அமைப்புகள் அந்த மாநில கவர்னரையே கடத்திச் சென்று கொலை செய்யத்  திட்டமிடும் அளவுக்கு வந்தனர்.

ஒரு கட்டத்தில் டிரம்புக்கே கொரோனா தோற்று ஏற்பட, உலகிலேயே மிகவும் சிறந்த, வெளியில் யாருக்கும் கிடைக்காத, ஸ்டெம் செல் மருத்துவ சிகிச்சை  அவருக்கு அளிக்கப்பட்டது.  ஆனால் வெளியே வந்த மனிதர் திருந்தினாரா என்றால் இல்லை.. "இதெல்லாம் ஒரு பாதிப்பே இல்லை.  தாராளமாக வெளியே நடமாடுங்கள்" என்று மீண்டும் பொய்ப் பிரச்சாரம்., அவருக்குக் கிடைத்த சிகிச்சை எத்தனைப் பேருக்குக் கிடைக்கும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத ஒரு கூட்டம்.  டிரம்பின் கருத்துக்கு மாறாக அறிவுரைகள் வழங்கிய, நாட்டின் தலைசிறந்த தொற்றுநோய் நிபுணர் டாக்டர் ஃபௌச்சி போன்றவர்களுக்குக் கொலை மிரட்டல்கள் வந்தன.

 
டிசம்பர் 32 நிலவரப்படி USA வில் மட்டும் கொரோனவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 353,000.  இது அதிகாரபூர்வமான எண்ணிக்கை. உண்மையில் இதைவிட மேலும் 20 சதவீதம் அதிகமாக இருக்கவே வாய்ப்பு அதிகம்.  நொறுங்கிய பொருளாதாரம், வேலை இழப்புகள் மற்றும் உடைந்த குடும்பங்கள் என்று collateral damage எல்லாம் மிக அதிகம்.  இந்த சிக்கலான நேரத்தில் இப்படி ஒரு ஜனாதிபதியைப் பெற்றது அமெரிக்காவின் துரதிருஷ்டம் என்றோ, பாவத்தின் விளைவுகள் என்ற சொல்லலாம்.  சாவு எண்ணிக்கை 150,000த் தாண்டியதும் அதை பற்றிய பேச்சையே விட்டு விட்டார் டிரம்ப்.

https://www.washingtonpost.com/business/2020/12/10/pandemic-shoplifting-hunger/

நிறவெறியை எதிர்த்து நாடு தழுவிய போராட்டங்கள் 
இது வழக்கமான நிகழ்வு என்றாலும் மே மாதம் 25ல் நடந்த படுகொலை பெருவாரியான  அமெரிக்கர்களின்  அற உணர்வைத் தட்டி எழுப்பியது என்றே சொல்லலாம். ஜார்ஜ் ஃபிளாய்டு என்னும் கறுப்பின மனிதனின் கழுத்தில் காலை வைத்து அழுத்தி, பட்டப்பகலில் பலரும் பார்க்கும் வகையில் வெள்ளைப் போலீஸ் ஒருவன் கொலை செய்தான்.  இந்த வீடியோ உடனடியாக இன்டர்நெட்டில் பரவி நாடெங்கும் அதிர்ச்சி அலையை உண்டு பண்ணியது.  அதைத் தொடர்ந்து பல மாதங்கள் பேரணிகளும் போராட்டங்களும் நடந்தன.  ஒரு கட்டத்தில் வெள்ளை மாளிகை பங்க்கருக்குள் டிரம்ப் ஓடி ஒளியும் அளவுக்கு நிலைமை வந்தது.
 


  
இயற்கைப் பேரழிவுகள்
வருடந்தோறும் வரும் பெரும் புயல்களும் காட்டுத்தீயும் இம்முறையும் தவறவில்லை.  கலிபோர்னியாவில் இந்த ஆண்டு காட்டுத்தீ எண்ணிக்கை சுமாராக 10,000.  எரிந்த நிலப்பரப்பு சுமாராக 4.5 லட்சம் ஏக்கர்கள்.
புவி வெப்பமாவதை இப்போதாவது அதிகாரத்தில் உள்ளவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?



அதிபர்  தேர்தல்
இந்த வருடம் நடந்த தேர்தல் டிரம்பின் புண்ணியத்தில் மிகவும் வித்தியாசமான முறையில் நடந்தது.  கொரோனா பயத்தால் பெருவாரியான மக்கள் தபால் ஓட்டு போட்டனர்.  அதிக அளவில் வாக்குப் பதிவு நடப்பது எப்போதுமே ரிபப்லிக்கன் கட்சிக்கு பாதகமாக அமையும் என்பதால் வாக்குப் பதிவை மந்தமாகும் முயற்சிகள் எதையும் கைவிடவில்லை.  முக்கியமாக, தபால் வாக்குகளை முடக்கச் செய்த முயற்சிகளை விளக்க ஒரு புத்தகமே போடலாம்.  இருந்தும் மக்கள் பெருவாரியாகத் திரண்டு வந்து வாக்களித்து பைடனைத் தேர்ந்தெடுத்தனர். பல விதங்களில் இது வரலாறு காணாத தேர்தல்.  ஒரு பெண், அதுவும் ஆசிய, கரீபியன் வேர்கள் கொண்டவர் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  ஒரு அதிபரின் தேர்தல் தோல்விக்கு நாடே  தன்னிச்சையாக தெருவில் இறங்கி கொண்டாடி விழாக்கோலம் பூண்டது இதுதான் முதல்முறை.



ஆனால் தன் குணத்துக்கேற்ப, டிரம்ப் இந்த தேதி வரை தன தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை.  தான் வென்றுவிட்டதாகவும், எப்படியும் ஜனவரி 6க்கு முன்னர் தேர்தல் முடிவுகளை மாற்றி விடலாம் என்று விடாமுயற்சியில் இருக்கிறார். அவருடைய கட்சியினரே அமெரிக்க ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் கேலிக்குரிய பொருளாக மாற்றி வருகின்றனர்.





Sunday, April 12, 2020

சதிவலைகளும் புரளிகளும்

https://cdn.theatlantic.com/thumbor/muFAAWuH9hRuRsYo4YoFjbdX4No=/0x177:2000x1302/720x405/filters:format(png)/media/img/mt/2018/03/fakenews1-1/original.png
Conspiracy Theory: இயற்கையாகவோ அல்லது வேறு காரணத்தாலோ நடக்கும் நிகழ்ச்சிகளுக்குப்பின் "பெரும் சதிவலை" பின்னப்பட்டிருப்பதாக மக்களை நம்ப வைப்பது.  உதாரணமாக , "9/11 ஒரு உள்ளடி வேலை",  "புல்வாமா தாக்குதல் இந்திய அரசின் சதி ", என்பது போல.   இந்த 'சதி-வலை' தியரிகள்  அரசாங்கங்கள் உருவாகத் தொடங்கிய காலத்தில் இருந்தே உள்ளது.  இப்போதைய தொழில்நுட்பம் இதை ஒரு பெரும் அபாயகரமான, லாபகரமான தொழிலாகவே மாற்றி இருக்கிறது.  இடது-வலது பேதமில்லாத தொழில்.  இந்த சதிவலை-கதைகளை ஹார்வர்ட், IIT, MIT, ஸ்டான்போர்ட் போன்ற இடங்களில் பெரிய படிப்பு படித்தவர்களும் எப்படி நம்புகிறார்கள் ?   சில மாதங்களுக்கு முன்,  இந்தப் பொய்ச்செய்திகளுக்கு (fake news ) மக்கள் எப்படி விழுகிறார்கள் என்று 'சயன்டிபிக் அமெரிக்கா'   விரிவான ஆராய்ச்சி ஒன்றை நடத்தியது . 

Tuesday, May 21, 2019

யார் தந்தார் இந்த அரியாசனம் ?

பொதுவாகவே குஜராத்திகள் வியாபாரத்தில் சிறந்தவர்கள். பெரிய முதலீடுகள் அங்கு குவிந்து முதல்வர் மோடிக்கு நல்ல பெயர் வாங்கித் தந்தது.  பத்திரிகைகளும் அவருக்கு ஒரு பெரிய இமேஜை உருவாக்கி வைத்தது.  சிலிக்கன் வேலி பணக்காரர்கள் வித்தியாசமானவர்கள்.  ஹோட்டல் சர்வருக்கான டிப்ஸை, ஐபோன் ஆப் உபயோகித்துப் பிரித்துக் கொள்வார்கள், ஆனால் இந்தியாவிலிருந்து ஏதாவது சாமியார் வந்தால் கணக்குப் பார்க்காமல் பணத்தை அள்ளி இறைப்பார்கள்.  மோடி ஒரு தீவிர இந்துக் காவலர் என்று அவர்களுடைய புத்தியில் ஏற்றப்பட்டது. குஜராத்தில் அவருடைய வீர சாகஸங்களைப் பார்த்தவர்கள், அவரை எப்படியும் மேலுக்கு கொண்டு வர தம்முடைய பங்கும் பெருமளவு  இருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.

Saturday, April 6, 2019

யட்சப்ரஸ்னம்

காட்டில் நீர் கொண்டு வரச் சென்ற தம்பியர் நால்வரும் திரும்பி வராதது கண்டு கவலை கொண்டான் தர்மன்.
பலவாறாக சிந்தித்தபடியாக குளத்தை அடைந்தான். அங்கு இறந்து கிடந்த நால்வரையும் கண்டான்.  வனவாசம் முடியும் சமயத்தில் இப்படி ஒரு சோதனையா?
யார் இப்படி செய்திருப்பார்கள்? அருகில் சென்று பார்த்தான். உடலில் காயம் ஏதுமில்லை. உறங்குபவர்கள் போல் படுத்திருந்தனர்.
ஒருவேளை இது துரியோதனன் சதியாக இருக்கும் என எண்ணியபடி பொய்கையை கண்டான். தம்பிகளைப் பிறகு பார்க்கலாம், முதலில் தாக்கத்தை தணிக்கலாம் என்று பொய்கையில் இறங்கினான்.
அப்போது ஒரு அசரீரி,  "என் பேச்சைக் கேளாமல் உன் தம்பிகள் தண்ணீர் பருகினார்கள். நீயும் அப்படி செய்யாதே தர்மா.என்கேள்விகளுக்கு பதில் தந்துவிட்டு பிறகு குடி. இது என் குளம்" என்றது.
தர்மனும் தாகத்தை பொருட்படுத்தாமல் சரி கேள் என்றான்.  அசரீரி வரிசையாகக்  கேள்விக்கணைகளைத் தொடுத்தது.

Saturday, March 30, 2019

செய்திகளை முந்தித் தருவது

எத்தனை வேலை இருந்தாலும் தினமும் எதிரெதிர் செய்தித் தாள்களை மொழிக்கு இரண்டு வீதம் வேகமாகப் படித்து விடுவது வழக்கம். இதனால் ஏதும் பயனுண்டா என்று கேட்டால் , நிச்சயம் இல்லை.  யோசித்துப் பார்த்தால் நியூஸ் பேப்பர் படிக்கும் இந்தப் பழக்கம் நான் மூன்றாம் வகுப்புப் படிக்கும் போது ஆரம்பித்தது.  சென்னை சைதாப்பேட்டையில் என் பாட்டி வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தேன்.  அங்கிருக்கும் திரௌபதி அம்மன் கோயில்தான் எங்களுக்கு விளையாடுமிடம்.   மாலையில் யாரும் வரமாட்டார்கள். அதன் பக்கத்திலேயே என் பெரியப்பாக்களில் ஒருவர் ஒரு சிறிய லென்டிங் லைப்ரரி நடத்தி வந்தார். சிகரெட் புகைப்பதற்கோ எதற்கோ போவதற்காக என்னை தினமும் சிறிது நேரம் அந்த லைப்ரரியில் காவலுக்கு உட்கார வைத்து விட்டுப் போவார். அப்போது அங்கிருக்கும் நியூஸ் பேப்பர் மற்றும் காமிக்ஸ் புத்தகங்களைப் படிப்பேன். 

Saturday, December 31, 2016

தமன்னாவும் தமிழ்நாடும்

1290ல் டில்லியில் பதவியைப் பிடித்த 'ஜலாலுதீன் கில்ஜி' இரக்க குணம் கொண்ட மென்மையான சுல்தான்.  'நான் ஆணையிட்டால்,  அது நடந்து விட்டால், இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்.  உடல் உழைக்கச் சொல்வேன், அதில் பிழைக்கச் சொல்வேன், அவர் உரிமைப் பொருள்களைத் தொட மாடடேன்" என்று ஆட்சி புரிந்து வந்தவர்.  எளிதில் உணர்ச்சி வசப்படும் இவர், தம் சகோதரன் மகனும், பின்னாளில் மருமகனுமான 'அலாவுதீன்  கில்ஜி' யை குழந்தையிலிருந்து வளர்த்து வந்தவர்.  பக்கத்து நாடுகளின் மீது அடிக்கடி படையெடுத்துச் சென்று, சூறையாடிய செல்வங்களை சுல்தானின் காலடியில் குவித்தான் அலாவுதீன்.  "வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும், அதை வாங்கித் தந்த பெருமை  எல்லாம் உன்னைச்  சேரும்" என்று புளங்காகிதம் அடைந்தார் ஜலாலுதீன்.  இந்த நம்பிக்கையினால், சுல்தானின் அனுமதி இல்லாமலேயே தனிப்படை வைத்துக் கொண்டு மேலும் பல நாடுகளின் மீது படையெடுத்து அலாவுதீன் செல்வத்தையும் மேலும் படையையும் குவித்துக்கொண்டான்.

Tuesday, October 25, 2016

எந்த நாளும் திருவிழா - பாகம் 3 (அல்லது ) 2016 - Are You Not Entertained ?


நவம்பர் 8 எப்போது வரும், கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கண்டு வரும் இந்தக் கொடுங்கனவு எப்போது முடியும் என்று தேசமே காத்திருக்கிறது.  எப்படிப் பார்த்தாலும் அமெரிக்க வரலாற்றில் இடம் பிடிக்கப் போகும் தேர்தல் இது.  முதன்முறையாக ஒரு பெண் வேட்பாளர் அதிபர் பதவிக்குப் போட்டியிடும் தேர்தல் இது.   பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளிலேயே பெண்கள் பிரதமர்களாக இருந்திருக்கிறார்கள்.  மிகவும் முன்னேறிய நாட்டில் இப்போதுதான் சாத்தியமாகியுள்ளது.   சக்தி வாய்ந்த செனேட்டின்  உறுப்பினர்களில் 5ல் ஒரு பங்கு மட்டுமே பெண்கள்.  அரசியல் அதிகாரம் என்பது இங்கு வெள்ளை ஆண்களின் ஏக போக உரிமையாகவே இருந்து வருகிறது.  பரவலாகி வரும் கல்வி, பிறநாட்டிலிருந்து வந்த குடியேறிகள், தொழில் நுட்பம், பொருளாதாரம்,  ஆகிய காரணிகளால் அந்தக் கண்ணாடித் தளம் விரிசல் விட ஆரம்பித்துள்ளது.

Tuesday, June 28, 2016

எந்த நாளும் திருவிழா - பாகம் 2

சென்ற பகுதியில் முதல்நிலை வேட்பாளர் தேர்தல் முறையைப் பார்த்தோம்.   எளிமையாகத் தெரிந்தாலும் அது உள்ளபடியே மிகவும் குழப்பமான, அர்த்தமில்லாத முறை.  1968 வாக்கில்தான் அந்த முறை வந்தது. வருடம் முழுதும் நடக்கும் தேர்தலினால் டி.விக்களுக்கு எக்கச்சக்கமான விளம்பர வருமானம்.  ஒரு பரபரப்பை ஏற்படுத்தி, அந்த சூடு தணியாமல் பார்த்துக்கொண்டால்தான் டி.விக்களுக்கு நல்ல வருமானம்.  இது போக, ரேடியோ, இன்டர்நெட் விளம்பரம்,சம்பளத்துக்கு வேலை செய்யும் ஆலோசகர்கள்,  பயணச் செலவு, கூட்டத்திற்கான செலவு என்று பெரிய பட்ஜெட் வேண்டும்.  ஒரு ஜனாதிபதி வேட்பாளர் சுமாராக 1 பில்லியன் டாலர் செலவழிக்க வேண்டும்.  அதற்கு நிதி திரட்ட வேண்டும்.

Tuesday, June 21, 2016

எந்த நாளும் திருவிழா - பாகம் 1

 
போன வாரம் பாண்டியில் உறவினர்களோடு பேசியபோது,  "என்னப்பா இது அநியாயமா இருக்கு.  நாராயணசாமி எலெக்ஷன்ல நிக்காம சி.எம். ஆயிட்டாரு.  எங்கெல்லாம் எப்பதான் அமேரிக்கா மாதிரி வரப்போவுதோ தெரியல". என்றனர்.  "சரி, இங்க எப்படி எலக்ஷன் நடக்குது தெரியுமா?" என்றேன்.  "அவ்வளவா தெரியாது" என்று பதில் வந்தது.   அவர்களுக்காகவும், மற்ற நண்பர்களுக்காகவும் உலகின் இரண்டாவது பெரிய மக்களாட்சியின் தேர்தல் கூத்துகளை இங்கு பதிவேற்றம் செய்கிறேன்

Friday, May 20, 2016

மகேசன் தீர்ப்பு எனும் மாம்பழம்

ஐந்தாண்டுகளாக பக்கவாதம் வந்து படுத்துக்கொண்டிருந்த அரசாங்கத்தையே மறுபடியும் மக்கள் எப்படி தேர்ந்தெடுத்தார்கள் என்பது,  டாக்டரேட் செய்யக்கூடிய ஒரு சப்ஜெக்ட்.  வசூலைத் தவிர வேறு எந்த வகையிலும் செயல்பாடு இல்லை.  சின்னச்சின்ன நியாயமான போராட்டங்களைக் கூட போலிசை வைத்து அடக்குவது,  பத்திரிக்கைகளுக்கு அவதூறு வழக்குகள் மூலம் வாய்ப் பூட்டு போடுவது,  எந்த அமைப்பையும் நம்பாமல், ஒய்வு பெற்ற சில குறிப்பிட்ட அதிகாரிகளை மட்டுமே வைத்துக்கொண்டு ஆட்சி செய்வது, என்று  ஜனநாயக அமைப்பே கேலிக்கூத்தாக மாறியது.  

Monday, March 28, 2016

மெட்ராஸ் ஷேத்ரே



  
Disclaimer: எழுத்தாளர் ஜெயமோகனின் நெல்லை ஜங்க்ஷன் கீதையை சென்னை எக்மோருக்கு மாற்றியுள்ளேன்...
"ஹல்லோ,  துலுக்கானமா?  கிண்டி கெஜாவ எக்மோர் டேசன் கேட்டாண்ட ஸ்கெட்ச் போட்டுத் தூக்கறன்னு அட்வான்ஸ் வாங்கிக்னு 'கொக்கி அர்ச்சுனனும்'  'கோனாரு கோவாலும்' போனானுங்க.  இன்னாடா பண்றானுங்க இவ்வ்வ்ளோ நேரம்?" என்று பேட்டை பழைய வஸ்தாது, 'நொள்ளக்கண்ணு கபாலி', தன் மச்சானிடம் செல்போனில் கேட்டான்.
பழக்கப்பட்ட பெட்டிக்கடை பின்னால் மறைந்து நின்று கொண்டு செல்போனில் மெல்லிய குரலில் துலுக்காணம்: "தோ, மாமு,  நாகர்கோயிலு எஸ்ப்ரஸ்ல இருந்து கெஜாவும், மாமங்காரன் கன்ஸாமியும், கூட கொஞ்சம்பேரும் செட்டா வர்றானுங்கபா.  கோனாரு இப்ப கொக்கியக் கூட்டிக்னு டேசன் நடு சென்டர்ல நிறுத்தராம்பா.  அப்ப கோவாலு  சொன்னத நான் உன்னாண்ட சொல்றேன்.

Sunday, October 12, 2014

சுவரொட்டித் தமிழன், தினமணி, மற்றும் சில..


இணையம் மற்றும் காட்சி ஊடகங்கள் பெருகி விட்ட இந்தக் காலத்திலும் புராதனமான சுவரொட்டிப் பிரச்சாரத்தை எம் தமிழர் விடவில்லை.  கல்யாணம், திடீர்ப் பிரமுகர்கள் வீட்டு மஞ்சள் நீராட்டு விழாவோ அல்லது அவர்தம் இறுதி ஊர்வலமோ, எதுகை மோனையும் எழுத்துப் பிழையுமாக சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன.  எதிர் கோஷ்டிக்கு சவால் விட வேண்டுமா?  ஒரு மணி நேரத்தில் எதிர்  சுவரொட்டித் தயாராகி. சம்பத்தப்பட்டவர் பார்வையில் படும்படி ஒட்டப்படும்.  ப்ளக்ஸ் பலகை விளம்பரங்களில் முதலீடு செய்வது அவர்தம் அந்தஸ்தை அன்போடு வெளிப்படுத்தும் செயலாகும்.  
இன்ன இடத்தில்தான் ஒட்டுவது என்றில்லாமல், பசு மாட்டின் மீது ஓட்டுவது, பெயர்ப்பலகையில் ஒட்டுவது என்பதெல்லாம் பரிணாம வளர்ச்சி, அல்லது அப்போது அருந்திய டாஸ்மாக் சரக்கின் வீரியம் என்பதன் வெளிப்பாடே.

Tuesday, March 20, 2012

கொடுத்த காசுக்கு மேல் கூவும் தினமலர்


Dr.உதயகுமார் ஒருங்கிணைப்பில் கூடங்குளம் போராட்டம் தொடங்கிய நாள் முதலாக தினமலர் நாளிதழைப் பார்த்தவர்கள் ஒன்று கவனித்திருக்கலாம்.   எவ்வளவு வீச்சுடன் பொய்ப் பிரச்சாரம் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு தனது முதல் பக்கத்தில் பொய் பிரச்சாரம் செய்து வந்தது.  அதற்குக் கருத்து சொல்ல அத்தனை அரை வேக்காடுகள்.  ஏறக்குறைய அரசாங்கத்தின் ஊது குழலை விட மோசமாகவே 'செய்தி'களை வெளியிட்டு வருகிறது.  போராடும் எளிய மக்களை 'கும்பல்' என்றும், 'கூலிகள்' என்றும்,  'எப்போது கைது' என்றும் நாள் தவறாது சிறப்பு செய்திகள்.  தம் எதிர்காலத்துக்காகவும் சந்ததியினருக்காகவும் போராடும் மக்களைத் தீவிரவாதிகளை விடக் கேவலமாகச் சித்தரிப்பதை நடுநிலை மக்கள் எப்படி ஜீரணிக்க முடியும்.  செய்திகளை வெளியிடாமல் கருத்துகளையே செய்திகளாக வெளியிடும் தினமலருக்கும் நக்கீரனுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது ?  ஐந்தாண்டுகளுக்கு முன்னர் தினகரன் நாளிதழ் ஒரு ரூபாய்க்குக் கொடுத்தபோதும், ஜெயேந்திரர் கைதின்போதும் தினமலர் வாசித்தவர்களுக்கு அதன் சாயம் தெரியும்.

Saturday, November 19, 2011

சிரியாவா, சவூதியா ? - கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்

84 வயது பெண்மணியின் மீது கண்-எரிச்சல் மருந்தைப் பீய்ச்சும் வீரர்:











   
   
   
   
   




































Sunday, October 30, 2011

கடலுக்கப்பால் காந்தியப் போராட்டம் - வரலாற்றுத் தருணம்


எகிப்தில் துவங்கிய அரபு வசந்தத்தின் பாதிப்பில் இந்த செப்டம்பர் இரண்டாம் வாரம் நியூயார்க் நகரில் 'வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்புப் போராட்டம்'  சில நூறு பேர்களுடன் தொடங்கியது.   பொதுப் பிரச்னைக்காக அமெரிக்க மக்கள் சாதாரணமாகப் போராட்டங்கள் எதுவும் நடத்துவதில்லை.  சனி-ஞாயிறு கிழமைகளில் மதியம் ஆரம்பித்து இரவு வரை தொலைக்காட்சியில் விளையாட்டுப் போட்டிகள் காட்டி மக்களைக் காயடித்து வைத்திருப்பார்கள்.   வம்பு வழக்குகளில் சிக்கினால் கடைசி வரை எழுந்திருக்கவே முடியாது என்ற பயமும் ஒரு காரணம்.   ரீகன் காலம் தொடங்கி கட்டுப்பாடுகள் நீங்கிய பகாசுர நிதி நிறுவனங்களின் கார்ப்பரேட் மெகா ஊழல்கள் படிப்பவர் கண்களைப் பிதுக்க வைக்கும்.  மக்களின் வாழ்வாதாரங்களை இவர்கள் சுரண்டிய விதம் ஹாலிவுட் படங்களை மிஞ்சிய சாகசங்கள்.  இவர்கள் போடும் எலும்புத் துண்டுகளுக்காக அனைத்து சட்டங்களை இயற்றியும் வளைத்தும் செநேட்டர்களும் ஜட்ஜுகளும் பணிந்து கிடக்கிறார்கள் .  தேர்ந்த கணித விற்பன்னர்களையும் பிசிக்ஸ் நிபுணர்களையும் வைத்து இவர்கள் ஆடிய சூதாட்டங்கள் மனிதக் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவை.  கடனில் சிக்கி வீடிழந்தவர்களும், உற்பத்தியை வேறு நாடுகளுக்குக் கொண்டு சென்றதால் வேலை இழந்தவர்களும் இத்தனை நாட்கள் கார்ப்பரேட்-அரசாங்க-நீதிமன்ற கூட்டுச் சதிக்கு ஈடு கொடுக்க முடியாமல் உள்ளுக்குள் குமுறியபடியே விதியை நொந்தபடியே நாட்களைத் தள்ளி வந்தார்கள்.  ஐரோப்பிய நாடுகளைப் போலெல்லாம் அமெரிக்காவில் ஒருநாளும் மக்கள் வெளியே வந்து போராட மாட்டார்கள் என்றே பலரும் நம்பி வந்தோம்.  ஏனென்றால் நிஜத்தில் அமெரிக்கர்கள் மிகவும் பயந்தவர்கள்.

Tuesday, September 6, 2011

சேதம் - நாவல் - கபாலிக்குத் தபால்


ஒலகத்துலேயே பெரிய அறிவாளியான அண்ணாத்தை கபாலிக்கு, சிஸ்யன் துலுக்காணத்தோட தபால்.
வெசயம் இன்னான்னா, நேத்து நம்ம மஜீத் பாயோட பழைய பேப்பர் கடையில ஓரமா நின்னுக்குனு பலான பலான புஸ்தகத்தலாம் நைசா பொரட்டிப் பாத்துக்கனு இருக்க சொல்ல, ஒம்பேரு போட்டு, 'சேதம்' அப்டீன்னு அதுங்களுக்கு நடுவுல ஒரு புஸ்தகம்.  பாயாண்ட போயி, 'இன்ன பாய், நம்ம குருநாதரோட பொஸ்தகத்த ஞாபகமில்லாம பலான பொஸ்தகத்துக்கு நடுவுல மறந்து போயி வெச்சிட்டியே' அப்டீன்னு சொன்னேன். அதுக்கு பாயி, 'போடா பொறம்போக்கு.  கபாலி போட்ட 'சேதம்' பொஸ்தகத்த அங்க வெக்கறதக்குக் கூடக் கூச்சமா இருக்குதுடா' ன்றாரு.  இப்பதான் எல்லாமே நெனப்புக்கு வருது.

Wednesday, August 24, 2011

"I am Sam" - தெய்வத் திருமகள் - ஏழு வித்தியாசங்கள்

எங்கள் வீட்டில் எல்லோருக்கும் Dakota Fanning என்ற குழந்தை நட்சத்திரத்தைப் பிடிக்கும் என்பதால் அவள் நடித்த "I am Sam" என்ற 2001 -ல் வெளியான ஒரு பழைய படத்தைப் போன வாரம் பார்த்தோம்.  அதற்கும், சமீபத்தில் வெளி வந்த புகழ் பெற்ற "தெய்வத் திருமகள்" படத்துக்கும் கீழ்க்கண்ட ஏழு வித்தியாசங்களாவது கண்டு பிடித்தோம்.  நல்ல  வேளை,  தமிழ்ப்படத்தின் மானத்தைக் காப்பாற்றி விட்டார் இயக்குனர். 






 ஒரிஜினல்:  ஹீரோ, ஸ்டார் பக்ஸ் காப்பிக்கடையில் மேஜை சுத்தம் செய்பவன்
காப்பி:  தமிழ்ப்படத்தில் ஹீரோ, சாக்லேட் தொழிற்சாலையில் வேலை செய்பவன்.

ஒரிஜினல்: பெண்ணின் தாய் ஒரு 'homeless ' அனாதைப் பெண்.
காப்பி: தமிழ் செண்டிமெண்டுக்கு அனாதை ஒத்து வராது, அதனால் ஒரு பணக்கார வீட்டுப் பெண்.

ஒரிஜினல்:  குழந்தையின் தாய் பஸ் நிறுத்தத்தில் கூட்டத்தில் கலந்து எஸ்கேப் ஆகிறாள்.
காப்பி: தமிழ் செண்டிமெண்டுக்கு இந்தத் தாலி, தாய்ப்பாசத் தடைகள் இருப்பதால்,  குழந்தையின் தாய் பிள்ளைப்பேற்றின் போது இறந்து போகிறாள்.

ஒரிஜினல்: தனியாகக் காமெடி ட்ராக் இல்லை
காப்பி:  தமிழ்ப்படத்தில் அவசியம் இருந்தே ஆகவேண்டும்

ஒரிஜினல்: பெண் வக்கீல் மன வளர்ச்சி குன்றிய கதாநாயகனைக் காதலிப்பதில்லை
காப்பி: தமிழ்ப்பட விதிகளின் படி ஒரு கனவுப் பாட்டாவது இருந்தே ஆகவேண்டும்.  இந்த விதியை இயக்குனர் மீறவில்லை.

ஒரிஜினல்: குழந்தையை வளர்க்கும் foster பெற்றோர்கள், அவளைத் தகப்பனிடம் ஒப்படைத்து விட்டுத் தம் மேற்பார்வையில் வளர்க்க சம்மதிக்கிறார்கள்.
காப்பி: ரொம்ப சிந்தனைக்குப் பிறகு தகப்பன்,   இறந்து போன தாயின் அழகான தங்கையிடம் ஒப்படைத்து வளர்க்க சொல்கிறான்.

ஒரிஜினல்: ஹீரோவுக்கு அவார்ட் கிடைக்கவில்லை
காப்பி: ஹீரோவுக்கு தேசிய விருது நிச்சயம். மேலும் திருட்டு VCD பற்றி வெட்கமில்லாமல் அங்கலாய்ப்பார்கள்.

மற்றபடி, ஒரிஜினலில் ஆங்கிலம் பேசுகிறார்கள், காப்பியில் தமிழ்.

Wednesday, August 17, 2011

வேதபுரத்து வியாபாரிகள்

இந்த ஜூலை கோடை விடுமுறையில் தென் தமிழகத்தின் திற்பரப்பு, பத்மநாபபுரம், குத்தாலம் உள்ளிட்ட, பரவச அனுபவம் அளித்த இடங்களுக்கு முதலில் சென்றோம். ஒரு மணி நேரத்துக்கு மேல் குளித்தாலும் வெளியே வர மறுத்த என் 7 வயது மகளை மிகவும் சிரமப்பட்டுத்தான் திற்பரப்பு அருவியில் இருந்து வெளியே வர வைத்தோம். குத்தாலம் ஐந்தருவியில் தலையை நனைக்க மிகவும் சிரமப்பட்டோம். ஒரு பெரிய கும்பல் எல்லா இடங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டு பிறரை நெருங்கவே விடவில்லை. பிறகு மெயின் அருவிக்குச் சென்று ஆசை தீரக் குளித்து வந்தோம். எங்கள் அதிர்ஷ்டம், சாரலுடன் நல்ல சீசன் போலிருந்தது. நாற்பதாண்டு காலத்தில் இப்போதுதான் முதல் முறையாக இங்கெல்லாம் செல்ல முடிந்திருக்கிறது என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம்.

எல்லா அருவிகளிலும் நான் பார்த்த மகிழ்ச்சி தந்த விஷயம், அங்கு குளித்தவர்களிலே என்னுடைய தொந்திதான் மிகச் சிறியதாக இருந்தது. என்ன ஆயிற்று தமிழர்களுக்கு?

நெல்லையப்பர் கோயில் சென்றால், கத்தியைக் காட்டாத குறையாக, அர்ச்சகர்கள் எல்லாம் தட்டை முகத்தில் மோதுவது போல நீட்டி, 'தட்சணை போடுங்கள்' என்று மிரட்டுகிறார்கள். திருச்செந்தூரில் இன்னும் மோசம். தரகு பிடிப்பவர்கள் போல அர்ச்சகர்கள் 'ஸ்பெஷல் தரிசனத்துக்கு' ஆள் பிடிப்பதில் பிசியாக இருக்கிறார்கள். இந்த அனுபவமெல்லாம் அவர்களுக்கு வேறு சில தொழில்களுக்கும் பயன்படலாம். மற்றபடி, முன்னைப்போலவே நெல்லை நகரம் (எம் தமிழர் பழக்கத்துக்கு விரோதமாக) குப்பைகள் இன்றித் தூய்மையாக இருக்கின்றது.

Saturday, March 19, 2011

வித்தியாசமான சினிமாப் படம் எடுப்பது எப்படி


இரண்டு வாரங்களுக்கு முன்னர், என்னுடைய நண்பர் ஒருவர், மிகவும் சிறப்பான, வித்தியாசமான ஓர் தமிழ்ப்படம் வந்திருப்பதாகவும், அதை நான அவசியம் பார்க்க வேண்டும் என்றும் சிபாரிசு செய்தார்.  எப்போதுமே என்னை வம்பில் மாட்டி விடுவது அவரது பொழுது போக்கு என்பதையும் மறந்து அந்தப் படத்தைப் பார்த்தேன்.  அந்த பாதிப்பில் எழுதப்படுவதுதான் இந்த கோனார் நோட்ஸ்.  இந்தக் கையேடு,  அசிஸ்டன்ட் டைரக்டர்களுக்கு உதவும் நோக்கில் எழுப்படுகிறது.

முதலில் பார்க்க வேண்டியது பட்ஜெட். பெரிய அளவில் நிதியுதவி கிடைத்தால், வெளிநாடு லொக்கேஷன்கள் மற்றும் நூறு ரவுடிகள் என்று திட்டம் போடலாம். ஆனால், வித்தியாசமானப் படம் எடுக்க வருபவரிடம் அவ்வளவாகப் பணம் இருக்காது என்பதால் மிகவும் பின் தங்கிய கிராமத்தை லோக்கேஷனாகவும், கதாநாயகனையே ரவுடியாக மாற்றுவதும் சாலச் சிறந்தது.

Sunday, January 9, 2011

என்ன.. பெய்கிறதா மழை வெளியே ?

நான்கு மாதங்களாகக் கடுமையான பணிச்சுமை.  வெளியே மழை பெய்கிறதா என்று கூடத் தெரியாமல் தினமும் முப்பது மணி நேரம் வேலை.  கணி மொழியை நிரடி நிரடிப் பூச்சிப் பிடித்துக் கொண்டிருந்தேன். புத்தாண்டு தொடங்கி இரண்டு நாட்கள் ரிலாக்ஸ் செய்ய பழைய உள்ளூர் வெளியூர் செய்திகளை வாசித்தால், அங்கும் கனிமொழி-நிரா ரடியா செய்திகள்.  உலகமே 4 -G பயன்படுத்த ஆரம்பித்து விட்டது, நீங்கள் இப்போதுதான் 2 -G யில் ஊழல் செய்கிறீர்களா?  சீக்கிரம் வந்து 4 -G ' யிலும் உங்க தெறமயக் காட்டுங்க.  இதிலே நோக்க வேண்டிய முக்கியமான ஒரு விஷயம்.  அனைத்து மீடியாக்களும், அரசியல் வியாதிகளும், சேவகர்களும், பரபரப்பு டீ.வீ.  மற்றும் 'சோ' போன்ற 'சிந்தனை'யாளர்களும்,   ராசாவையும் கனிமொழியையும் மட்டுமே தாக்குகிறார்கள், ஆனால் இந்த ஊழலைத்தூண்டி, அதனால் பலன் அடைந்த ரத்தன் டாட்டாவைப் பற்றியோ, மும்பை அம்பானி பிரதர்ஸ் பற்றியோ மறந்தும் வாயைத் திறக்க மாட்டேன் என்கிறார்கள்.  இந்தியா உண்மையிலேயே இந்த விஷயத்தில் (முதலாளிகளின் காலில் விழுவது ) அமெரிக்காவை மிஞ்சி விட்டது.  அமெரிக்கா, வெல்கம் டு இந்தியா.  சமீபத்தில் 'நோபலுக்கு மேல்' எழுத்தாளர் & கம்பெனி புத்தக வெளியீட்டைப் பப்ளிசிட்டி பண்ணிய விதம் அட்டகாசமாக இருந்தது. தொடர் தோல்விப் படங்களால் நொந்து போயிருந்த இளைய தளபதி விஜய்,  இதைப் பார்த்து அவர்களிடம் தம் அடுத்த படத்தின் விளம்பர கான்ட்டிராக்டைக் கொடுத்திருக்கிறாராம்.

வெளியூர் சேதி இப்படி இருக்கையில், இங்கே ஒரு குறுஞ்செய்தி.  அனைத்துத் தென் மாகாணங்களிலும் 'மூளை குன்றியோர்' காப்பகங்களில் எல்லோரையும் டிஸ்சார்ஜ் செய்து விட்டார்கள்.  கேட்டால், நவம்பர்-2010 தேர்தலில் அவர்கள் அனைவரும் ரிபப்ளிக்கன் கட்சி சார்பில் வெற்றி பெற்று விட்டார்களாம்.  இனிமேல் இந்த ரிபப்ளிக்கன் cynical bas ****s நடத்தும் கூத்துகளைப் பார்த்தால் பகுத்தறிவுள்ள எவருக்கும் ரத்தக்கொதிப்பு, மண்டையிடி உள்ளிட்ட உடல் உபாதைகள் கியாரன்ட்டியாக வரும்.  போதாதற்கு நந்தவனம் போல் இருந்த என்னுடைய ஆபீசை, இந்த வாரத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்றி விட்டார்கள். புதிய இடம், பாண்டிச்சேரி பழைய பஸ் ஸ்டாண்டில் இருக்கும் நியூட்டன் தியேட்டர் போல இருக்கிறது.  இன்னும் இன்ன பிற காரணங்களால் லோக்கல் அரசியல் செய்திகள் எதையும் ஆறு மாதங்களுக்குப் பார்ப்பதில்லை என்று முடிவு செய்து விட்டேன்.
அடுத்து வரும் பதிவுகளில் கணினி உள்கட்டமைப்புப் பற்றி ஏதாவது கிறுக்கலாம், அது எனக்காவது ஒரு விதத்தில் உதவியாக இருக்கும்.

அதற்கு முன், ரிலாக்சுக்காக ஒரு சுவையான தகவல்.
"பழைய இலக்கியங்களில் இருந்து கருத்துக்களை அப்படியே எடுத்துப் பாடல்களில் உபயோகப் படுத்துகிறீர்களே" என்று கண்ணதாசனிடம் கேட்க, "தாத்தாவின் சட்டைப் பையிலிருந்து பேரப்பிள்ளைகள் செலவுக்குச் சில்லறை எடுப்பதில்லையா?  எனக்குப் பழைய இலக்கியங்கள் தாத்தாவின் சட்டைப் பை மாதிரி.  உரிமையுடன் தேவைப்படும்போது எடுத்துக் கொள்கிறேன்" என்றார்.  அப்படி அவர் ஒரு பீஸ் எடுத்துப் புகுத்திய பாடலைப் பார்ப்போம்.
கீழ்கண்டது வள்ளல் சீதக்காதியைப் பற்றிப் படிக்காசுப் புலவர் பாடியது.

காய்ந்து சிவந்தது சூரிய காந்தி, கலவியிலே
தோய்ந்து சிவந்தது மின்னார் நெடுங்கண், தொலைவில்பன்னூல்
ஆய்ந்து சிவந்தது பாவாணர் நெஞ்சம், அனுதினமும்
ஈந்து சிவந்தது மால்சீதக் காதி இருகரமே.   -- படிக்காசுப் புலவர்

இந்தப் பாடலைக் 'கர்ணன்' படத்தில் வரும் மிகப் பிரபலமான பாடலில் கையாண்ட விதம் இதோ.